chennai high court

Advertisment

கோயம்பேடு உணவு தானிய மொத்த விற்பனைசந்தை மூடப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், தமிழக அரசு, காவல்துறை, சி.எம்.டி.ஏ. பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதுதொடர்பாக, கோயம்பேடு உணவு தானிய வியாபாரிகள் சங்கத் தலைவர் சந்திரேசன் தாக்கல் செய்துள்ள மனுவில், ‘1996 -ஆம் ஆண்டு முதல் கொத்தவால் சாவடியில் இயங்கிய காய்கறிசந்தை கோயம்பேட்டிற்கு மாற்றப்பட்டது. 2014-ஆம் ஆண்டு முதல் மொத்த காய்கறி விற்பனை உரிய அனுமதியுடன் நடத்தப்பட்டு வருகிறது. கரோனா வைரஸ் தொற்றைக் கட்டுப்படுத்தும் விதமாக ஏப்ரல் 24 -ஆம் தேதி 4 நாட்கள் சென்னை, மதுரை, கோவை ஆகிய மாவட்டங்களில் தீவிர ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று தமிழக அரசு அறிவித்தபோது, காய்கறிகளை வாங்க சில்லறை விற்பனைசந்தையில் மக்கள் குவிந்ததால், கரோனா தொற்று பரவி, மே 5-ஆம் தேதி முதல் கோயம்பேடு காய்கறிச் சந்தை மூடப்பட்டது.

சில்லறை காய்கறி விற்பனைக்கும், உணவு தானிய விற்பனைக்கும் தொடர்பு இல்லாத நிலையில், அனைத்து வளாகங்களும் மூடப்பட்டதால், சில விற்பனையாளர்களால் உணவு தானிய பொருட்களின் விலை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. எனவே, சீல்அகற்றி உரிய பாதுகாப்புடன் மீண்டும் திறக்க உத்தரவிட வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளார்.

Advertisment

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி துரைசாமி, சிறப்பு அதிகாரி, தமிழக அரசு, சென்னை கரோனா தடுப்பு நடவடிக்கை சிறப்பு அதிகாரி, சி.எம்.டி.ஏ, சென்னை மாநகராட்சி மற்றும் சென்னை காவல்துறை ஆணையர் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை மே 26 -ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.