சென்னை கோயம்பேடு மார்க்கெட் பகுதியில் சிலருக்கு கரோனா நோய்ப் பரவியதையடுத்து அங்குப் பணி செய்த கூலித் தொழிலாளர்கள் உயிர் பயத்தில் அவரவர் ஊர்களுக்கு வந்து கொண்டுள்ளனர். அந்த அடிப்படையில் இரண்டு நாட்களுக்கு முன்பு கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே உள்ள தொண்டல்குறிச்சி கிராமத்தைச் சேர்ந்த சிலர் கோயம்பேடு மார்க்கெட்டில் இருந்து லாரி மூலம் தங்கள் ஊருக்கு வந்து சேர்ந்தார்கள்.
பெரம்பலூர் மாவட்டம் அத்தியூர் கிராமத்தைச் சேர்ந்த ஒருவருக்கும், அரியலூர் மாவட்டம் நம்மகுணம் கிராமத்தைச் சேர்ந்த ஒருவருக்கும் என இதுவரை கோயம்பேட்டில் இருந்து வந்த நான்கு பேருக்கு கரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்கள் அனைவரும் திருச்சி, சிதம்பரம் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சையில் சேர்க்கப்பட்டு உள்ளனர்.
சென்னை கோயம்பேட்டிலிருந்து கழுதூர் கிராமத்தைச் சேர்ந்த 29 பேர் கழுதூருக்கு வருகை தந்துள்ளனர். அவர்கள் அனைவரையும் அந்த ஊரில் உள்ள பள்ளி வளாகத்தில் தனிமைப்படுத்தி வைக்கப்பட்டுள்ளனர். அதேபோன்று சிறுப்பாக்கம், காஞ்சரங்குளம், பொயனப்பாடி உட்பட திட்டக்குடி, விருத்தாசலம், வேப்பூர் ஆகிய தாலுகாக்களில் உள்ள பல கிராமங்களுக்கும் சென்னையிலிருந்து வந்தவர்களை உடனடியாக கிராம நிர்வாக அலுவலர் கிராம உதவியாளர்கள் கிராம ஊராட்சி செயலாளர்கள் ஆகியோர் மூலம் அடையாளம் கண்டறியப்பட்டு அவர்களைத் தனிமைப்படுத்தும் பணியைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.
இதேபோன்று அரியலூர் மாவட்டம், பெரம்பலூர் மாவட்டம், விழுப்புரம் மாவட்டத்தில் பல கிராமங்களில் கோயம்பேட்டில் இருந்து வந்தவர்களை அடையாளம் கண்டு தனிமைப்படுத்தி வைத்துள்ளனர். இவர்களுக்கு மருத்துவப் பரிசோதனை செய்த பிறகே அவரவர் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள்.
சென்னையில் உள்ளவர்களைப் பரிசோதனை செய்து நோய்த்தொற்று உள்ளவர்களைச் சென்னையைச் சுற்றியுள்ள பள்ளி கல்லூரிகளில் வைத்து சிகிச்சை அளிக்க வேண்டும். நோய்த்தொற்று இல்லாத வெளியூர் மற்றும் வெளி மாவட்டங்களைச் சேர்ந்தவர்களை மட்டும் அவரவர் ஊர்களுக்கு அனுப்பி வைப்பதன் மூலம் தமிழகத்தில் நோய்ப் பரவலைத் தடுக்க முடியும் என்கிறார்கள் சமூக ஆர்வலர்கள்.