Skip to main content

திருமணத்தை மீறிய உறவு; ஆண் நண்பருடன் சேர்ந்து கணவனை கொலை செய்த மனைவி

Published on 15/03/2023 | Edited on 15/03/2023

 

krishnagiri husband and wife incident due boyfriend issue 

 

கிருஷ்ணகிரி மாவட்டம் என்.தட்டக்கல் என்ற பகுதியைச் சேர்ந்தவர் கந்தன் (வயது 35). டைல்ஸ் கற்கள் வியாபாரியான இவர் சரக்கு வாகனம் ஒன்றையும் வாடகைக்கு ஓட்டி வந்துள்ளார். கடந்த 5 ஆண்டுகளுக்கு முன் திவ்யா (வயது 27) (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற பெண்ணை காதலித்து திருமணம் சித்து கொண்டார். இவர்களுக்கு இரு மகன்கள் உள்ளனர்.

 

இந்நிலையில் கந்தன் வாடகை வண்டியை ஓட்டுவதற்காக அடிக்கடி வெளியில் சென்று வந்துள்ளார். இதற்கிடையில், திவ்யாவிற்கு அதே பகுதியில் வசிக்கும் சிவசக்தி (வயது 23) என்பவர் பால் பாக்கெட்டுகளை வாங்கிக் கொடுத்து வந்துள்ளார். இதனால் இருவருக்கும் இடையில் பழக்கம் ஏற்பட்டு தனிமையில் சந்தித்து வந்துள்ளனர். மேலும், அவ்வப்போது வாட்ஸ்ஆப்பில் வீடியோ கால் மூலம் பேசி வந்துள்ளனர். இது குறித்து அறிந்த கந்தன் திவ்யாவை கண்டித்துள்ளார்.

 

இந்நிலையில், நேற்று முன்தினம் வெளியூருக்கு வாடகைக்கு செல்வதாகக் கூறிவிட்டு கந்தன் சரக்கு வாகனத்தை எடுத்துக்கொண்டு வீட்டை விட்டுச் சென்றுள்ளார். இதனைத் தொடர்ந்து திவ்யா, சிவசக்தியை தொலைபேசி மூலம் அழைத்து இருவரும் வீட்டில் தனிமையில் இருந்துள்ளனர். அப்போது வேலையின்றி வீட்டிற்குத் திரும்பிய கந்தன், திவ்யாவும் சிவசக்தியும் தனிமையில் இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்ததுடன், திவ்யாவிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு அவரை அடித்துள்ளார்.

 

இதனால் ஆத்திரமடைந்த திவ்யாவும் சிவசக்தியும் சேர்த்து வீட்டில் இருந்த மிளகாய் பொடியை கந்தனின் கண்ணில் தூவி உள்ளனர். மேலும், வீட்டில் இருந்த கத்தியை எடுத்து கந்தனின் கழுத்தில் தாக்கி உள்ளனர். இதில் பலத்த காயமடைந்த கந்தன் உயிரிழந்துள்ளார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

உறவினர் வீட்டு விஷேஷத்திற்குச் சென்ற மகன்; தாய்க்குக் காத்திருந்த அதிர்ச்சி!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 young man who went to visit a relative's house passed away

ஈரோடு, சூரம்பட்டி, நேரு வீதியைச் சேர்ந்தவர் சுலோச்சனா (73). இவரது கணவர் மருதாசலம் (75). இவர்களுக்கு மூன்று மகன்கள் உள்ளனர். கடைசி மகன் மட்டும் திருமணம் ஆகி தனியாக வசித்து வருகிறார். மற்ற இரண்டு மகன்களும் பெற்றோர்களுடன் வசித்து வந்தனர். 2-வது மகன் மோகனுக்கு மது குடிக்கும் பழக்கம் உள்ளது. இந்த நிலையில், கடந்த 21ஆம் தேதி சித்தோடு, சாணார்பாளையத்தில் உள்ள தங்களது உறவினர் வீட்டு விசேஷத்துக்குச் சென்று வருவதாக கூறிச் சென்ற மோகன் அதன்பின் வீடு திரும்பவில்லை.

இதையடுத்து, பல்வேறு இடங்களில் மகனைத் தேடி வந்த தாய் சுலோச்சனா, நேற்று சித்தோடு பகுதியில் சென்று தன் மகன் குறித்து விசாரித்துள்ளார். அப்போது, கடந்த 21ஆம் தேதி மதுபோதையில் சித்தோடு வந்த மோகன் அங்குள்ள செல்போன் கடை முன்பாக மயங்கிக் கிடந்தவர், சிறிது நேரத்தில் இறந்து விட்டதாகவும், இதையடுத்து, அங்கிருந்தவர்கள் மோகனின் உடலை சித்தோடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து, சுலோச்சனா அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சென்று இறந்தது தனது மகன் மோகன் தான் என்பதை உறுதி செய்தார்.  இதுகுறித்து நேற்று அவர் அளித்த புகாரின் பேரில், சித்தோடு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story

தேஜஸ்வி சூர்யா மீது வழக்குப்பதிவு

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Case registered against Tejaswi Surya

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெற உள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் கர்நாடக மாநிலம் பெங்களூருவின் தெற்கு மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சமூக வலைத்தள பக்கமான எக்ஸ் வலைத்தள பக்கத்தில் மதரீதியாக வாக்கு சேகரிப்பது தொடர்பான வீடியோ ஒன்றை பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா வெளியிட்டிருந்தார். இந்நிலையில் ஜெயநகர் போலீசார் அவர் மீது தற்போது வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஏற்கெனவே இன்று காலை மற்றொரு பாஜக வேட்பாளரான சுதாகர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தகுந்தது.