Skip to main content

கே.பி.பார்க் கட்டட விவகாரம்: இறுதி ஆய்வறிக்கை தாக்கல்!

Published on 04/10/2021 | Edited on 04/10/2021

 

KP Park Building Issue: Final Study Filed!

 

சென்னை புளியந்தோப்பில் உள்ள கே.பி.பார்க் அருகே தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தால் கட்டப்பட்ட அடுக்குமாடி குடியிருப்புகள் தரமற்று இருந்தது தெரியவந்தது. மேலும், தொட்டாலே உதிரும் வகையில் பூச்சு இருந்தது. இதுகுறித்து தகவலறிந்த அமைச்சர்கள், கட்டடத்தை நேரில் ஆய்வு செய்தனர். மேலும், குடியிருப்பில் வசிப்பவர்களிடம் குடியிருப்பின் தரம் தொடர்பாகக் கேட்டறிந்தனர். 

 

அதைத் தொடர்ந்து, இந்தக் கட்டடத்தின் தரத்தை ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய ஐ.ஐ.டி. குழுவினருக்கு அரசு உத்தரவிட்டிருந்தது. அதன்படி, கட்டடத்தை ஐ.ஐ.டி. குழுவைச் சேர்ந்த 10க்கும் மேற்பட்ட நிபுணர்கள் தொடர்ந்து ஆய்வு செய்துவந்தனர். அதையடுத்து, இன்று (04/10/2021) நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் மேலாண் இயக்குநர் கோவிந்தராவிடம் அறிக்கை தாக்கல் செய்தனர். 

 

441 பக்கங்களைக் கொண்ட ஆய்வறிக்கையில், கே.பி.பார்க் குடியிருப்பைக் கட்டிய கட்டுமான நிறுவனமான பி.எஸ்.டி. மீது நடவடிக்கை எடுக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது. மேலும், பி.எஸ்.டி. கட்டுமான நிறுவனத்தைத் தடைப் பட்டியலில் சேர்க்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது. அரசு ஒப்பந்தங்களில் சம்மந்தப்பட்ட நிறுவனத்துக்கு இனி ஒப்பந்தங்கள் வழங்கக் கூடாது. 

 

இது தொடர்பாக, ஏற்கனவே உதவிப் பொறியாளர் பாண்டியன், உதவி நிர்வாக பொறியாளர் அன்பழகன் ஆகியோர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

 

 

சார்ந்த செய்திகள்