Skip to main content

ஒரே நாளில் 5 ரவுடிகளுக்கு குண்டாஸ்! கைதிகள் வேலூர் சிறைக்கு மாற்றம்!

Published on 27/08/2018 | Edited on 27/08/2018
goondas sm


சேலம் மணக்காடு பகுதியைச் சேர்ந்தவர் விஜி (28). கந்து வட்டித்தொழில் செய்து வந்தார். சில ஆண்டுகளுக்கு முன்பு வரை அஜித்குமார் ரசிகர் மன்றத் தலைவராகவும் இருந்து வந்தார். பிரபல ரவுடியான இவர் மீது ஏற்கனவே கொலை முயற்சி, கொள்ளை, வழிப்பறி உள்ளிட்ட வழக்குகளும் நிலுவையில் இருந்தன. இவரை, கடந்த ஜூலை 24ம் தேதி மர்ம நபர்கள் கொடூரமான முறையில் வெட்டிக்கொலை செய்தனர்.

விஜி, கொலை செய்யப்படுவதற்கு முன்பு, அவருடைய நண்பர் ராகுல்ராஜ் என்பவர் தன்னிடம் வாங்கிய கடன் தொகையைத் தராமல் இழுத்தடித்து வந்ததாகவும், அதனால் ராகுல்ராஜ் வீட்டுக்குச்சென்று அவருடைய தாயாரிடம் ராகுல்ராஜை தீர்த்துக்கட்டி விடுவதாக மிரட்டிவிட்டு வந்துள்ளார். இதையறிந்த ராகுல்ராஜ் தன் நண்பர்களுடன் சேர்ந்து விஜியை திட்டமிட்டு தீர்த்துக்கட்டினார்.

இந்த கொலை வழக்குக் தொடர்பாக சேலம் மகேந்திரபுரியைச் சேர்ந்த ரமேஷ்பாபு மகன் ராகுல்ராஜ் (24), குமாரசாமிப்பட்டியைச் சேர்ந்த முருகேசன் மகன் வினோத் என்கிற வினோத்குமார் (23), மரவனேரி காந்தி நகரைச் சேர்ந்த செல்வம் மகன் ஜெய் என்கிற ஜெயபிரகாஷ் (28), ஆத்தூக்காடு பகுதியைச் சேர்ந்த செல்வம் மகன் சர்மல் (23), குமாரசாமிப்பட்டி ராம் நகர் ஓடையைச் சேர்ந்த பெருமாள் மகன் ஸ்ரீரங்கன் (38) ஆகிய ஐந்து பேரை அஸ்தம்பட்டி போலீசார் கைது செய்தனர்.

கைதான ஐந்து பேரும் நீதிமன்ற உத்தரவின்பேரில் ஆத்தூர் கிளைச்சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்நிலையில், விஜி கொலை செய்யப்பட்ட இடமான ராம் நகர் என்பது மாநகராட்சிக்குச் சொந்தமான வாகனங்கள் நிறுத்தும் இடம் என்பதால் அங்கு எப்போதும் மக்கள் நடமாட்டம் இருக்கும். மேலும், சம்பவத்தன்று மேற்கண்ட ரவுடிகள் விஜியை ஓட ஓட விரட்டிச்சென்று கொடூரமான முறையில் வெட்டிக்கொன்றுள்ளனர்.

இந்த கொடூர செயலால் அப்பகுதியில் வன்முறை கட்டவிழ்க்கப்பட்டதாக மக்கள் பெரும் அச்சம் கொண்டுள்ளனர். இதனால், இதுபோன்ற கொடூர செயல்களைக் கட்டுக்குள் கொண்டு வரும் வகையில், விஜி கொலை வழக்கில் சிறையில் இருக்கும் மேற்சொன்ன ஐந்து ரவுடிகள் மீதும் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய அஸ்தம்பட்டி இன்ஸ்பெக்டர், மாநகர போலீஸ் துணை கமிஷனர் தங்கதுரை ஆகியோர் சேலம் மாநகர போலீஸ் கமிஷனர் சங்கருக்கு பரிந்துரை செய்தனர்.

அவருடைய உத்தரவின்பேரில் ரவுடிகள் ஐந்து பேரும் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர். மேலும், அவர்கள் ஐவரும் ஆத்தூர் கிளைச்சிறையில் இருந்து இன்று வேலூர் மத்திய சிறைக்கு இடமாற்றம் செய்யப்பட்டனர்.

சார்ந்த செய்திகள்

Next Story

திருட்டு, வழிப்பறி; ரவுடிகள் மூவர் மீது குண்டாஸ் பாய்ந்தது!

Published on 31/07/2023 | Edited on 31/07/2023

 

Gundas swooped on three in salem

 

சேலத்தில் திருட்டு, வழிப்பறி, லாட்டரி விற்பனையில் ஈடுபட்ட மூன்று பேரைக் காவல்துறையினர் குண்டர் சட்டத்தில் கைது செய்தனர். 

 

சேலம் தாதகாப்பட்டி சண்முகா நகரைச் சேர்ந்த ராஜேந்திரன் மகன் தனுஷ் (21). அம்மாபேட்டை வித்யா நகர் 8 ஆவது குறுக்குத் தெருவைச் சேர்ந்த மாது மகன் விக்ரம் (20). தாதகாப்பட்டி மூணாங்கரட்டைச் சேர்ந்த சம்பத் மகன் மணிமாறன் (32). இவர்கள் மூன்று பேரையும் சேலம் மாநகர காவல்துறையினர் ஜூலை 28ம் தேதி ஒரே நாளில் குண்டர் சட்டத்தில் கைது செய்தனர். 

 

இவர்களில் விக்ரம், தனுஷ் ஆகியோர் மீது இருசக்கர வாகனத் திருட்டு, கத்தியைக் காட்டி மிரட்டி பணம் பறித்தல் ஆகிய வழக்குகள் உள்ளன. இவர்களில் தனுஷ் மீது முதல் முறையாகவும், விக்ரம் மீது இரண்டாவது முறையாகவும் குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது. மற்றொரு ரவுடியான மணிமாறன், தமிழக அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரிச் சீட்டுகளை தாதகாப்பட்டி பகுதியில் விற்பனை செய்து வந்துள்ளார். இவர் விற்ற லாட்டரி சீட்டுக்குப் பணம் விழாதபோது அவரிடம் சீட்டு வாங்கிய நபர்கள் பணத்தைத் திருப்பிக் கேட்டபோது, அவர்களைக் கத்தி முனையில் மிரட்டியுள்ளார். 

 

இதுகுறித்த புகாரின் பேரில் அவரைக் காவல்துறையினர் கைது செய்தனர். இவர் மீது ஏற்கனவே சில குற்ற வழக்குகள் இருந்தன. இதையடுத்து, பொது அமைதியைக் கருதி இவரைக் குண்டர் சட்டத்தில் கைது செய்துள்ளனர். இவர் மீது மூன்றாவது முறையாகக் குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

 

 

Next Story

கொலை, பாலியல், ஆள் கடத்தல் 5 பேர் மீது பாய்ந்தது குண்டாஸ்!

Published on 28/06/2023 | Edited on 28/06/2023

 

Goondass on five people in salem

 

சேலத்தில், கொலை, ஆள் கடத்தல், பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட குற்றங்களில் ஈடுபட்ட 5 நபர்களை காவல்துறையினர் குண்டர் சட்டத்தில் கைது செய்தனர். 

 

சேலம் பள்ளப்பட்டியைச் சேர்ந்தவர் உதயசங்கர். இவருக்கும் சேலம் மாவட்டம், ஓமலூர் அருகே உள்ள காமலாபுரம் நடுத்தெருவைச் சேர்ந்த அன்பழகன் மகன் பன்னீர்செல்வம் (24) என்பவருக்கும் முன்விரோதம் இருந்து வந்தது. இதனால் அவரைக் கொலை செய்யத் திட்டமிட்ட பன்னீர்செல்வம், கடந்த மே மாதம் 15 ஆம் தேதி, தனது கூட்டாளிகளான சேலம் மூன்று சாலை ஜெயா நகரைச் சேர்ந்த ஆனந்த் (26), சேலம் கல்லாங்குத்து கோவிந்தன் தெருவைச் சேர்ந்த கணேஷ் முத்துராஜ் மகன் விக்கி என்கிற விக்னேஷ்குமார் (23), பள்ளப்பட்டி சின்னேரி வயல்காட்டைச் சேர்ந்த சந்தோஷ்குமார் (28) ஆகியோரை துணைக்கு அழைத்துக் கொண்டார். 

 

அப்போது அவர்கள் உதயசங்கரை அலைப்பேசியில் தொடர்பு கொண்டு பள்ளப்பட்டி அருகே உள்ள ஹட்சன் பால் சொசைட்டி அருகில் சமாதானம் பேச வருமாறு அழைத்தனர். அங்கு வந்த உதயசங்கரை அவர்கள் சுற்றி வளைத்து அரிவாளால் சரமாரியாக வெட்டிக் கொலை செய்தனர். பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவம் குறித்து விசாரித்த பள்ளப்பட்டி காவல் நிலைய காவல்துறையினர் கொலையாளிகள் நால்வரையும் கைது செய்து, சேலம் மத்திய சிறையில் நீதிமன்றக் காவலில் அடைத்தனர். 

 

இவர்களில் பன்னீர்செல்வத்தின் மீது ஏற்கனவே கடந்த 2021 ஆம் ஆண்டு கைதி வழிக்காவலுக்குச் சென்றபோது காவல்துறை வாகனத்தை மறித்ததாகவும், 2022 ஆம் ஆண்டு ஆள்கடத்தலில் ஈடுபட்டதாகவும் ஓமலூர், ஆத்தூர் காவல் நிலையங்களில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு இருப்பது தெரியவந்தது. இதற்கிடையே, சேலத்தை அடுத்த சிவதாபுரம் அங்காளம்மன் கோயில் அருகில் வசிக்கும் மாதேஸ்வரன் மகன் மணிகண்டன் (25) என்பவர், அதே பகுதியைச் சேர்ந்த ஒரு சிறுமியை கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்ததாக போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டு, சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.  

 

பன்னீர்செல்வம், ஆனந்த், விக்கி என்கிற விக்னேஷ்குமார், சந்தோஷ்குமார், மணிகண்டன் ஆகியோர் தொடர்ந்து கொடுங் குற்றங்களில் ஈடுபட்டு வந்ததோடு, அவர்கள் பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் செயல்களிலும் ஈடுபட்டு வந்துள்ளனர். இதையடுத்து அவர்கள் ஐந்து பேரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய மாநகர காவல்துறை துணை ஆணையர்கள் லாவண்யா, கவுதம் கோயல் ஆகியோர் காவல்துறை ஆணையருக்கு பரிந்துரை செய்தனர். 

 

அதை ஏற்றுக்கொண்ட ஆணையர் விஜயகுமாரி, அவர்கள் ஐவரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார். அதன்பேரில் அவர்கள் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர். சிறையில் அடைக்கப்பட்டுள்ள அவர்களிடம் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டதற்கான ஆணை வழங்கப்பட்டது. ஒரே நாளில் 5 நபர்கள் மீது குண்டர் சட்டம் பாய்ந்த சம்பவம், சேலத்தில் ரவுடிகள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.