Skip to main content

“குமரி ஆனந்தன் சுயசரிதை எழுத வேண்டும்” - ப.சிதம்பரம்

Published on 19/03/2022 | Edited on 19/03/2022

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர் குமரி ஆனந்தனின் 90-வது பிறந்தநாள் விழா, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ். அழகிரி தலைமையில், சென்னை சத்தியமூர்த்தி பவனில் கேக் வேட்டி கொண்டாடப்பட்டது. அப்போது, குமரி ஆனந்தனுக்கு காங்கிரசார், ஆளுயுர மாலை அணிவித்தனர். மக்களவை காங்கிரஸ் உறுப்பினர் விஜய் வசந்த், எம்.பி., வரவேற்புரையாற்றினார்.

 

இந்நிகழ்ச்சியில், காங்கிரஸ் மாநிலத் தலைவர் கே.எஸ்.அழகிரி பேசியதாவது; “இலக்கிய செல்வர் குமரி அனந்தன் வரலாற்றுப் பெட்டகம். தேசியத்திற்கான, காங்கிரஸ் கட்சிக்காக அவர் ஆற்றிய பங்கு மறக்கமுடியாது. மக்கள் பிரச்சனைகளுக்காக பலமுறை நடைபயணம் மேற்கொண்டு இருக்கிறார். நடப்பதில் மன்னாதி மன்னன் குமரி அனந்தன். தேசத்தைக் காப்பாற்றுவதற்காக காங்கிரஸ் தொண்டர்கள் வீறுகொண்டு எழ வேண்டும். அரசியல் இயக்கத்தில் வெற்றியும் வரும், பின்னடைவும் வரும். நாம் தோல்வி வரும்போது துவண்டு விடுகிறோம். நமக்கு நம்பிக்கை வேண்டும். நாம்தான் இந்தியாவை ஒற்றுமைப்படுத்த முடியும். சிறந்த தலைமை வேண்டும், உறுதியான தலைமை வேண்டும். அப்படி இருந்தால் இயக்கத்தை வழிநடத்த முடியும். சோனியா காந்தி, ராகுல் காந்தி தலைமையில் வழிநடப்போம்” இவ்வாறு அவர் பேசினார்.

 

முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப. சிதம்பரம், எம்.பி பேசியதாவது; “இந்திய அரசியலில் குமரி ஆனந்தன் தெரிந்து கொள்ளாத விஷயம் இருக்கமுடியாது. அரசியல் ஆளுமை, இலக்கிய ஆளுமை, தமிழ் ஆளுமை மேடைப்பேச்சு ஆளுமை, மொழி ஆளுமை என அனைத்து ஆளுமைகளையும் உடையவர் பெரியவர் குமரி அனந்தன்.

 

குமரி அனந்தன் 90வது வயதைத் தொடங்குகிறார். 1933ஆம் ஆண்டில் பிறந்தார். அன்று நடந்த வரலாறு, பாடப்புத்தகத்தில் மறைக்கப்பட்டு வருகிறது. அன்றைய காலகட்டத்தில் நடந்த வரலாற்றை மறைந்து வருகிறார்கள். இன்னும் வருகிற நாள்களில் 2014ஆம் ஆண்டில் தான் சுதந்திரம் அடைந்தது என்று சொல்லுவார்கள். பாடப்புத்தகத்தின் வாயிலாகத்தான் வரலாற்றை தெரிந்து கொள்ள முடியும். அதுமாறி வேறுவகையாக நூல்கள் மூலமாக தெரிந்து கொள்ள வேண்டிய சூழ்நிலை உருவாகி உள்ளது. ஜவஹர்லால் நேரு தனது 40 வயதில் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தலைவராகப் பொறுப்பேற்றார். இளைஞர்கள் பொறுப்பிற்கு, பதவிக்கு வரமுடியாது என்பதை நாம் மனதளவிலாவது ஒழிக்க வேண்டும். குமரி ஆனந்தன் தன் (சுயசரிதை) வரலாற்றை எழுதவேண்டும். அவர் எழுதினால் அதில், தமிழகத்தின் வரலாறு, காங்கிரஸ் கட்சியின் வரலாறு இடம்பெறும். அதனை ஓரிரு வருடங்களில் அவர் எழுதி எங்களுக்குத் தரவேண்டும் என்று என்னுடைய விருப்பத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன்” இவ்வாறு அவர் கூறினார்.

 

சு.திருநாவுக்கரசர் எம்.பி பேசியதாவது; “நீங்களும் பேச்சாளர் ஆகலாம் என்று குமரி ஆனந்தன் எழுதிய நூலைப் படிக்கவும்.. பேச்சாற்றல், எழுத்தாற்றல் உடையவர். ரயில் நிலையத்தில் பயணிகளின் பணிவான கவனத்திற்கு என்று ஒலிக்கும். அதனை, பயணிகளின் கனிவான கவனத்திற்கு என்று மாற்றியவர் குமரி அனந்தன். கவர்னர் மாளிகையில் குமரி அனந்தன் தங்க வேண்டும் என்று அவருடைய ஜாதகத்தில் இருக்கிறது. அதனை நாம் செய்யத் தவறிவிட்டோம். அது வேறு வழியில் நடந்து இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. 90 வயதில் உடல் ஆரோக்கியமாக வாழ்வதற்கு காரணம் அவருக்கு எந்தக் கெட்டப்பழக்கம் இல்லாததுதான். இளைஞர்கள் முன்மாதிரியாக எடுத்துக் கொள்ள வேண்டும். சுதந்திரம் பெறுவதற்கு முன்பு இருந்த வரலாற்றையும், ராகுல் காந்தி பிரதமராகும் வரலாற்றையும் சேர்த்து குமரி அனந்தன் எழுத வேண்டும். குமரி அனந்தன் 100 ஆண்டுகள் கடந்து வாழவேண்டும்” என்றார்.

 

இவ்விழாவில், முன்னாள் தலைவர்கள் கே.வீ. தங்கபாலு, சு. திருநாவுக்கரசர் எம்.பி, முன்னாள் மத்திய அமைச்சர் ஆர். தனுஷ்கோடி ஆதித்தன், தொழிலதிபர் வி.ஜி.சந்தோஷம் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். 

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

“பிரதமர் வேட்பாளர் பிரியங்கா காந்தி” - காங்கிரஸில் இணையும் மன்சூர் அலிகான் அதிரடி

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
mansoor ali khan willing to join congress

இந்திய ஜனநாயகப் புலிகள் என்ற அரசியல் கட்சியை நடத்தி வரும் மன்சூர் அலிகான், நாடாளுமன்ற தேர்தலில் வேலூர் தொகுதியில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிட்டார். அப்போது பிரச்சாரத்தின் போது அவருக்கு உடல்நலக்குறவு ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றது அரசியல் வட்டாரங்களில் பரப்பரப்பாக பேசப்பட்டது. 

இந்த நிலையில் மன்சூர் அலிகான் காங்கிரஸில் ராகுல் காந்தி முன்னிலையில் இணைய விருப்பம் தெரிவித்துள்ளார். இது தொடர்பான கடிதத்தை சத்தியமூர்த்தி பவனில் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகையை சந்தித்து கொடுத்துள்ளார். பின்பு செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “பிரதமர் மோடி ஒரு விஷப்பாம்பை விட மோசமாக விஷம் கக்கிற அளவிற்கு, தேசத்தில் பிரிவை ஏற்படுத்தி ரத்த ஆறு ஓடவைத்து, மதக் கலவரத்தை உண்டு பண்ணி, எப்படி மணிப்பூர், குஜராத்தில் பண்ணினாரோ அதையே இப்போதும் பண்ண நினைக்கிறார்.  மன்மோகன் சிங் கால் தூசிக்கு கூட இவர் ஈடாகமாட்டார். மன்மோகன் சிங் 2006ல் கருணை அடிப்படையில் பேசியதை திரித்து ராஜஸ்தானில் பேசியுள்ளார். அவர் மனிதராக இருக்கவே தகுதியற்றவர். தேர்தல் ஆணையம் பிரதமர் மீது கடும் நடவடிக்கை எடுத்து கைது செய்து திகார் ஜெயிலில் உடனடியாக அடைக்க வேண்டும்.   

காங்கிரஸில் இணைய போன வருஷம் நவம்பரிலே கடிதம் கொடுத்திருந்தேன். அது என் தாய் கழகம். 15 வருஷங்களுக்கு முன்னால் நான் காங்கிரஸில் இருந்தேன். திண்டிவனம் ராமமூர்த்தியுடன் கருத்து வேற்பாடு ஏற்பட்டதால் விலகிவிட்டேன். பின்பு மீண்டும் சேர கடிதம் கொடுத்தேன். ஆனால், சரியாகப் போய் சேரவில்லை போல. அதனால்தான் கட்சியை தொடங்கி என் கைக்காசைப் போட்டு செலவு செய்து, போராடி இந்தத் தேர்தலை சந்தித்திருக்கிறேன். என்னுடைய ஆதரவு இந்தியா கூட்டணிக்குதான். சோனியா காந்தியின் மகள் பிரியங்கா காந்தியை பிரதமர் வேட்பாளராகப் பார்க்கிறேன். அந்த மகராசிக்கு பிரதமருக்கான முகராசி உள்ளது. அல்லது ராகுல் காந்தி பிரதமர் ஆவார் என்ற என் ஆசையையும் நிலைப்பாட்டையும் தெரியப்படுத்தி இருந்தேன். 10 வருடங்கள் நாட்டை ஆண்ட பாரதப் பிரதமர் ஒரு வெங்காயம் உரிச்சு போடல. நாட்டு மக்களை பிச்சைக்காரங்க ஆக்கிட்டாங்க. கோவணத்தை உருவிட்டு வெளிநாட்டில் இருந்து இவரைக் கொல்ல சதி செய்கிறார்கள் என உளறிக் கொண்டிருக்கிறார். ஒரு சாதாரண குடிமகனாக அவரைத் தூக்கி உள்ளே போடுங்க. இல்லைன்னா போராட்டம் வெடிக்கும்” என்றார்.

Next Story

“தேர்தலை புறக்கணியுங்கள்..” - மக்களுக்கு பகிரங்க மிரட்டல்; கேரளாவில் பரபரப்பு!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
 threat to public to boycott election in Wayanad

நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்.19 ஆம் தேதி தொடங்கி, வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெறவுள்ளது. அதில் பதிவாகும் வாக்கு எண்ணிக்கையானது ஜூன் 4ஆம் தேதி நடைபெற்று அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கின்றன. இதனிடையே, முதற்கட்டமாக தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த ஏப்.19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது.

அதே வேளையில், மொத்தம் 20 மக்களவைத் தொகுதிகள் கொண்ட கேரளா மாநிலத்தில், இரண்டாம் கட்டமாக வருகிற ஏப்ரல் 26ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற இருக்கிறது. இங்கு நடைபெறும் தேர்தலை எதிர்கொள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, காங்கிரஸ், பா.ஜ.க ஆகிய கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. இதற்கான தேர்தல் பிரச்சாரம்  இன்று (24-04-24) மாலையுடன் நிறைவு பெறுகிறது.

இந்த நிலையில் இன்று காலை வயநாடு நாடாளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட கம்பமலை கிராமத்திற்கு வந்த ஆயுதம் ஏந்திய மாவோயிஸ்டுகள் 4 பேர் பொதுமக்களிடையே தேர்தலை புறக்கணியுங்கள் என்று எச்சரித்துள்ளனர். மேலும் அரசுக்கு எதிராக கோஷம் எழுப்பி அங்கிருந்து புறப்பட்டு சென்றுள்ளனர். இதனை அங்கிருந்த ஒருவர் வீடியோவாக பதிவு செய்து வெளியிட்டுள்ளார்.

வயநாடு தொகுதியில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியும் இந்திய கம்யூனிஸ்ட் சார்பில் ஆனி ராஜவும் போட்டியிடுகின்றனர். இந்த நிலையில் மாவோயிஸ்டுகள் பகிரங்கமாக மிரட்டல் விடுத்துள்ளது கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.