police

கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி அருகே உள்ளது சொக்கநாதன் பேட்டை. இந்த கிராமத்தைச் சேர்ந்தவர் மணிமாறன். இவரது மகள் 25 வயது பிரியா. இவருக்கும் நெய்வேலி அருகிலுள்ள வடக்குத்து பகுதியைச் சேர்ந்த ராசா கண்ணு மகன் குணசேகரன் என்பவருக்கும் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு இரு வீட்டார் சம்மதத்துடன் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு தற்போது ஒன்றரை வயதில் பிரவின் என்ற ஆண் குழந்தை உள்ளது.

Advertisment

பிரியா கணவர் குணசேகரன் வரதட்சனை கேட்டு பிரியாவிடம் அடிக்கடி தகராறு செய்து வந்துள்ளார். குணசேகர் குடும்பத்தினரும் மகனுடன் சேர்ந்து பிரியாவிடம் பிரச்சனை செய்து வந்ததாக கூறப்படுகிறது. பிரச்சனைகள் அதிகரித்த நிலையில் கடந்த 5 மாதங்களுக்கு முன்பு பிரியா தனது தாய் வீடான சொக்கநாதபுரம் சென்று தந்தை வீட்டில் குழந்தையோடு வசித்து வந்துள்ளார்.

Advertisment

இந்த நிலையில் கடந்த வாரம் குணசேகரன் தனது உறவினர்களுடன் பிரியாவின் வீட்டிற்கு சென்றுபிரியாவின் பெற்றோரிடம் சமாதானம் பேசி பிரியா மற்றும் குழந்தையை தனது ஊருக்கு அழைத்து வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று முன்தினம் பிரியா இறந்துவிட்டதாக அவரது பெற்றோருக்கு குணசேகரன் உறவினர்கள் தகவல் தெரிவித்துள்ளனர். அவர்கள் சொக்கநாதன் பேட்டையிலிருந்து பதறியடித்துக்கொண்டு வடக்குத்து கிராமத்திற்கு ஓடி வந்தனர். இங்கு வந்து பார்த்தபோது பிரியா தீக்காயங்களுடன் உடல் கருகிய நிலையில் இறந்து கிடந்துள்ளார். குழந்தை பிரவீனுக்கும் பலத்த தீக்காயங்கள் இருந்துள்ளது.

இதையடுத்து குழந்தையை மீட்டு கடலூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். பிரியாவின் உடலை பிரேத பரிசோதனை செய்ய முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். இதுகுறித்து பிரியாவின் தந்தை மணிமாறன் நெய்வேலி டவுன்ஷிப் போலீசில் புகார் செய்துள்ளார். புகாரில் தனது மகள் சாவில் சந்தேகம் உள்ளதாக தெரிவித்துள்ளார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

பிரியாவின் மரணம் குறித்து கோட்டாட்சியர் விசாரணை நடைபெற உள்ளது. பிரியா தற்கொலை செய்து கொண்டாரா அல்லது கொலை செய்யப்பட்டாரா என்ற கேள்வியை பிரியாவின் பெற்றோர் மற்றும் உறவினர்களும் எழுப்பியுள்ளனர். பிரியாவின் மரணம் அவரது பெற்றோர் உறவினர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.