Advertisment

ஒற்றை யானை மிதித்து பெண் தொழிலாளி பலி; இன்னும் எத்தனை பேரை கொல்லுமோ? கிலியில் கிராமவாசிகள்!

krishnagiri district elephant women incident forest officers

தேன்கனிக்கோட்டை அருகே, தனியாக நடந்து சென்ற பெண் கூலித்தொழிலாளியை யானை மிதித்துக் கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Advertisment

கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை அருகே உள்ள சாப்ராணப்பள்ளியைச் சேர்ந்தவர் சுப்ரமணி. இவருடைய மனைவி சங்கரம்மா (வயது 35). கூலித்தொழிலாளி. இவருக்கு 12 வயதில் ஒரு மகள் இருக்கிறார். கணவரை பிரிந்து மகளுடன் தனியாக வசித்து வந்தார்.

Advertisment

இந்நிலையில் சங்கரம்மா, திங்கள்கிழமை (ஜன. 24) காலையில் சீனிவாசபுரம் ஏரி அருகே நடந்து சென்று கொண்டிருந்தார்.அப்போது அந்த வழியாக யானை ஒன்று வந்து கொண்டிருந்தது. அதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த சங்கரம்மா, யானையிடம் இருந்து தப்பிக்க ஓட்டம் பிடித்தார். ஆனால் துரத்திச்சென்ற ஒற்றை யானை, சங்கரம்மாவை காலால் மிதித்தது. இதில் உடல் நசுங்கிய அவர், நிகழ்விடத்திலேயே பலியானார்.

இதையடுத்து அந்த யானை, அருகில் உள்ள காட்டு பகுதிக்குள் புகுந்தது. இந்நிலையில், கால்நடைகளை மேய்ச்சலுக்கு ஓட்டி வந்த சிலர், சங்கரம்மா இறந்து கிடந்தது குறித்து உறவினர்களுக்கும், தேன்கனிக்கோட்டை காவல்நிலையத்திற்கும் தகவல் அளித்தனர்.

காவல்துறையினர், வனத்துறையினர் நிகழ்விடம் விரைந்து சென்று விசாரணை நடத்தினர். சடலத்தைக் கைப்பற்றிய காவல்துறையினர், உடற்கூராய்வுக்காக தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அதிகாரிகளிடம் வாக்குவாதம்:

சங்கரம்மாவை மிதித்துக் கொன்ற யானை, அந்தப் பகுதியில் நீண்ட நாள்களாக சுற்றித்திரிகிறது. இதனால் வயல் வெளியில் இரவுக் காவலுக்குச் செல்லும் விவசாயிகள், கால்நடைகளை மேய்ச்சலுக்குக் கொண்டு செல்லும் உள்ளூர்க்காரர்கள் கடும், அடுத்து யாரை பலி வாங்குமோ என்று கடும் அச்சத்தில் உள்ளனர். யானையை பாதுகாப்பான இடத்திற்கு அப்புறப்படுத்தும்படி ஏற்கனவே வனத்துறையினரிடம் கிராமவாசிகள் முறையிட்டும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை எனத்தெரிகிறது.

இந்நிலையில், சங்கரம்மா மரணம் குறித்து விசாரிப்பதற்காக வந்த வனச்சரகர் முருகேசன், தேன்கனிக்கோட்டை போலீஸ் எஸ்ஐ சிவராஜ், விஏஓ மாரீஸ் உள்ளிட்ட அரசுத்துறை அதிகாரிகளிடம் சாப்ராணப்பள்ளி கிராமப்புற மக்கள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். யானை மிதித்து இறந்த சங்கரம்மா குடும்பத்திற்கு 10 லட்சம் ரூபாய் இழப்பீடு கோரினர்.

இதையடுத்து, வனத்துறை அதிகாரிகள் கூறுகையில், ''தமிழக அரசுத் தரப்பில் 5 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கப்படும் என்றும், முதல்கட்டமாக 50 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்றும்,யானையை விரட்டுவதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றும் உறுதி அளித்தனர்.

elephant incident Krishnagiri
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe