Skip to main content

கோயம்பேட்டிலிருந்து ஊர் திரும்பியவருக்கு கரோனா தொற்று... கிராம எல்லையில் தடுப்பு அமைத்த பொதுமக்கள்... 

Published on 01/05/2020 | Edited on 01/05/2020

 

Village


சென்னை கோயம்பேடு மார்க்கெட் பகுதியில் சிலருக்கு கரோனா நோய்ப் பரவியதையடுத்து அங்குப் பணி செய்த கூலித் தொழிலாளர்கள் உயிர் பயத்தில் அவரவர் ஊர்களுக்கு வந்து கொண்டுள்ளனர். அந்த அடிப்படையில் இரண்டு நாட்களுக்கு முன்பு கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே உள்ள தொண்டல்குறிச்சி கிராமத்தைச் சேர்ந்த சிலர் கோயம்பேடு மார்க்கெட்டில் இருந்து லாரி மூலம் தங்கள் ஊருக்கு வந்து சேர்ந்தார்கள்.
 

அப்படி வந்தவர்களில் இரண்டு பேருக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளது. இந்தத் தகவல் திட்டக்குடி வட்டாட்சியர்கள் செந்தில்வேல், ரவிச்சந்திரன் மற்றும் வேப்பூர் வட்டாட்சியர் கமலா மற்றும் மருத்துவ அதிகாரிகள் காவல் துறையினருக்குத் தகவல் அளிக்கப்பட்டது. உடனடியாக அவர்கள் அனைவரும் மருத்துவக் குழுவினருடன் அந்த ஊருக்குச் சென்று அந்த இருவரையும் பரிசோதனை செய்ததில் கரோனா இருப்பது தெரியவந்தது. உடனடியாக அந்த இருவரும் சிதம்பரம் முத்தையா அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு மிகுந்த பாதுகாப்புடன் அனுப்பி வைக்கப்பட்டனர். இதையடுத்து தொண்டல்குறிச்சி செல்லும் சாலை தடுப்பு அமைக்கப்பட்டது. 
 

பெரம்பலூர் மாவட்டம் அத்தியூர் கிராமத்தைச் சேர்ந்த ஒருவருக்கும், அரியலூர் மாவட்டம் நம்மகுணம் கிராமத்தைச் சேர்ந்த ஒருவருக்கும் என இதுவரை கோயம்பேட்டில் இருந்து வந்த நான்கு பேருக்கு கரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்கள் அனைவரும் திருச்சி, சிதம்பரம் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சையில் சேர்க்கப்பட்டு உள்ளனர்.
 

பல்வேறு பகுதிகளிலிருந்து கடலூர் மாவட்டத்திற்கு வருபவர்களை அரசு அதிகாரிகள் மருத்துவக் குழுவினர் காவல்துறை உதவியுடன் அந்தந்த ஊர்களில் அவர்களைத் தனிமைப்படுத்தி வைத்துள்ளனர். அப்படி வைக்கப்பட்டுள்ள அவர்களுக்கு மருத்துவக் குழுவினர் மூலம் உமிழ்நீர் ரத்தம் ஆகியவைகளை எடுத்து பரிசோதனைக்கு அனுப்பி வருகிறார்கள். பரிசோதனைக்குப் பிறகே நோய்த்தொற்று இல்லாதவர்களை அவரவர் வீடுகளுக்கு அனுப்பி வைக்க உள்ளனர். இதற்கான பணியை நேற்று விளாங்காட்டூர் என்ற கிராமத்தில் மேற்கொண்டனர்.  
 

சென்னை கோயம்பேட்டிலிருந்து கழுதூர் கிராமத்தைச் சேர்ந்த 29 பேர் கழுதூருக்கு வருகை தந்துள்ளனர். அவர்கள் அனைவரையும் அந்த ஊரில் உள்ள பள்ளி வளாகத்தில் தனிமைப்படுத்தி வைக்கப்பட்டுள்ளனர். அதேபோன்று சிறுப்பாக்கம், காஞ்சரங்குளம், பொயனப்பாடி உட்பட திட்டக்குடி, விருத்தாசலம், வேப்பூர் ஆகிய தாலுகாக்களில் உள்ள பல கிராமங்களுக்கும் சென்னையிலிருந்து வந்தவர்களை உடனடியாக கிராம நிர்வாக அலுவலர் கிராம உதவியாளர்கள் கிராம ஊராட்சி செயலாளர்கள் ஆகியோர் மூலம் அடையாளம் கண்டறியப்பட்டு அவர்களைத் தனிமைப்படுத்தும் பணியைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.
 

http://onelink.to/nknapp

 

இதேபோன்று அரியலூர் மாவட்டம், பெரம்பலூர் மாவட்டம், விழுப்புரம் மாவட்டத்தில் பல கிராமங்களில் கோயம்பேட்டில் இருந்து வந்தவர்களை அடையாளம் கண்டு தனிமைப்படுத்தி வைத்துள்ளனர். இவர்களுக்கு மருத்துவப் பரிசோதனை செய்த பிறகே அவரவர் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள். 
 

 

சென்னையில் உள்ளவர்களைப் பரிசோதனை செய்து நோய்த்தொற்று உள்ளவர்களைச் சென்னையைச் சுற்றியுள்ள பள்ளி கல்லூரிகளில் வைத்து சிகிச்சை அளிக்க வேண்டும். நோய்த்தொற்று இல்லாத வெளியூர் மற்றும் வெளி மாவட்டங்களைச் சேர்ந்தவர்களை மட்டும் அவரவர் ஊர்களுக்கு அனுப்பி வைப்பதன் மூலம் தமிழகத்தில் நோய்ப் பரவலைத் தடுக்க முடியும் என்கிறார்கள் சமூக ஆர்வலர்கள்.


 

சார்ந்த செய்திகள்

Next Story

பெண் மீதான தாக்குதல் வீடியோ; இளைஞரை கைது செய்த போலீசார்

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
 Video of assault on woman; The police arrested the youth

சென்னை கோயம்பேடு பகுதியில், பூந்தமல்லி மார்க்கமாக செல்லும் மேம்பாலத்தில், நேற்று (26-04-24) ஒரு இளைஞரும், ஒரு இளம்பெண்ணும் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர். அப்போது, அவர்கள் இருவருக்குள்ளும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இவர்களுக்குள் ஏற்பட்ட வாக்குவாதம் ஒரு கட்டத்தில் முற்றியதால் ஆத்திரமடைந்த அந்த இளைஞர், தன்னுடைய வாகனத்தை நிறுத்தி, தன்னுடன் வந்த அந்த பெண்ணை சரமாரியாக தாக்கியுள்ளார். மேலும், தான் அணிந்திருந்த ஹெல்மெட்டை வைத்து அந்த பெண்ணை தாக்கியதாக கூறப்படுகிறது.

இதனைப் பார்த்த அங்கிருந்த சிலர், அந்த இளைஞரை தடுத்து நிறுத்தியுள்ளனர். இந்த தாக்குதலில், அந்த இளம்பெண் சம்பவ இடத்திலேயே கீழே விழுந்து மயக்கமடைந்துள்ளார். சிறிது நேரம் கழித்து, அந்த இளைஞர், இளம்பெண்ணை மீட்டு உடனடியாக மீட்டு இருசக்கர வாகனத்தில் அமர வைத்து உடனடியாக அங்கிருந்து புறப்பட்டு சென்றுள்ளார். இதை அங்கிருந்த சிலர் தங்கள் செல்போனில் வீடியோ எடுத்துள்ளனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

பொது இடத்தில் இளம்பெண் ஒருவரை கையாலும், ஹெல்மெட்டாலும் கொடூரமாக தாக்கிய இளைஞர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வழக்கறிஞர் ஜோசப் என்பவர் ஆன்லைன் மூலம் சென்னை காவல்துறைக்கு புகார் அளித்துள்ளார். இது தொடர்பாக அந்த இளைஞர் யார் என்பது குறித்து இருசக்கர வாகன எண்ணை வைத்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் பெண்ணை தாக்கிய ரோஷன் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். அப்பெண் அவரது மனைவி என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. தொடர்ந்து இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story

காவு வாங்கிய குளம்; கிராமத்தையே சோகத்தில் ஆழ்த்திய சிறுவர்களின் உயிரிழப்பு

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
 The pool of water; The lost their live of the boys left the village in mourning

கடலூரில் குளத்தில் இறங்கி குளிக்க முயன்ற இரண்டு சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே உள்ளது நந்தீஸ்வர மங்கலம். இந்தக் கிராமத்தில் வசித்து வந்த ராமமூர்த்தி என்பவருக்கு இரண்டு மகன்கள் இருந்தனர். திலீப் ராஜ்(16), தினேஷ்(14) ஆகிய இரு மகன்களும் வெளியூரில் விடுதியில் தங்கி படித்து வந்தனர். இந்த நிலையில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு விடுமுறைக்காக சொந்த ஊருக்கு வந்திருந்தனர்.

சிறுவர்கள் திலீப் ராஜ் மற்றும் தினேஷ் ஆகியோர் வீட்டுக்கு அருகே உள்ள குளத்தில் குளிக்க சென்றுள்ளனர். அப்பொழுது ஆழமான பகுதிக்கு இருவரும் குளிக்கச் சென்றதாக கூறப்படுகிறது. இதில் நீரில் மூழ்கி இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். குளத்துக்கு குளிக்கச் சென்ற சிறுவர்கள் காணாமல் போனதால் பதறியடித்த பெற்றோர் காவல்துறைக்கு தகவல் அளித்தனர். உடனடியாக மீட்பு படையினர் வரவழைக்கப்பட்டு குளத்தில் இறங்கி தேட ஆரம்பித்தனர். பின்னர், வெகு நேரத்திற்கு பின் இருவரின் உடலையும் கைப்பற்றிய மீட்புப்படையினர் உடல்களை கரைக்கு கொண்டு வந்தனர். சிறுவர்களின் உடல்களை பார்த்து பெற்றோர் மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர். உயிரிழந்த சிறுவர்கள் இருவரின் உடலும் காட்டுமன்னார் கோவில் அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

விடுதியில் தங்கிப் படித்து வந்த சிறுவர்கள் விடுமுறைக்காக சொந்த ஊருக்கு வந்த நிலையில் குளத்தில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.