Skip to main content

குலசேகரப்பட்டினம் தசரா திருவிழா... பக்தர்களின்றி கோவில் வளாகத்தில் நடந்த மஹிஷா சூரசம்ஹாரம்! (படங்கள்)

Published on 17/10/2021 | Edited on 17/10/2021

 

தென் மாவட்டத்தில் பிரசித்திப் பெற்றது தூத்துக்குடி மாவட்டத்தின் குலசேகரப்பட்டினம் தசரா திருவிழா. லட்சக்கணக்கான பக்தர்கள் 10ம் நாள் அன்று கடற்கரையில் திரண்டு வந்து பக்தி கோஷத்தோடு மஹிஷா சூரசம்ஹாரத்தைக் கண்டு களித்து முத்தாரம்மனை தரிசிப்பர். ஆனால் கரோனாத் தொற்று பரவல் தடை காரணமாக கடந்த ஆண்டும், இந்த ஆண்டும் ஆலய விழாக்கள் வெளியே நடக்காமல் ஆலய வளாகத்திற்குள்ளேயே நடந்தது.

 

குறிப்பாக, குலசேகரப்பட்டினம் முத்தாரம்மன் ஆலய நவராத்திரி தசரா திருவிழாவில் 10 நாட்களும் அம்மனுக்கு விஷேச பூஜைகள், சிறப்பு அபிஷேகம் நடந்ததுடன் பல்வேறு திருக்கோலங்களுடன் அம்மன் திருவீதியுலாவும் நடந்தது. தடை காரணமாக பக்தர்கள் தங்களின் ஊர்களிலேயே காப்பு கட்டி விரதம் அனுஷ்டித்தனர். முக்கியமாக வேண்டுதலின்படி சிறுவர், சிறுமியர் உட்பட பெரியோர் வரை பல்வேறு வேடமிட்டு அம்மனை வழிபட்டார்கள். வேண்டுதலின்படி கிராமங்களிலுள்ள தசரா குழுக்கள் பலவிதமான வேடமணிந்து கிராமப் புறங்களில் கலை நிகழ்ச்சிகளை நடத்தினர்.

 

10ம் நாள் திருவிழா வழக்கம் போன்று மஹிஷா சூரசம்ஹாரம் அன்றைய நடு இரவு குலசேகரப்பட்டினம் சிதம்பரேஸ்வரர் கடற்கரையில் நடப்பது மரபு. ஆனால் கரோனா பரவல் தொற்று தடைகாரணமாக, இந்த ஆண்டு மஹிஷா சூரசம்ஹாரம் ஆலய வளாகத்திலேயே அதிகாலை நடந்தது. பக்தர்கள் பங்கேற்கவும் அனுமதிக்கப்படவில்லை. கோவில் நிர்வாகிகள் முக்கியஸ்தர்கள் உட்பட போலீசார் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர்.

 

முன்னதாக காலை 06.00 மணிக்கு உற்சவ மூர்த்தி அம்மனுக்கு சிறப்பு பூஜை அபிஷேக ஆராதனை வழிபாடு நடத்தப்பட்டது. தசரா திருவிழாவை முன்னிட்டு அன்றைய தினம் காலை முதலே முத்தாரம்மனைத் தரிசிக்க அக்கம் பக்கப் பகுதிகளிலிருந்து ஏராளமான பக்தர்கள் வந்தனர். ஆனால் கரோனா தடை காரணமாக போலீசார் ஊர்ப் பகுதிகளில் பேரிகாட்கள் அமைத்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டவர்கள் வந்த பக்தர்களைத் திருப்பி அனுப்பினர்.

 

சூரசம்ஹாரம் வழக்கமாக நடைபெறும் கடற்கரை மற்றும் பிற பகுதிகள் பக்தர்களின்றிக் களையிழந்து காணப்பட்டன.

 

சார்ந்த செய்திகள்

Next Story

மதுரை வைகை ஆற்றில் எழுந்தருளினார் கள்ளழகர்! 

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Madurai Vaigai River woke up Kallazhakar

உலகப்புகழ் பெற்ற மதுரை சித்திரை விழாவின் முக்கிய நிகழ்வான கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்வு பெரும் விமரிசையாக ஆண்டு தோறும் நடைபெற்று வருகிறது. இதனை லட்சக்கணக்கான மக்கள், பக்தர்கள் நேரில் கண்டு களிப்பர். தகதகக்கும் தங்கக் குதிரையில் கம்பீரமாக வலம்வரும் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபவம் மிகவும் பிரசித்தி பெற்றது.

இந்த சித்திரை விழாவின் ஒரு பகுதியான மீனாட்சி - சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் நேற்று முன்தினம் (21.04.2024)  நடைபெற்றது. அதாவது சித்திரைத் திருவிழாவின் 10ஆம் நாளில் முக்கிய நிகழ்வான மீனாட்சி, சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் திரளான பக்தர்கள் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து மீனாட்சி - சுந்தரேஸ்வரர் தேரோட்டம் நேற்று (22.04.224) கோலாகலமாகத் தொடங்கியது. இதனையொட்டி பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தேரை  உற்சாகத்துடன் வடம் பிடித்து இழுத்து பரவசம் அடைந்தனர். இதற்காக அதிகாலை முதல் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்த வண்ணம் இருந்தனர். அதே சமயம் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்வுக்காக கள்ளழகர் மதுரை வந்தடைந்தார். கள்ளழகர் உடன் பாரம்பரியமாகக் கொண்டு வரப்படுகின்ற அழகர் கோயிலின் உண்டியல்கள் 3 மாட்டு வண்டிகளில் எடுத்து வரப்பட்டது.

இந்நிலையில் மதுரை சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான கள்ளழகர் வைகையாற்றில் எழுந்தருளும் நிகழ்வு இன்று (23.04.2024) நடைபெற்றது. கள்ளழகரை தரிசிக்க ஆயிரக்கணக்கான மக்கள் வைகை ஆற்றில் குவிந்தனர். இதனையடுத்து பச்சைப் பட்டு உடுத்தி தங்கக் குதிரையில் கள்ளழகர் வைகை ஆற்றின் கரைக்கு வருகை புரிந்தார். கள்ளழகர் வைகையாற்றில் இறங்குவதற்கு முன்பு ஆற்றங்கரையில் மாலை அணிவித்து அகழருக்கு மரியாதை செலுத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து பக்தர்களின் கோஷம் விண்ணை முட்ட, தங்கக்குதிரையில் பச்சைப்பட்டு உடுத்தி வைகையாற்றில் கள்ளழகர் இறங்கினார். கள்ளழகர் வைகையாற்றில் எழுந்தருளும் நிகழ்வைக் காண சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரைக்கிளை நீதிபதிகள் ஆர். சுரேஷ்குமார், புகழேந்தி, ஆதி கேசவலு மற்றும் அருள் முருகன் உள்ளிட்டோர் வருகை புரிந்திருந்தது குறிப்பிடத்தக்கது. 

Next Story

மீனாட்சி - சுந்தரேஸ்வரர் தேரோட்டம்; பக்தர்கள் உற்சாகம்!

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
Meenakshi - Sundareswarar Chariot; Devotees excited

உலகப் பிரசித்தி பெற்ற மதுரை சித்திரை விழாவின் ஒரு பகுதியான மீனாட்சி - சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் நேற்று (21.04.2024)  நடைபெற்றது. அதாவது சித்திரை திருவிழாவின் 10ஆம் நாளில் முக்கிய நிகழ்வான மீனாட்சி, சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் திரளான பக்தர்கள் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்றது.

இந்நிலையில் சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான மதுரை மீனாட்சியம்மன் கோயிலின் மீனாட்சி - சுந்தரேஸ்வரர் தேரோட்டம் கோலாகலமாகத் தொடங்கியது. இதனையொட்டி பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தேரை  உற்சாகத்துடன் வடம் பிடித்து இழுத்து வருகின்றனர். இதற்காக அதிகாலை முதல் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்த வண்ணம் இருந்தனர்.

மேலும், மதுரை வைகை ஆற்றில் கள்ளழகர் இறங்கும் நிகழ்வுக்காக மதுரை வந்தடைந்தார். கள்ளழகர். உடன் பாரம்பரியமாக கொண்டு வரப்படுகின்ற அழகர் கோயிலின் உண்டியல்கள் 3 மாட்டு வண்டிகளில் எடுத்து வரப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.