Skip to main content

'டி23 'புலியை பிடிக்க முதன்முறையாக கும்கி யானைகள்!-வனத்துறையின் அடுத்த மூவ்!

Published on 04/10/2021 | Edited on 04/10/2021

 

Kumki elephants for the first time to catch 'T23' tiger!

 

நீலகிரி மாவட்டம் கூடலூர் தேவன் எஸ்டேட் பகுதியில் வனத்துறையினருக்குப் போக்குகாட்டி வரும்  'டி23' புலி இதுவரை நான்கு பேரைக் கொன்றுள்ளது. தீவிர தேடுதல் வேட்டைக்குப் பிறகு கடந்த ஒன்றாம் தேதி ஒருவரைக் கொன்றதால் புலியைச் சுட்டுக்கொல்ல நேற்று வனத்துறை உத்தரவிட்டது. இதில் குறிப்பிடத்தகுந்த ஒன்று, முன்பு கொல்லப்பட்ட 3 பேரையும் அந்த புலி உணவாக உட்கொள்ளவில்லை.ஆனால் நான்காவது நபராக இன்று கொல்லப்பட்டவரைப் புலி உண்டிருப்பதாகக் கூறப்படுகிறது.

 

Kumki elephants for the first time to catch 'T23' tiger!

 

தொடர்ந்து 10வது நாளாக 'டி23' புலியைப் பிடிக்க வனத்துறை சார்பில் முயற்சி ஈடுபட்டு வருகிறது. அதேபோல் புலியை மயக்க ஊசி செலுத்தியே பிடிக்க முயன்று வருவதாக வனத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முதன்முறையாகக் கும்கி யானைகளை வைத்து புலியைப் பிடிக்கும் முயற்சியை வனத்துறை மேற்கொண்டுள்ளது. இதற்காக முதுமலையில் இருந்து ஸ்ரீனிவாசன், உதயன் என்ற இரண்டு கும்கி யானைகள் கொண்டுவரப்பட்டுள்ளது. தற்பொழுது புலி பதுங்கி இருப்பதாகக் கூறப்படும் மசினகுடியின் சிங்கார வனப்பகுதி சமதள வனப்பகுதி. ஆனால் அடர் புதர்களைக் கொண்ட வனப்பகுதியாக இருப்பதால் வன கால்நடை மருத்துவர்களைக் கும்கி யானை மீது ஏற்றித் தேடுதல் வேட்டை நடத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது.

 

இந்நிலையில் 'டி23' புலியைச் சுட்டுக்கொல்ல வேண்டும் என்ற உத்தரவை எதிர்த்து உத்தரப்பிரதேசம் நொய்டாவைச் சேர்ந்த சங்கீதா தோக்ரா என்ற பெண் ஒருவர் ஆன்லைன் மூலமாகச் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்துள்ளார். அதில், குறிப்பிட்ட அந்த புலி ஆட்கொல்லி புலி என்று அறிவியல்பூர்வமாக நிரூபிக்கப்படவில்லை எனக் குறிப்பிட்டுள்ளார். இந்த வழக்கை நாளை விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'கடைசி நேரத்தில் இடமாற்றம் செய்ய உத்தரவிட முடியாது'- நீதிமன்றம் பதில்

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
'Can't order transfer at the last moment'- court reply

தமிழக கூடுதல் டிஜிபி அருண் ஒரு கட்சிக்கு ஆதரவாக செயல்படுவதாகவும் எனவே அவரை  இடமாற்றம் செய்ய வேண்டும் எனக்கோரி வழக்கு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஐபிஎஸ் அதிகாரி அருணை இடமாற்றம் செய்ய தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட முடியாது. அதிகாரிகள் நடவடிக்கைகளைத் தேர்தல் ஆணையம் கண்காணித்து தவறு செய்தால் நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளனர்.  

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ள தொகுதிகளில் தேர்தல் பரப்புரை நேற்று (17.04.2024) மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது. மேலும் இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகத்திலும், புதுச்சேரியிலும் வாக்குப்பதிவு நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் எஸ்.கே.சாமி என்பவர், உயர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடர்ந்திருந்தார். தேர்தல் ஆணையம் சார்பில் காவல்துறை கூடுதல் டிஜிபி ஆக இருக்கக்கூடிய காவல்துறை அதிகாரி அருண் ஒரு கட்சிக்காக செயல்படுகிறார். அவரை இடமாற்றம் செய்ய வேண்டும் என மனுதாரர் தரப்பில் குற்றச்சாட்டு வைக்கப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், 'தேர்தல் ஆணையத்தின் கண்காணிப்பில் அந்த அதிகாரி இருப்பதாகவும் ஆகவே எந்த அச்சமும் மனுதாரர் கொள்ள வேண்டாம். அதே நேரத்தில் சம்பந்தப்பட்ட அதிகாரி யாராக இருந்தாலும் தேர்தல் நடவடிக்கையை பொறுத்தவரை சரியான முறையில் இயங்கவில்லை என்றால் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். தேர்தலை நியாயமாக நேர்மையாக நடத்த வேண்டியது தேர்தல் ஆணையத்தின் கடமை. கடைசி நேரத்தில் காவல்துறை அதிகாரியை இடமாற்றம் செய்ய உத்தரவிட முடியாது'  எனக் கூறி இந்த வழக்கை முடிவுக்கு கொண்டு வந்தனர். 

Next Story

ராகுல் காந்தி பயணித்த ஹெலிகாப்டரில் சோதனை!

Published on 15/04/2024 | Edited on 15/04/2024
Rahul Gandhi's helicopter was tested

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அதே சமயம் தமிழக அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்களைத் தொடங்கியுள்ளன.

அதன்படி பல்வேறு அரசியல் கட்சிகள் தேர்தல் பரப்புரைகளை தீவிரமாக செய்து வரும் நிலையில், மறுபுறம் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். தொடர்ந்து எம்பிக்கள், அமைச்சர்கள் மற்றும் வேட்பாளர்களின்  வாகனங்களில் பறக்கும் படையினர் தீவிரமாக சோதனை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் தேர்தல் பிரச்சாரத்திற்காக கர்நாடக மாநிலம் மைசூரில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் ராகுல் காந்தி இன்று (15.04.2024) நீலகிரி மாவட்டம் பந்தலூர் வந்தடைந்தார். அப்போது அங்கு வந்த தேர்தல் பறக்கும் படையினர் ராகுல் காந்தி வந்த ஹெலிகாப்டரில் சோதனை மேற்கொண்டனர். ஹெலிகாப்டர் தளத்தில் இருந்து தேவாலயம் செல்லும் ராகுல் காந்தி அங்குள்ள தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களுடன் கலந்துரையாடுகிறார். கேரள மாநிலம் வயநாடு தொகுதிக்கு செல்லும் வழியில் பந்தலூர் பகுதிக்கு ராகுல் காந்தி வருகை புரிந்தது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக நீலகிரியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் ஆ.ராசாவை ஆதரித்து உதயநிதி ஸ்டாலின் பரப்புரை மேற்கொள்ள உள்ளார். இதற்காக ஹெலிகாப்டர் மூலமாக உதயநிதி ஸ்டாலின் நேற்று (14.04.2024) நீலகிரி வந்திருந்தார். அப்போது அவர் வந்த ஹெலிகாப்டரையும் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் சோதனைக்கு உட்படுத்தி இருந்தது குறிப்பிடத்தக்கது.