Skip to main content

பால்விலை உயர்வை மக்கள் ஏற்றுக் கொள்வார்கள்! -கே.டி.ராஜேந்திரபாலாஜி சமாளிப்பு!

Published on 20/08/2019 | Edited on 20/08/2019

 

அரசின் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா சிவகாசியில் நடைபெற்றது. பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய பிறகு  தமிழக பால்வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி செய்தியாளர்கள் சந்திப்பில்  “கடந்த 5 ஆண்டுகள் பால் விலை உயர்வு இல்லை என்பதை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும்.

 

ktr

 

ஒவ்வொரு ஆண்டும் ஒரு குறிப்பிட்ட தொகையை விலை உயர்த்தி அறிவித்திருந்தால்,  இது பெரிதாக தெரிந்திருக்காது. தமிழகத்தில் கடந்த 5 ஆண்டுகளாக பால் விலை உயர்த்தப்படவில்லை. பால்விலையை உயர்த்தக்கூடாது என்று தமிழக முதல்வர் முடிவு செய்திருந்தார்.

 

தற்போதைய சூழ்நிலையில் தவிர்க்க முடியாத காரணத்தால் பால் விலையை உயர்த்த வேண்டியிருந்தது.  பால்கொள்முதல் விலையை உயர்த்தி வழங்க வேண்டிய கட்டாயத்தில் அரசு இருப்பதால்தான் இந்தவிலை உயர்வு. இதை பொதுமக்கள் ஏற்றுக்கொள்வார்கள். பொதுமக்களுக்கு பாதிப்பு இல்லாமல் பால்விலை உயர்த்தப்பட்டுள்ளது. மக்கள் மீது சுமையை ஏற்ற வேண்டும் என்று நாங்கள் விரும்பி இந்த விலை உயர்வை அறிவிக்கவில்லை.

 

விவசாயிகளுக்கு கொள்முதல் விலையை உயர்த்தியபோது மிகுந்த மகிழ்ச்சியோடுதான் உயர்த்திக் கொடுத்தோம். அதே நேரத்தில் பால்விலை உயர்வை அறிவிக்கும்போது மிகுந்த சங்கடத்தில்தான் அறிவிக்கப்பட்டுள்ளது. மற்ற மாநிலங்களைவிட தமிழகத்தில் பால் விலை குறைவாகத்தான் இருக்கிறது. குறிப்பாக,  தமிழகத்தில் உள்ள தனியார் பால் விலையை விட ஆவின் விலை குறைவுதான். மற்ற மாநிலங்களில் பால் கொள்முதலில் கொடுக்கப்படும் விலையைவிட தமிழகத்தில் விவசாயிகளுக்குக் கூடுதலாக விலை கொடுக்கப்படுகிறது.

 

அரசு தற்போது எடுத்துள்ள இந்த முடிவுக்கு மக்கள் ஆதரவாகத்தான் இருப்பார்கள். இதை மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட சிலர் மட்டுமே அரசியலாக்குகிறார்கள்.தமிழகத்திலுள்ள 20 மாவட்ட மக்கள் பால் உற்பத்தி பணியில் ஈடுபடுகிறார்கள். அவர்களின் நலன் கருதியே அரசு இந்த முடிவை அறிவித்துள்ளது.” என்று பால் விலை உயர்வுக்கு விளக்கம் அளித்தார். 
 

சார்ந்த செய்திகள்

Next Story

ராஜேந்திர பாலாஜி மீதான மோசடி புகார்; இறுதிக்கட்டத்தில் போலீஸ் விசாரணை!

Published on 11/04/2024 | Edited on 11/04/2024
complaint against Rajendra Balaji Police investigation in the final stage

அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கடந்த அதிமுக ஆட்சியில் பால்வளத்துறை அமைச்சராக இருந்தபோது ஆவின் மற்றும் அரசுத் துறைகளில் வேலை வாங்கித் தருவதாக கூறி பல்வேறு நபர்களிடம் மூன்று கோடி ரூபாய் வரை மோசடி செய்ததாக புகார் எழுந்தது. இது தொடர்பாக விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இத்தகைய சூழலில் அவர் தலைமறைவானார். அதன்பின்னர் போலீசார் அவரை அதிரடியாக கைது செய்தனர்.

இதனைத் தொடர்ந்து ராஜேந்திர பாலாஜி உச்ச நீதிமன்றத்தில் ஜாமீன் பெற்று தற்போது ஜாமீனில் உள்ளார். அதே சமயம் நல்லதம்பி என்பவர் ராஜேந்திர பாலாஜி மீதான மோசடி புகார் தொடர்பான இந்த வழக்கின் விசாரணை மிகவும் மந்தமாக நடப்பதாகவும், அதனால் இதனை வேறு விசாரணை அமைப்புக்கு மாற்ற வேண்டும் எனவும் கோரிக்கை வைத்து சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

இந்நிலையில் இந்த மனு மீதான விசாரணை இன்று (11.04.2024) நீதிபதி ஜெயச்சந்திரன் அமர்வு முன்பு நடைபெற்றது. அப்போது காவல்துறை தரப்பில் வழக்கறிஞர் முகிலன், “இந்த வழக்கின் புலன்விசாரணை இறுதிக் கட்டத்தில் உள்ளது. விரைவில் இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும். எனவே இந்த வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும்” என வாதிட்டார். இதனைப் பதிவு செய்துகொண்ட நீதிபதி நல்லதம்பியின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

Next Story

விருதுநகர் குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் ராஜேந்திர பாலாஜி மீண்டும் ஆஜர்

Published on 15/02/2022 | Edited on 15/02/2022

 

kt rajendra balaji

 

அதிமுக ஆட்சியில் பால்வளத்துறை அமைச்சராக இருந்த ராஜேந்திர பாலாஜி, அரசு வேலை வாங்கித்தருவதாகக் கூறி ரூ.3 கோடி வரை மோசடி செய்ததாகப் புகார் அளிக்கப்பட்டது. இதுதொடர்பாக வழக்குப் பதிவு செய்த விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு காவல்துறையினர், கடந்த ஜனவரி 5ஆம் தேதி ராஜேந்திர பாலாஜியை கைது செய்தனர். அதன்பிறகு, உச்சநீதிமன்ற உத்தரவின் பேரில் நிபந்தனை ஜாமீனில் விடுவிக்கப்பட்ட ராஜேந்திர பாலாஜி, கடந்த சனிக்கிழமை விருதுநகர் குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் விசாரணைக்காக ஆஜரானார். அப்போது அவரிடம் 11 மணி நேரம் தொடர் விசாரணை நடைபெற்றது.

 

இந்நிலையில், இன்றும் விசாரணைக்காக ராஜேந்திர பாலாஜி அழைக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது விருதுநகர் குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் அவர் ஆஜராகியுள்ளார். அவரிடம் விருதுநகர் குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர்.