Skip to main content

குத்தகை செலுத்தாத பேரூராட்சி:சிற்றருவியைக் கைப்பற்றிய வனத்துறை

Published on 04/04/2019 | Edited on 04/04/2019

38 ஆண்டுகளுக்குப் பின்னர் குற்றாலம் சிற்றருவி வனத்துறையின் கட்டுப்பாட்டுக்குள் முழுமையாக வந்தது.

 

நெல்லை மாவட்டத்தில்  புகழ்பெற்ற சுற்றுலாத்தலமான குற்றாலத்தில் உள்ள ஏழு அருவிகளில் சிற்றருவியும் ஒன்று.  அடர்ந்த வனப்பகுதியில் அமைந்துள்ள இந்த அருவியில் வழியாகத்தான் செண்பகாதேவி அருவிக்கும் செல்ல முடியும்.

 

குற்றால அருவிகளில் நீராட கட்டணம் எதுவும் கிடையாது.  ஆனால் சிற்றருவியில் மட்டும் இரண்டு ரூபாய் கட்டணம்  வசூலிக்கப்பட்டு வந்தது.

 

வனத்துறைக்கு சொந்தமான இந்த அருவி 1981 ஆம் ஆண்டு  நீண்ட கால குத்தகை அடிப்படையில் குற்றாலம் பேரூராட்சி நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டது.

 

kutrlam falls came under forest department

 

இதன் பிறகு இந்த அருவியில் குளிப்பதற்கு கட்டணம் நிர்ணயித்து அதன் மூலம் பேரூராட்சி நிர்வாகம் வருமானம் ஈட்டி வந்தது. மேலும் தொகை கட்டணத்தை பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை செலுத்தாததாலும் குத்தகையை நீட்டிப்பு செய்யாததாலும் வனத்துறை இந்த அருவியை தனது கட்டுப்பாட்டில் எடுத்துக் கொள்ள முடிவு செய்தது.

 

இந்த நிலையில் இந்த குத்தகை காலம் முடிவடைந்ததையொட்டி பேரூராட்சி நிர்வாகத்திற்கு அருவியை தங்கள் வசம் ஒப்படைக்க வேண்டும் என கடந்த நவம்பர் மாதம் வனத்துறை நோட்டீஸ் அனுப்பியிருந்தது.

 

இதனிடையே சிற்றருவியில் கட்டணம் வசூலிக்கும் உரிமை குத்தகைக்கு விடப்பட்டு இருந்தது. அந்த குத்தகையை எடுத்தவர்களுக்கு இந்த ஆண்டு மார்ச் 31 வரை அனுமதி அளிக்கப்பட்டிருந்தது. கடந்த நவம்பர் மாதமே அருவியை ஒப்படைக்க வேண்டும் என்று வனத்துறை கோரியிருந்த நிலையில் குத்தகைதாரர்கள் தென்காசி சார்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து மார்ச் 31ம் தேதி வரை தங்களுக்கு  கட்டணம் வசூலிக்கும் உரிமை நிலைநாட்டப்பட வேண்டும் என்று கோரியிருந்தனர்.  இதையடுத்து அவர்களுக்கு மார்ச் 31 வரை கட்டணம் வசூலிக்க உரிமை நீட்டிக்கப்பட்டது.  தற்போது அந்த காலக்கெடு முடிவடைந்த நிலையில் கடந்த 1ம் தேதி முதல் வனத்துறை சிற்றருவியை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தது. இதையடுத்து இன்று காலை குற்றாலம் வந்த வனத்துறை அதிகாரிகள் சிற்றருவிக்கு செல்லும் சாலையில் உள்ள கேட்டில் இரண்டு பூட்டுகள் போட்டு சீல் வைத்தனர்.

 

கிராம வனக்குழு மூலம்  மூலம் இனி சிற்றருவி செயல்பாட்டுக்கு கொண்டு வரப்படும்.  என்றும் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை மட்டுமே அருகில் செல்ல பொதுமக்கள் அனுமதிக்கப்படுவர் என்றும் வனத் துறை அறிவித்துள்ளது.

 

இது குறித்து குற்றாலம் வனச்சரகர் ஆரோக்கியசாமி செய்தியாளர்களிடம் கூறுகையில் ஒப்பந்தப்படி குத்தகை காலம் நிறைவடைந்தது. கடந்த ஒன்றாம் தேதி முதல் சிற்றருவி யை வனத்துறையின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தோம் இனி முழுக்க முழுக்க இந்த அருவி வனத்துறையின் கட்டுப்பாட்டில் செயல்படும் என்றார். 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

சிக்காத சிறுத்தை! பிடிக்க முடியாமல் தடுமாறும் வனத்துறை!

Published on 15/04/2024 | Edited on 15/04/2024
 forest department is struggling to catch the elusive leopard

கடந்த 2ஆம் தேதி மயிலாடுதுறை சுற்றியுள்ள பகுதிகளில் சிறுத்தை நடமாட்டம் கண்டறியப்பட்டது. இதையடுத்து பொதுமக்கள் வனத்துறைக்கு தகவல் அளித்தனர். ஆனைமலை புலிகள் காப்பகத்தில் இருந்து பயிற்சி பெற்ற அனுபவம் வாய்ந்த வனத்துறையினர் மற்றும் அதிகாரிகளை வரவழைத்து, தனிக்குழு அமைத்து அந்தச் சிறுத்தையின் நடமாட்டத்தைத் தொடர்ந்து கண்காணித்து வந்தனர்.

அதன்படி, சிறுத்தையின் காலடித்தடம் அது சிறுநீர் கழித்ததற்கான அடையாளம், அதன் கழிவு ஆகியவற்றை அடையாளம் கண்டு, சிறுத்தை மயிலாடுதுறை பகுதியில் நடமாடுவதை உறுதி செய்தனர். அதைப் பிடிப்பதற்காக வனத்துறையினர் பல்வேறு முயற்சிகளை செய்து வந்த நிலையில், நான்கு தினங்களுக்கு முன் அரியலூர் மாவட்டம் செந்துறை நகரப் பகுதியில் சிறுத்தை நடமாட்டத்தை பொதுமக்கள் பார்த்தனர். இது குறித்து அரியலூர் வனத்துறை மற்றும் காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் அப்பகுதி இளைஞர்களுடன் சிறுத்தையைப் பிடிப்பதற்கு முயற்சி செய்தனர்.

 forest department is struggling to catch the elusive leopard

ஒரு லேத் பட்டறையில் பதுங்கி இருந்த சிறுத்தை அங்கிருந்து தப்பி ஓடியதைப் பலரும் பார்த்தனர். இதையடுத்து சிறப்பு குழுவினர் பெரிய கூண்டை கொண்டு வந்து செந்துரை அருகே உள்ள ஓடை பகுதியில் கூண்டுக்குள் ஆட்டை அடைத்து வைத்தனர். ஆடு கத்தும் சத்தத்தை கேட்டு ஆட்டை உணவாக சாப்பிட்டு சிறுத்தை அந்த கூண்டை தேடி வரும் அப்போது அதில் மாட்டிக்கொள்ளும் வகையில் தயார் நிலையில் வைத்திருந்தனர். ஆனால் சிறுத்தை அந்தக் கூண்டுக்குள் வந்து சிக்கவில்லை.

இதைத்தொடர்ந்து செந்துறையைச் சுற்றிலும் உள்ள முந்தரிக்காட்டு பகுதிகளுக்குள் சிறுத்தை பதுங்கி இருக்கலாம் என்று ட்ரோன் கேமரா மூலம் தேடுதல் வேட்டை நடத்தினர். சிறுத்தை நடமாட்டத்தைக் கண்டுபிடிக்க முடியவில்லை. சிறுத்தை அரியலூர் மாவட்டத்திலிருந்து பெரம்பலூர் மாவட்டம் அல்லது அருகில் உள்ள கடலூர் மாவட்ட பகுதிகளுக்குள் சென்று இருக்கலாம் என்று வனத்துறையினர் கூறுகின்றனர். தற்போது நிலவரப்படி தினசரி ஒரு நாளைக்கு சுமார் 10 முதல் 15 கிலோமீட்டர் வரை சிறுத்தை இரவு நேரங்களில் இடம்பெயர்ந்து சென்றுள்ளது.

 forest department is struggling to catch the elusive leopard

இதனடிப்படையில் அரியலூர், பெரம்பலூர் மற்றும் கடலூர் மாவட்ட எல்லைய ஒட்டிய கிராமங்களில் வனத்துறையினர் தங்களது கண்காணிப்பைத் தீவிர படுத்தியுள்ளனர். இதனைப்போன்று கடந்த 2013 ஆம் ஆண்டு பெரம்பலூர் நகரை ஒட்டி உள்ள பகுதியில் சிறுத்தை நடமாட்டம் இருந்ததை பொதுமக்கள் பார்த்து வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். அப்போது பெரம்பலூர் அருகில் உள்ள துறைமங்கலம், கவுல்பாளையம் ஆகிய பகுதிகளில் சிறுத்தையைத் தேடும் பணி தீவிரமாக நடந்தது. நீண்ட முயற்சிக்குப் பிறகு அப்பகுதியில் சிறுத்தையைப் பிடிக்க கூண்டுக்குள் ஆட்டை விட்டு காட்டுப்பகுதியில் வைத்தனர். அப்போது அந்தச் சிறுத்தை ஆடு கத்தும் சத்தத்தை கேட்டு அதை கடித்து தின்பதற்காக கூண்டுக்குள் சென்று சிக்கியது. இதனையடுத்து அங்கு சென்ற வனத்துறையினர், அந்தச் சிறுத்தையை சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்திற்கு கொண்டு சென்று விட்டனர். இவ்வாறு சில ஆண்டுகளுக்கு ஒரு முறை பெரம்பலூர் ,அரியலூர்,மாவட்டங்களில் சிறுத்தை நடமாட்டம் இருப்பது பொதுமக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்ப்படுத்தியுள்ளது.

Next Story

ஊருக்குள் நுழைந்த காட்டு யானை; அச்சத்தில் கிராம மக்கள்

Published on 17/03/2024 | Edited on 17/03/2024
A wild elephant entered the town; Villagers in fear

கோவையில் வேடப்பட்டியில் திடீரென காட்டு யானை ஊருக்குள் புகுந்ததால் பொதுமக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர்.

கோவை மாவட்டம் பேரூர் அடுத்துள்ள வேடப்பட்டி, தொண்டாமுத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த சில மாதங்களாகவே ஒற்றை காட்டு யானை ஒன்று திடீரென ஊருக்குள் புகுந்து அச்சுறுத்தி வருகிறது. அந்த பகுதியில் உள்ள விவசாய நிலங்கள் மற்றும் தோட்டங்களில் முகாமிட்டு பெரும் அச்சுறுத்தல் கொடுத்து வருகிறது.

கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு கரடிமடை பகுதிக்கு வந்த காட்டு யானை தாக்கியதில் நான்கு பேர் காயமடைந்தனர். இந்நிலையில் இன்று அதிகாலை பேரூர் வேடப்பட்டி சாலை வழியாக ஒற்றை காட்டு யானை ஊருக்குள் புகுந்தது. சுமார் 20 கிலோமீட்டர் வனப்பகுதியில் இருந்து கடந்து வந்துள்ள காட்டு யானை தனியார் கல்லூரியின் பின்புறத்தில் முகாமிட்டுள்ளது.

காட்டு யானையை அந்த பகுதியில் இருந்து அப்புறப்படுத்த கோவை வனச்சரக வனத்துறையினர் தீவிர முயற்சி எடுத்து வருகின்றனர். இதனால் அந்த பகுதியில் பாதுகாப்பு எச்சரிக்கை அறிவிக்கப்பட்டுள்ளது. காட்டு யானை சுற்றி வருவதால் அந்த பகுதியில் உள்ள பொதுமக்கள் வீட்டிலேயே அடைந்து கிடக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. ஒற்றைக் காட்டுயானை ஊருக்குள் புகுந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.