Skip to main content

வீடு புகுந்து தேங்காய் வியாபாரியை வெட்டிக்கொன்ற முகமூடி கொள்ளையர்கள்!

Published on 23/10/2019 | Edited on 23/10/2019

கிருஷ்ணகிரி அருகே, வீடு புகுந்து தேங்காய் வியாபாரியை வெட்டிக் கொன்றுவிட்டு தப்பி ஓடிய முகமூடி கொள்ளையர்களை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். 


கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டை அருகே உள்ள எடவனஅள்ளியைச் சேர்ந்தவர் சாக்கப்பன் (65). தேங்காய் வியாபாரி. இவருடைய மனைவி பொன்னியம்மாள் (55). கண் பார்வையற்றவர். சாக்கப்பனின் தாய் சூடம்மாள் (90) என்பவரும் இவர்களுடன் வசித்து வருகிறார். இவர்களின் வீடும், தோட்டமும் ஒரே இடத்தில் உள்ளது. இந்நிலையில் கடந்த சில நாள்களுக்கு முன்பு, சாக்கப்பனின் மகன் வேணுகோபால் (30), அவருடைய மனைவி சிவரஞ்சனி (24) ஆகியோர் வீட்டிற்கு வந்துள்ளனர். 

krishnagiri incident police investigation


நேற்று முன்தினம் (21/10/2019) இரவு, அனைவரும் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தனர். அப்போது வீட்டின் கதவை சிலர் தட்டுவது தெரிய வந்தது. சாக்கப்பன் கதவை திறந்து பார்த்தபோது முகமூடி அணிந்த 6 கொள்ளையர்கள் வீட்டிற்குள் 'திபுதிபு'வென நுழைந்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த சாக்கப்பன், கூச்சல் போட்டார். இதனால் ஆத்திரம் அடைந்த கொள்ளையர்கள், சாக்கப்பனின் கை மணிக்கட்டில் கத்தியால் வெட்டினர். ரத்தம் பீறிட்டு வெளியேறியது. அவருடைய அலறல் சத்தம் கேட்டு வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த மற்றவர்களும் விழித்துக்கொண்டு நுழைவு வாயில் அருகே வந்தனர். 


கொள்ளை கும்பல் அவர்களிடம் கத்தி முனையில் நகை, பணம் கேட்டு மிரட்டியது. சுதாரித்துக் கொண்ட சாக்கப்பனின் மருமகள் சிவரஞ்சனி உடனடியாக வீட்டின் மற்றொரு அறைக்குள் சென்று உள்பக்கமாக தாழிட்டுக் கொண்டார். அங்கிருந்து செல்போன் மூலம் அக்கம்பக்கத்தினருக்கு தகவல் அளித்தார்.  இதுகுறித்து தகவல் அறிந்து அக்கம்பக்கத்தினர் ஓடி வந்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த கொள்ளையர்கள் அங்கிருந்து தப்பி ஓடினர். 

 


கொள்ளையர்களின் தாக்குதலால் பலத்த காயம் அடைந்த சாக்கப்பனை மீட்டு, ஓசூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். மேல் சிகிச்சைக்காக ஓசூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு நடந்த பரிசோதனையில் சாக்கப்பன் வரும் வழியிலேயே உயிரிழந்து விட்டது தெரிய வந்தது. 


இதுகுறித்து ராயக்கோட்டை காவல்நிலையத்திற்கு தகவல் அளித்தனர். டிஎஸ்பி முரளி (பொறுப்பு), ஆய்வாளர் சிவலிங்கம் மற்றும் காவலர்கள் நிகழ்விடம் வந்து விசாரணை மேற்கொண்டனர். இரவு நேரத்தில் முகமூடி கொள்ளையர்கள் தேங்காய் வியாபாரியை வெட்டிக்கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கொலையாளிகளை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.


 

சார்ந்த செய்திகள்

Next Story

தடுப்பணையில் குளிக்கச் சென்ற சிறுவர்களுக்கு நேர்ந்த சோகம்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Incident happened to the boys who went to dig in the dam

கோவை மாவட்டம், ஆனைமலை அருகே குரங்கு நீர்வீழ்ச்சி, அறிவுத்திருக்கோவில், ஆழியார் பூங்கா, வால்பாறை உள்ளிட்ட பல்வேறு சுற்றுலாத் தலங்கள் உள்ளன. கோடை காலத்தின் போது, இந்தச் சுற்றுலா தலங்களுக்குப் பல்வேறு பகுதிகளில் இருந்து சுற்றுலாப் பயணிகள் வருகை தந்து தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்துவது வழக்கம். 

இந்த நிலையில், குரங்கு நீர்வீழ்ச்சி தடுப்பணையில் பிரவீன் (17), தக்சன் (17), கவீன் (16) ஆகிய மூன்று பள்ளி சிறுவர்கள் குளிக்கச் சென்றுள்ளனர். அப்போது, அங்கு அவர்கள் தடுப்பணையின் ஆழமான இடத்திற்கு சென்ற போது, மூவரும் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். பள்ளி மாணவர்கள் நீரில் மூழ்கி இறந்த சம்பவம் தொடர்பாக போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. 

தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார், பலியான மூவரின் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்தச் சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தடுப்பணையில் பள்ளி மாணவர்கள் மூவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

Next Story

நாயைக் குளிப்பாட்ட சென்ற அக்கா, தம்பிக்கு நேர்ந்த துயரம்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Both sister and brother drowned in lake while going to bathe their dog

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த கொத்தகோட்டை, புளியந்தோப்பு வட்டம் பகுதியைச் சேர்ந்த கூலித் தொழிலாளிகள் முருகன்- மாலதி தம்பதியினர். ஜோதிலிங்கம் (10) ஜோதிகா (8), ஜோதிஷ் (7) ஆகிய மூன்று குழந்தைகள் உள்ளனர். இவர்கள் அதே பகுதியில் ஒரு குடிசை வீட்டில் வசித்து வந்த நிலையில்  கொத்தகோட்டை அரசு துவக்கப்பள்ளியில் படித்து வந்துள்ளனர்.

இந்த நிலையில் பள்ளி விடுமுறை என்பதால் ஜோதிகா மற்றும் ஜோதிஷ் ஆகிய இருவரும் வீட்டின் அருகே உள்ள எறாகுட்டை ஏரியில் தங்களது வீட்டில் வளர்த்து வந்த நாயை குளிப்பாட்ட கொண்டு சென்றுள்ளனர். அப்போது எதிர்பாராத விதமாக  ஏரியில் தவறி விழுந்து அக்கா ஜோதிகா(8) தம்பி ஜோதிஸ் (7) ஆகிய இருவரும் நீரில் மூழ்கியுள்ளனர். இதனைக் கண்ட அப்பகுதி மக்கள் சிலர்  நீரில் மூழ்கிய இருவரையும் நீண்ட நேரம் போராடி சடலமாக மீட்டனர்.

இது குறித்து தகவல் அறிந்த வாணியம்பாடி கிராமிய போலிசார் ஏரியில் மூழ்கி உயிரிழந்த இரண்டு சிறுவர்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

இது தொடர்பாக உயிரிழந்த சிறுவர்களின் பெற்றோர் கூறுகையில்: தாங்கள் இருவரும் மூன்று குழந்தைகளுடன் குடிசை வீட்டில் வசித்து கூலி வேலை செய்து வருகிறோம். கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு அந்த குடிசை வீட்டையும் பக்கத்து வீட்டுக்காரர் எரித்து விட்டார். அப்போது வீட்டில் இருந்த குழந்தைகளின் சாதி சான்று மற்றும் ஆதார் அட்டை உள்ளிட்ட பல்வேறு ஆவணங்கள் எரிந்து விட்டது. துறை சார்ந்த அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கை எடுக்கவில்லை. தற்போது வரை குடிசை வீடும் இல்லாமல் ஆங்காங்கே வீதியிலும், கோயில் இடங்களிலும் மூன்று குழந்தைகளை வைத்து வசித்து வருவதாக வேதனையுடன் தெரிவித்தனர்.