Skip to main content

5 நாளில் 3 பேரை அடுத்தடுத்து தாக்கி கொன்ற ஒற்றை யானை! கிராம மக்கள் கலக்கம்!!

Published on 21/08/2020 | Edited on 21/08/2020

 

krishnagiri district sulur forest elephant peoples

 

சூளகிரி அருகே, ஆவேசமாக சுற்றித்திரியும் ஒற்றை யானை, கடந்த 5 நாள்களில் அடுத்தடுத்து மூன்று பேரை தாக்கி கொன்றதால், சுற்று வட்டார கிராம மக்கள் கலக்கம் அடைந்துள்ளனர்.

 

கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி அருகேயுள்ள ஏ.செட்டிப்பள்ளி பகுதியில் முகாமிட்டுள்ள ஒற்றை யானை, இரவு நேரங்களில் சுற்று வட்டார கிராமங்களுக்குள் புகுந்து, பயிர்களை நாசம் செய்து வருகிறது. இந்த யானை, கர்நாடகா மாநிலம் கே.ஜி.எஃப். வனப்பகுதியில் இருந்து உணவு தேடி, சூளகிரி காட்டுப்பகுதிக்குள் வந்திருப்பது தெரிய வந்துள்ளது.

 

கடந்த 16- ஆம் தேதி காலை, புலியரசி கிராமத்தை சேர்ந்த முனிராஜ், ஜோகீர்பாளையத்தை சேர்ந்த ராஜேந்திரன் ஆகியோர் ஏ.செட்டிப்பள்ளி பகுதியில் உள்ள அவர்களுடைய விவசாய நிலத்திற்கு சென்றனர். அப்போது, புதர் பகுதிக்குள் மறைந்து இருந்த ஒற்றை யானை, திடீரென்று வெளியே வந்து இருவரையும் துரத்திச்சென்று தாக்கியது.

 

யானை தாக்கியதில் பலத்த காயம் அடைந்த இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இதையடுத்து, அந்த ஒற்றை யானையை கர்நாடகா மாநிலம் கே.ஜி.எஃப். வனப்பகுதிக்குள் விரட்ட, வனத்துறையினர் நடவடிக்கை எடுத்தனர். அப்போது, தக்காளி தோட்டத்திற்குள் பதுங்கியிருந்த ஒற்றை யானை, மீண்டும் ஏ.செட்டிப்பள்ளி வனப்பகுதிக்குள் புகுந்ததால் அதை விரட்டும் பணியில் பின்னடைவு ஏற்பட்டது.

 

மீண்டும் நேற்று முன்தினம் சூளகிரி அருகே, ஆபிரி காட்டுப் பகுதியில் விவசாயி முனுசாமி என்கிற அப்பையா (57) யானையால் தாக்கப்பட்டு உயிரிழந்தார். ஆக. 18- ஆம் தேதியன்று வீட்டில் இருந்து வெளியே சென்ற அவர், மீண்டும் வீடு திரும்பவில்லை.

 

குடும்பத்தினர் பல இடங்களில் தேடியும் அவரைப்பற்றிய விவரங்கள் தெரியவில்லை. இதற்கிடையே, ஆபிரி காட்டுப்பகுதியில் அப்பையா சடலமாக கிடப்பதாக கிராமத்தினர் சூளகிரி காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர். இதையடுத்து, காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, சடலத்தை கைப்பற்றி, உடற்கூறாய்வுக்காக ஓசூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

 

ஏ.செட்டிப்பள்ளி காட்டில் இருந்து நள்ளிரவில் ஒற்றை யானை வெளியேறி சுற்றித்திரிந்தபோது, அந்த வழியாக சென்ற அப்பையாவை யானை மிதித்து கொன்றிருப்பது தெரிய வந்துள்ளது. அப்பையா, ஆபிரியில் உள்ள தனது விவசாய நிலத்தை கவனித்துக்கொண்டு, அங்கேயே தனியாக குடிசை போட்டு வசித்து வந்தார். இது ஒருபுறம் இருக்க, அந்த ஒற்றை யானை, ஆக. 19- ஆம் தேதி, ஓசூர் பேரண்டபள்ளியில் உள்ள விவசாய நிலங்களில் ஆவேசமாக சுற்றித்திரிந்ததை ஊர் மக்கள் பார்த்துள்ளனர்.

 

கடந்த ஐந்து நாட்களில் மூன்று பேரை தாக்கி கொன்ற ஒற்றை யானை, ஆக்ரோஷத்துடன் சுற்றித்திரிவதால் ஏ.செட்டிப்பள்ளி மற்றும் சுற்றுவட்டார கிராம மக்கள் கலக்கம் அடைந்துள்ளனர். அந்த ஒற்றை யானையை, கும்கி யானையை மூலமோ அல்லது மயக்க ஊசி செலுத்தியோ பிடிக்க வேண்டும் என்று கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

18 மாவோயிஸ்டுகள் பலி; சத்தீஸ்கரில் பரபரப்பு!

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
nn

சத்தீஸ்கர் மாநிலத்தில் 18 மாவோயிஸ்டுகள் சுட்டுக் கொலை செய்யப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

சத்தீஸ்கர் மாநிலம் கன்கர் மாவட்டத்தில் நக்சலைட்டுகள் மற்றும் பாதுகாப்பு படைகளுக்கு இடையே துப்பாக்கிச் சூடு நடைபெற்றது. இதில் மொத்தமாக 18 மாவோயிஸ்டுகள் சுட்டுக்கொலை செய்யப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இந்தத் தாக்குதலில் பாதுகாப்புப் படையைச் சேர்ந்த மூன்று வீரர்கள் படுகாயம் அடைந்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

மொத்தமாக 18 மாவோயிஸ்டுகளின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. அவர்கள் பயன்படுத்திய துப்பாக்கிகள், மெஷின் கன்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதில் ஒரே ஒரு எல்லை பாதுகாப்பு வீரரின் காலில் துப்பாக்கி குண்டு பாய்ந்து இருப்பதாகவும் ஆனால் உயிருக்கு எந்தவிதமான சேதம் இல்லை என்று தகவல் வெளியாகியுள்ளது. தேர்தல் நேரத்திற்கு முன்பாக நடைபெற்ற தாக்குதல் சம்பவத்தில் 18 மாவோயிஸ்டுகள் கொலை செய்யப்பட்டிருப்பது முக்கிய சம்பவமாக பார்க்கப்படுகிறது.  நக்சலைட்டுகள் ஆதிக்கம்  அதிகம் இருக்கும் சத்தீஸ்கரில் இந்தச் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Next Story

சாலையோரத்தில் கருகி உயிரிழந்து கிடந்த இளம் பெண்; விசாரணையில் வெளியான பகீர் தகவல்

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
A young woman was burnt to on the roadside; Bagheer information revealed in the investigation

கேரளாவில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு சாலையோரத்தில் இளம்பெண் கருகிய நிலையில் உயிரிழந்த சம்பவத்தில், முறையற்ற தொடர்பால் பெண் கொலை  செய்யப்பட்டது விசாரணையில் தெரியவந்துள்ளது.

கேரள மாநிலம் பாலக்காடு காங்காட்டுபடி பகுதியைச் சேர்ந்தவர் பிரவியா(31). கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு பிரவியா காணாமல் போன நிலையில் அவரை பல்வேறு இடங்களில் உறவினர்கள் தேடி வந்தனர். இந்நிலையில் பட்டாம்பி எனும் பகுதிக்கு அருகேயுள்ள சாலையோரத்தில் கருகிய நிலையில் கிடந்த சடலத்தைக் கைப்பற்றிய போலீசார் இதுகுறித்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் அது பிரவியாவின் உடல் என்பது தெரிய வந்தது.

தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில் ஆலுரைச் சேர்ந்த சந்தோஷ் என்பவர் கொலை செய்தது தெரிய வந்துள்ளது. ஏற்கெனவே திருமணமான பிரவியா கருத்து வேறுபாட்டால் கணவரைப் பிரிந்து வாழ்ந்து வந்தார். சந்தோஷ் வைத்திருந்த ஜெராக்ஸ் கடையில் வேலை பார்த்து வந்துள்ளார் பிரவியா. அப்பொழுது அவருக்கும் சந்தோஷிற்கும் முறையற்ற தொடர்பு ஏற்பட்டுள்ளது.

சந்தோஷுக்கும் திருமணமாகி குழந்தைகள் உள்ளது. இந்த நிலையில் சில நாட்களாக சந்தோஷிடம் பேசாமல் தவிர்த்து வந்துள்ளார் பிரவியா. அந்த நேரத்தில் பிரவியாவிற்கு வேறு ஒருவருடன் திருமணம் நிச்சயம் செய்யப்பட்டது. வரும் 21ஆம் தேதி திருமணம் நடைபெற திட்டமிடப்பட்டிருந்தது. இந்த நிலையில் சந்தோஷிடம் பேசுவதை முற்றிலுமாக பிரிவியா தவிர்த்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சந்தோஷ் அவரை கடத்திச் சென்று எரித்து கொலை செய்து, உடலை சாலை ஓரத்தில் வீசிவிட்டுச் சென்றுள்ளார். எப்படியும் போலீசார் உடலைக் கைப்பற்றி விசாரித்து தன்னைப் பிடித்து வருவார்கள் எனக்கருதிய சந்தோஷ், வீட்டிற்கு சென்று தற்கொலை செய்து கொண்டார். இந்தச் சம்பவம் கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.