Skip to main content

மின்சாரம் தாக்கி குழந்தை உள்பட மூன்று பேர் உயிரிழப்பு!

Published on 08/08/2021 | Edited on 08/08/2021

 

krishnagiri district power three persons incident police investigation

 

கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அருகே சிங்காரப்பேட்டையில் உள்ள உள்ள அம்பேத்கர் நகரில் வசித்து வருபவர் மூதாட்டி இந்திரா (வயது 52). இவருக்கு மகாலட்சுமி (வயது 25) என்ற மகள் உள்ளார். மகாலட்சுமி திருமணமாகி நான்கு ஆண்டுகள் ஆகிறது. இவர் கணவரால் கைவிடப்பட்ட நிலையில் தனது தாயுடன் வசித்து வருகிறார். மகாலட்சுமிக்கு மூன்று வயதில் அவந்தினா என்ற பெண் குழந்தை உள்ளது. 

 

இந்த நிலையில், மூதாட்டி இந்திரா வழக்கம்போல் வீட்டில் துணி துவைத்து, வீட்டின் முன் உள்ள கம்பியில் துணியை காய வைத்த போது, அருகே இருந்த மின்கம்பியில் இருந்து மூதாட்டி மீது மின்சாரம் பாய்ந்தது. மேலும், மூதாட்டியுடன் அருகில் இருந்த மூன்று வயது பெண் குழந்தை மீதும் மின்சாரம் பாய்ந்தது. இருவரும் துடிப்பதைப் பார்த்த மகாலட்சுமி அவர்களைக் காப்பாற்ற முயன்ற போது, மின்சாரம் தாக்கிய நிலையில், மூன்று பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். 

 

தகவலறிந்து , சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த சிங்காரப்பேட்டை காவல்துறையினர் சடலங்களைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதைத் தொடர்ந்து, இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 
 

சார்ந்த செய்திகள்