Skip to main content

குடிகாரனோடு வாழ முடியவில்லை...! விஷம் கலந்த உணவைக் கொடுத்து சிறுமி கொலை; தாய் தற்கொலை முயற்சி!!

Published on 09/11/2021 | Edited on 09/11/2021

 

 

KRISHNAGIRI INCIDENT POLICE INVESTIGATION


கிருஷ்ணகிரி அருகே, குடும்பச் செலவுக்கு பணம் கொடுக்காமல் நித்தமும் மதுபோதையில் சுற்றித்திரிந்த கணவனுடன் வாழப்பிடிக்காமல் விஷம் கலந்த உணவை மகளுக்கு சாப்பிடக் கொடுத்து கொலை செய்துவிட்டு, தாயும் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 

கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி அருகே புக்கசாகரத்தைச் சேர்ந்தவர் கிருஷ்ணப்பா (வயது 30). லாரி ஓட்டுநர். இவருடைய மனைவி வெங்கடலட்சுமி (வயது 28). இவர்களுக்கு மதுமிதா (வயது 9), சுஜித் (வயது 4) ஆகிய இரு குழந்தைகள் உள்ளனர். மகள் மதுமிதா, அதே ஊரில் 7- ஆம் வகுப்பு படித்து வந்தாள். 

 

கணவருக்கு மது குடிக்கும் பழக்கம் உள்ளது. கிருஷ்ணப்பா சம்பாதிக்கும் பணத்தை குடும்பச் செலவுகளுக்கு கொடுக்காமல், மது வாங்கச் செலவிட்டு வந்துள்ளார். மேலும், குடிபோதையில் மனைவியை அடிக்கடி தாக்கி வந்துள்ளார். 

 

நவ. 7- ஆம் தேதி இரவும், அவர்களுக்குள் தகராறு மூண்டுள்ளது. இதற்கு மேலும் கணவருடன் வாழ்ந்து பயனில்லை என்ற முடிவுக்கு வந்த வெங்கடலட்சுமி, தற்கொலை செய்து கொள்ளத் தீர்மானித்துள்ளார். 

 

தான் இறந்து விட்டால், தனது மகளை கணவர் சரியாகப் பார்த்துக் கொள்ள மாட்டார் எனக் கருதி அவரையும் கொன்றுவிடத் தீர்மானித்து, மகளுக்கும் விஷம் கலந்த உணவைச் சாப்பிடக் கொடுத்துள்ளார். அதன்பிறகு, தானும் அந்த உணவைத் தின்றுள்ளார். விஷ உணவை சாப்பிட்ட இருவரும் சிறிது நேரத்தில் மயங்கி விழுந்தனர். 

 

மனைவியும், மகளும் மயக்கத்தில் கிடப்பதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த கிருஷ்ணப்பா மற்றும் உறவினர்கள் அவர்களை மீட்டு ஓசூர் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. எனினும், சிகிச்சைப் பலனின்றி சிறுமி மதுமிதா உயிரிழந்தாள். ஆபத்தான நிலையில் உள்ள வெங்கடலட்சுமிக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 

 

இந்த சம்பவத்தின்போது சிறுவன் சுஜித், பக்கத்து வீட்டுக்கு விளையாடச் சென்றிருந்ததால் அவன் விஷ உணவை சாப்பிடாமல் உயிர் பிழைத்தான். இச்சம்பவம் குறித்து பேரிகை காவல்நிலைய காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

உயிரைப் பறித்த பாம்பு; தன்னார்வலருக்கு நேர்ந்த சோகம்!

Published on 13/04/2024 | Edited on 13/04/2024
The snake that took the life; Tragedy befell the volunteer

குடியிருப்பு பகுதிகளில் புகுந்து அச்சத்தை ஏற்படுத்தும் பாம்புகளைப் பிடித்து வந்த தன்னார்வலர்  பாம்பு கடித்து உயிரிழந்த சம்பவம் கடலூரில் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் உமர் அலி. பாம்பு பிடிக்கும் தன்னார்வலராக இருந்த உமர் அலிக்கு 2  குழந்தைகள் உள்ளனர். இதனிடையில் நேற்று இரவு பண்ருட்டி முத்தையா நகரில் வீடு ஒன்றில் பாம்பு புகுந்ததாக அவருக்குத் தகவல் கொடுக்கப்பட்டது. அதே நேரம் தீயணைப்புத் துறைக்கும் தகவல் கொடுக்கப்பட்டது. உமர் அலிக்கு முன்பே அங்கு சென்ற தீயணைப்புத் துறையினர் வீட்டில் புகுந்திருந்த நாகப்பாம்பைப் பிடித்து விட்டனர்.

பின்னர் அங்கு வந்த உமர் அலி, அந்தப் பாம்பைக் காப்புக்காட்டில் தான் விட்டு விடுவதாக வனத்துறையிடம் கேட்டுள்ளார். அப்பொழுது அவர் வைத்திருந்த பாட்டிலுக்குள் பாம்பை மாற்றிய போது உமர் அலியைப் பாம்பு கடித்தது. உடனடியாக கடலூர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சைப் பலனின்றி உமர் அலி உயிரிழந்தார்.

இந்தச் சம்பவத்தால் தேவையான பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாமல் தன்னார்வலர்கள் பாம்புகளைப் பிடிப்பதாகவும், இனி கடலூர் மாவட்டத்தில் தன்னார்வலர்கள் பாம்புகளைப் பிடிக்க அனுமதிக்கக் கூடாது எனக் கோரிக்கைகள் எழுந்துள்ளது.

Next Story

பொதுமக்கள் 11 பேரைக் கடத்தி துப்பாக்கிச்சூடு; பயங்கரவாதிகளால் பதற்றம்!

Published on 13/04/2024 | Edited on 13/04/2024
11 civilians kidnapped and and incident happened in pakistan

பாகிஸ்தான் நாட்டின் பதற்றம் நிறைந்த மாகாணம் பலுசிஸ்தான். இந்தப் பலுசிஸ்தான் பகுதியானது, ஆப்கானிஸ்தான் - ஈரான் எல்லையை ஒட்டி தென்மேற்கு பாகிஸ்தானில் உள்ளது.

இந்த நிலையில், பலுசிஸ்தான் மாகாணம் நோஷ்கி மாவட்டத்தில் உள்ள நெடுஞ்சாலையில் ஒரு பேருந்து சென்று கொண்டிருந்தது. அப்போது, அந்த நெடுஞ்சாலை பகுதியில் துப்பாக்கி ஏந்திய ஒரு பயங்கரவாதக் குழு ஒன்று அந்தப் பேருந்தை வழிமறித்துள்ளது. மேலும், அந்தப் பேருந்தில் இருந்த 9 பேரை துப்பாக்கி முனையில் கடத்திச் சென்று துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்துள்ளனர்.

அதே போல், அந்த நெடுஞ்சாலையில் சென்ற கார் மீது பயங்கரவாதிகள் துப்பாக்கியால் சுட்டனர். இதில், 2 பேர் பலியாகியுள்ளனர், மேலும் 2 பேர் காயமடைந்தனர். இந்தச் சம்பவம் பாகிஸ்தானில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார், அனைவரது உடல்களையும் துப்பாக்கி குண்டுகள் துளைத்த நிலையில், அங்குள்ள பாலம் அருகே மலைப்பகுதியில் பிணமாக  மீட்டனர்.

பின்னர், இந்தச் சம்பவம் தொடர்பாக பாகிஸ்தான் போலீசார் தரப்பில் தெரிவிக்கையில், ‘நோஷ்கி மாவட்டத்தில் துப்பாக்கி ஏந்திய ஒரு பயங்கரவாதக் குழு ஈரானுக்கு சென்ற ஒரு பேருந்தை வழிமறித்து, 9 பேரை கடத்தி துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்துள்ளனர். கொல்லப்பட்டவர்கள் அனைவரும் கிழக்கு மாகாணமான பஞ்சாப்பை சேர்ந்தவர்கள். இதுவரை, இந்தத் தாக்குதலுக்கு எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை’ என்று கூறப்படுவதாக சொல்லப்படுகிறது. இந்தப் பயங்கரவாத தாக்குதல் சம்பவத்துக்கு பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் மொஹ்சின் நக்வி, பலுசிஸ்தான் முதல்வர் மிர் சர்பராஸ் புக்டி ஆகியோர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.