கிருஷ்ணகிரி: குடிபோதையில் தகராறு; மகனை வெட்டிக்கொன்ற தந்தை! அரிவாளுடன் போலீசில் சரண்!!

கிருஷ்ணகிரி அருகே, குடிபோதையில் சொத்துக்காக தகராறு செய்து வந்த மகனை, பெற்ற தந்தையே அரிவாளால் வெட்டிக்கொன்றார்.

கிருஷ்ணகிரி மாவட்டம் உத்தனபள்ளி அருகே, சானமாவு கிராமத்தைச் சேர்ந்தவர் கிருஷ்ணப்பா (55). கூலித்தொழிலாளி. இவருடைய மகன் லோகேஷ் (32). சென்னையில் உள்ள ஒரு செல்போன் கடையில் வேலை செய்து வந்தார்.

லோகேஷ், சொந்த ஊரைச் சேர்ந்த ஒரு பெண்ணை காதலித்து வந்தார். இருவரும் கடந்த மூன்று மாதத்திற்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர். திருமணத்திற்குப் பிறகு சரியாக வேலைக்குச் செல்லாமல், மது குடித்துவிட்டு, தனக்கு சொத்தைப் பிரித்து கொடுக்கும்படி தந்தையிடம் அடிக்கடி தகராறு செய்து வந்துள்ளார்.மகனின் நடவடிக்கை பிடிக்காமல் தந்தை கிருஷ்ணப்பாவும், தாயார் ராதாம்மாளும் ஓசூரில் உள்ள தங்கள் மகள் வீட்டிற்குச் சென்றுவிட்டனர்.

(கொலையுண்டவரின் படம்)

krishnagiri district incident father, son police investigation

இரு நாள்களுக்கு முன்பு (டிச. 21), இரவு, கிருஷ்ணப்பா சானமாவு கிராமத்திற்கு திரும்பி வந்தார். அப்போது குடிபோதையில் இருந்த லோகேஷ், அவரிடம் மீண்டும் தகராறில் ஈடுபட்டார். கீழே கிடந்த கம்பை எடுத்து கிருஷ்ணப்பாவை அடிக்க பாய்ந்தார். லோகேஷிடம் இருந்த கம்பை பிடுங்கிய கிருஷ்ணப்பா, ஆத்திரத்தில் அவரை சரமாரியாக தாக்கினார். மேலும், வீட்டுக்குள் இருந்த அரிவாளை எடுத்து வந்தும் மகனை சரமாரியாக வெட்டினார். இதில் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே லோகேஷ் உயிரிழந்தார்.

இதையடுத்து மகனை கொலை செய்து விட்டதாக, உத்தனபள்ளி காவல்நிலையத்தில் அரிவாளுடன் சென்று கிருஷ்ணப்பா நேரில் சரணடைந்தார். காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, சடலத்தைக் கைப்பற்றி, உடற்கூறு ஆய்வுக்காக ஓசூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், கிருஷ்ணப்பாவை கைது செய்தனர். குடிபோதையில் தகராறு செய்து வந்த மகனை, தந்தையை வெட்டிக்கொன்ற சம்பவம் உத்தனபள்ளி கிராமத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

father Krishnagiri police son incident Tamilnadu
இதையும் படியுங்கள்
Subscribe