திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கம் விரேஸ்வரம் அருகில் இருசக்கர வாகனத்தில் சென்ற மின்பொறியாளர் ஒருவரிடம் கத்தியை காட்டி மிரட்டி, இருசக்கர வாகனம் மற்றும் ரூ. 2000 பணத்தை பறித்து சென்ற வழக்கில் ரவுடி மகாமுனி(36) என்பவரை காவல்துறையினர் கைது செய்தனர். மேலும் விசாரணையில் குற்றவாளி மீது திருச்சி மாவட்ட காவல் நிலையங்களில் கஞ்சா வழக்கு உட்பட 19 வழக்குகள், திருச்சி மாநகர காவல் நிலையங்களில் கஞ்சா மற்றும் திருட்டு வழக்கு உட்பட 6 வழக்குகள் என மொத்தம் 25 வழக்குகள் நிலுவையில் இருப்பது தெரியவந்தது.
மேலும், மகாமுனி தொடர்ந்து இளைஞர்களை சீரழிக்கும் கஞ்சா போதை பொருளை விற்பனை செய்து வருவதும், பொதுமக்களை அச்சுறுத்தி பணம் பறிப்பவர் என்பதும் விசாரணையில் தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து அவரின் தொடர் குற்றச் செயல்களை தடுக்கும் பொருட்டு ஸ்ரீரங்கம் குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் கொடுத்த அறிக்கையின்படி, திருச்சி மாநகர காவல் ஆணையர் கார்த்திகேயன் ரவுடி மகாமுனியை குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின்கீழ் கைது செய்ய உத்தரவிட்டார்.