Skip to main content

போதை தலைக்கேறியது... தொழிலாளியைத் தீர்த்துக்கட்டிய நண்பர்கள்

Published on 24/01/2022 | Edited on 24/01/2022

 

 

krishnagiri district incident police investigation


கெலமங்கலம் அருகே மதுபோதை தலைக்கேறிய நிலையில், நண்பன் என்றும் பாராமல் கல்லால் தாக்கிக் கொலை செய்த சக நண்பர்களைக் காவல்துறையினர் கைது செய்தனர்.

 

கிருஷ்ணகிரி மாவட்டம், கெலமங்கலம் அருகே உள்ள கூட்டூரைச் சேர்ந்தவர் அர்ஜூனப்பா. இவருடைய மகன் பழனி (வயது 26). அதே பகுதியைச் சேர்ந்த முனிராஜ் மகன் சாமி (வயது 19) மற்றும் மாதேஷ் என்பவரின் மகன் கோடாளி என்கிற விஜய் (வயது 23). இவர்கள் மூன்று பேரும் நெருங்கிய நண்பர்கள். கூலித்தொழிலாளிகளான இவர்கள், எங்குச் சென்றாலும் ஒன்றாகச் செல்வது, போவதுமாக இருப்பார்கள். 

 

இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை (ஜன. 21) இரவு, மூன்று பேரும் சேர்ந்து அப்பகுதியில் உள்ள சுடுகாடு அருகில் அமர்ந்து மது குடித்தனர். 

 

அப்போது பழனி, விளையாட்டாக விஜய்யை குச்சியால் அடித்துள்ளார். போதை தலைக்கேறிய நிலையில் இருந்த சாமி, விஜய்யை அடித்தது ஏன் என்று கேட்டபடியே அவரைத் தாக்கியிருக்கிறார். இதனால் இருவருக்கும் பெரிய அளவில் கைகலப்பு ஏற்பட்டது. 

 

அப்போது கீழே கிடந்த கல்லை எடுத்து பழனியின் தலையில் போட்டுள்ளார். ரத்த வெள்ளத்தில் பழனி கீழே சரிந்தார். அவரும் போதையில் இருந்ததால் எதிர்த்து தாக்க முடியவில்லை. அதே கல்லை எடுத்து விஜய்யும், பழனியின் மார்பின் மீது போட்டுள்ளார். இதில், அதே இடத்தில் பழனி உயிரிழந்தார். இதையடுத்து அவர்கள் இருவரும் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். 

 

சனிக்கிழமை (ஜன. 22) காலையில் அந்த வழியாகச் சென்ற சிலர், பழனியின் சடலம் கிடப்பது குறித்து கெலமங்கலம் காவல்நிலையத்திற்குத் தகவல் அளித்தனர். 

 

சம்பவ இடம் விரைந்த காவல்துறையினர், சடலத்தைக் கைப்பற்றி உடற்கூராய்வுக்காக தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், கெலமங்கலத்தில் ஓரிடத்தில் பதுங்கி இருந்த சாமி, விஜய் ஆகிய இருவரையும் மடக்கிப்பிடித்து கைது செய்தனர். இருவரிடமும் தீவிர விசாரணை நடந்து வருகிறது. 

 

மது போதையில் நண்பர் என்றும் பாராமல் சக நண்பர்களே கல்லால் தாக்கிக் கொலை செய்த சம்பவம் கெலமங்கலம் சுற்றுவட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பட்டப்பகலில் வீடு புகுந்து படுகொலை; 6 மணி நேரத்தில் பிடிபட்ட குற்றவாளி

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
Cruelty to a woman in broad daylight; Criminal caught in 6 hours

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் வீட்டில் தனியாக இருந்த பெண் ஒருவர் சரமாரியாக வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இந்த வழக்கில் 6 மணி நேரத்தில் குற்றவாளியை போலீசார் கைது செய்துள்ளனர்.

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி பகுதியைச் சேர்ந்தவர் குமார். ஓய்வு பெற்ற மின்வாரிய ஊழியரான இவர் நேற்று வெளியே சென்றுவிட்டு வீடு திரும்பியுள்ளார். அப்போது வீட்டின் ஹாலில் அவருடைய மனைவி சரஸ்வதி வெட்டுக் காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் கிடந்தார். இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த குமார் கூச்சலிட்டுள்ளார். அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்து பார்த்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

தகவலறிந்து உடனடியாக சம்பவம் நடந்த இடத்திற்கு வந்த போலீசார், ரத்த வெள்ளத்தில் உயிரிழந்து கிடந்த சரஸ்வதியின் உடலைப் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மர்ம நபர்கள் சரஸ்வதியை வெட்டிப் படுகொலை செய்துவிட்டு அவர் கழுத்தில் இருந்த தங்க நகையைப் பறித்துச் சென்றது விசாரணையில் தெரியவந்தது. இருப்பினும் இந்த கொலை, நகைக்காக நடந்ததா அல்லது வேறு ஏதேனும் முன் விரோதப் பிரச்சனை காரணமாக நிகழ்ந்ததா என்பது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர். பட்டப்பகலில் பெண் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Cruelty to a woman in broad daylight; Criminal caught in 6 hours

இந்த சம்பவத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், உயிரிழந்த பெண்ணின் சகோதரி மகனே கொலையில் ஈடுபட்டது தெரியவந்தது. பணம் கேட்டுத் தராததால் ஆத்திரத்தில் இருந்த சரஸ்வதியின் சகோதரி மகன் அசோக் குமார், வீட்டில் சரஸ்வதி தனியாக இருந்த பொழுது கத்தியால் குத்திக் கொலை செய்தது தெரியவந்தது.

Next Story

யோகா மாஸ்டர் அடித்து கொலை; விசாரணையில் பகீர்!

Published on 23/03/2024 | Edited on 23/03/2024
Transgressive yoga master beaten to ; Body recovery in a ruined well

கராத்தே மாஸ்டர் காணாமல் போன சம்பவத்தில், கொலை செய்யப்பட்டு கிணற்றில் வீசப்பட்டது  சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

சென்னை கிழக்கு கடற்கரை சாலை பகுதியிலுள்ள கானத்தூர் ரெட்டி குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் லோகநாதன். இவர் அந்த பகுதியில் பள்ளி மாணவர்களுக்கு கராத்தே மாஸ்டராகவும், யோகா மாஸ்டராகவும் பணியாற்றி வந்தார். இவரிடம் பல்வேறு குழந்தைகள் கராத்தே மற்றும் யோகா பயிற்சிகள் எடுத்து வந்த நிலையில் கராத்தே மாஸ்டர் லோகநாதனை கடந்த 13ஆம் தேதியிலிருந்து காணவில்லை என அவரது மகன் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி வந்ததோடு காணாமல்போன லோகநாதன் தேடி வந்தனர். லோகநாதன் வைத்திருந்த செல்போனில் அவருடன் இறுதியாக பேசியது யார் என்பது தொடர்பாக போலீசார் விசாரணை செய்தனர். விசாரணையில் ஓஎம்ஆர் சாலையில் உள்ள நாவலூர் காரனை பகுதியைச் சேர்ந்த சுரேஷ் -கஸ்தூரி தம்பதியிடம் செல்போனில் பேசியது தெரியவந்தது.

சந்தேகத்தின் அடிப்படையில் இரண்டு பேரையும் காவல் நிலையத்திற்கு வரவழைத்து விசாரித்த விசாரித்தபோது யோகா மாஸ்டர் லோகநாதன் அடித்துக் கொலை செய்யப்பட்ட பகீர் தகவல் வெளிவந்தது. செம்மஞ்சேரி பூங்காவில் வைத்து லோகநாதன் பள்ளி மாணவ மாணவிகளுக்கு கராத்தே, யோகா பயிற்சிகளை  கொடுத்து வந்த நிலையில் சுரேஷ்-கஸ்தூரி தம்பதியின் 11 வயது மகன் லோகநாதனிடம் பயிற்சிக்காக சேர்க்கப்பட்டு பயிற்சி எடுத்து வந்தான். அதே நேரம் கஸ்தூரியும் அவரிடம் யோகா பயிற்சி மேற்கொண்டு வந்துள்ளார்.

Transgressive yoga master beaten to ; Body recovery in a ruined well

இந்நிலையில் கஸ்தூரியிடம் லோகநாதன் பாலியல் ரீதியாக தொல்லையில் ஈடுபட்டதாக தெரிகிறது. இதனால் லோகநாதனின் பயிற்சி வகுப்புக்கு செல்வதை கஸ்தூரி தவிர்த்து வந்துள்ளார். ஆனால் இருப்பினும் மொபைல் மூலம் கஸ்தூரியை தொடர்பு கொண்ட லோகநாதன் யோகா வகுப்புக்கு வரும்படி தொடர்ந்து வற்புறுத்தியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த கஸ்தூரி இதுகுறித்து கணவரிடம் தெரிவிக்க இருவரும் சேர்ந்து கராத்தே மாஸ்டர் லோகநாதன் கொலை செய்ய திட்டமிட்டனர்.

அவரை மொபைல் மூலம் தொடர்புகொண்டு காரனை பகுதிக்கு வரவழைத்து அடித்து கொலை செய்ததோடு அங்குள்ள பாழடைந்த கிணற்றில் உடலை வீசிவிட்டுச் சென்றது போலீசார் விசாரணையில் தெரியவந்தது. உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் கிணற்றில் இருந்த லோகநாதனின் உடலை கயிறு மூலம் கட்டி வெளியே கொண்டு வந்தனர். யோகா மாஸ்டர் அடித்து கொலை செய்யப்பட்டு கிணற்றில் வீசப்பட்ட சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.