Skip to main content

கர்ப்பிணிப் பெண் சுட்டுக் கொலை! - குடிபோதையில் தந்தை வெறிச்செயல்!

Published on 15/04/2021 | Edited on 15/04/2021

 

krishnagiri district daughter incident father police investigation

 

குடிபோதையில் தாயிடம் தகராறில் ஈடுபட்ட தந்தையைத் தடுக்க முயன்றபோது, ஆத்திரம் அடைந்த தந்தை கர்ப்பிணி மகளை நாட்டுத் துப்பாக்கியால் சுட்டுக்கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 

கிருஷ்ணகிரி மாவட்டம் தளி அருகே உள்ள வரதேகவுண்டன் தொட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் அருணாசலம் (வயது 60). விவசாயி. இவருடைய மனைவி மாதேவி (வயது 54). இவர்களுடைய மகள் வெங்கடலட்சுமி (வயது 23). 

 

இவருக்கும், கர்நாடகா மாநிலம் மாலூரைச் சேர்ந்த சீனா என்பவருக்கும் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. புதுப்பெண் வெங்கடலட்சுமி தற்போது, மூன்று மாத கர்ப்பமாக உள்ளார். 

 

யுகாதி பண்டிகையையொட்டி கடந்த சில நாள்களுக்கு முன்பு வெங்கடலட்சுமி தாய் வீட்டுக்கு வந்திருந்தார். தமிழ்ப்புத்தாண்டு தினமான புதன்கிழமை (ஏப். 14) அன்று அருணாசலம் மது குடித்துவிட்டு வீட்டுக்கு வந்துள்ளார். மாலை 04.00 மணியளவில் அவர், மனைவி மாதேவியிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார்.

 

அப்போது இருவருக்கும் தகராறு முற்றியதில் அருணாசலம் மனைவியை நாட்டுத் துப்பாக்கியைக் காட்டி சுட்டு விடுவதாக மிரட்டினார். இதைப் பார்த்துக் கொண்டிருந்த மகள் வெங்கடலட்சுமி தாயாரைக் காப்பாற்றுவதற்காக தந்தையை தடுக்க முயன்றார். அப்போது ஆத்திரத்தில் அருணாசலம் கர்ப்பிணி மகள் என்றும் பாராமல் வெங்கடலட்சுமியை சுட்டார்.

 

தோட்டா உடலைத் துளைத்ததில் ரத்த வெள்ளத்தில் சரிந்தார் வெங்கடலட்சுமி. கூச்சலைக் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடிவந்து வெங்கடலட்சுமியை மீட்டு, அஞ்செட்டி அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். மருத்துவர்கள் பரிசோதனையில் அவர் வரும் வழியிலேயே இறந்துவிட்டது தெரியவந்தது.

 

இதுகுறித்து தகவல் அறிந்த தளி காவல்நிலைய காவல்துறையினர் சம்பவ இடம் விரைந்து சென்று விசாரித்தனர். சடலத்தைக் கைப்பற்றி, உடற்கூராய்வுக்காக தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

 

இதற்கிடையே அருணாசலம் திடீரென்று தலைமறைவாகிவிட்டார். அவர் தளி வனப்பகுதிக்குள் சென்று பதுங்கி இருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகிறது. காவல்துறையினர் அவரை தேடி வருகின்றனர். 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தங்கைக்கு டி.வி, மோதிரம் வழங்க விரும்பிய அண்ணன்; கடைசியில் நேர்ந்த சோகம்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
incident happened on Brother wanted to give TV, ring to younger sister

உத்திரபிரதேச மாநிலம் பாரபங்கி அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்தவர் சந்திர பிரகாஷ் மிஸ்ரா (35). இவரது மனைவி சாபி. மிஸ்ராவுக்கு திருமணமாகாத தங்கை ஒருவர் இருந்தார்.

இந்த நிலையில், மிஸ்ராவின் தங்கைக்கு வருகிற 26ஆம் தேதி திருமணம் நடைபெற இருந்தது. தன் தங்கையின் திருமணத்திற்காக தங்க மோதிரம், டி.வி உள்ளிட்ட பொருட்களை வழங்க மிஸ்ரா விருப்பப்பட்டார். இந்த முடிவை மிஸ்ரா தனது மனைவி சாபியிடம் தெரிவித்துள்ளார். ஆனால், அதற்கு சாபி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதனால், இவர்கள் இருவருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. 

இதில் ஆத்திரமடைந்த சாபி, தனது கணவரை பழிவாங்க வேண்டும் என்பதற்காக தனது சகோதர்களை அழைத்ததாகக் கூறப்படுகிறது. அதன் பேரில், அங்கு வந்த அவர்கள், இது குறித்து மிஸ்ராவிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். ஆனால், அந்தப் பேச்சுவார்த்தை ஒரு கட்டத்தில் தகராறில் முடிந்துள்ளது. இதில், சாமியின் சகோதரர்கள், மிஸ்ராவை கம்பு உள்ளிட்ட ஆயுதங்களால் கடுமையாகத் தாக்கியுள்ளனர். இதில் மிஸ்ரா படுகாயமடைந்ததால் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால், அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். 

இதனையடுத்து, இந்தச் சம்பவம் குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார், வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும் மிஸ்ராவை கொலை செய்த மனைவி சாபி உள்ளிட்ட 5 பேரை கைது செய்து  விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Next Story

தடுப்பணையில் குளிக்கச் சென்ற சிறுவர்களுக்கு நேர்ந்த சோகம்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Incident happened to the boys who went to dig in the dam

கோவை மாவட்டம், ஆனைமலை அருகே குரங்கு நீர்வீழ்ச்சி, அறிவுத்திருக்கோவில், ஆழியார் பூங்கா, வால்பாறை உள்ளிட்ட பல்வேறு சுற்றுலாத் தலங்கள் உள்ளன. கோடை காலத்தின் போது, இந்தச் சுற்றுலா தலங்களுக்குப் பல்வேறு பகுதிகளில் இருந்து சுற்றுலாப் பயணிகள் வருகை தந்து தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்துவது வழக்கம். 

இந்த நிலையில், குரங்கு நீர்வீழ்ச்சி தடுப்பணையில் பிரவீன் (17), தக்சன் (17), கவீன் (16) ஆகிய மூன்று பள்ளி சிறுவர்கள் குளிக்கச் சென்றுள்ளனர். அப்போது, அங்கு அவர்கள் தடுப்பணையின் ஆழமான இடத்திற்கு சென்ற போது, மூவரும் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். பள்ளி மாணவர்கள் நீரில் மூழ்கி இறந்த சம்பவம் தொடர்பாக போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. 

தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார், பலியான மூவரின் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்தச் சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தடுப்பணையில் பள்ளி மாணவர்கள் மூவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.