Skip to main content

பொறியாளர் மீது கொடூர தாக்குதல்.. அத்துமீறினாரா சப்-இன்ஸ்பெக்டர்?

Published on 18/08/2019 | Edited on 18/08/2019

கோவில்பட்டி பாரதிநகரை சேர்ந்த பழனிக்குமாருக்கும், அவரது மனைவி செண்பகலட்சுமிக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால், இருவரும் பிரிந்து வாழ்கின்றனர். இதுதொடர்பாக செண்பகலட்சுமி அளித்த புகாரின் பேரில், கோவில்பட்டி அனைத்து மகளிர் காவல் நிலைய போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
 

palani kumar

 

 

இந்த நிலையில், இன்று (18-08-2019) அதிகாலை 2:30 மணிக்கு பழனிக்குமாரின் வீட்டிற்கு சென்ற, கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய ஆய்வாளர் இசக்கிராஜா, பழனிக்குமாரை கண்மூடித்தனமாக தாக்கியதாக சொல்லப்படுகிறது. இதில் காயமடைந்த பழனிக்குமார் கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கோவில்பட்டி சப்-இன்ஸ்பெக்டர் இசக்கி ராஜா இதுபோன்ற சர்ச்சைகளில் சிக்குவது முதல் முறை அல்ல. இதற்கு முன் பேருந்து டிரைவர் ஒருவரை தாக்கியதால் ஒட்டுமொத்த ஓட்டுனர்களும் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதற்கு முன்னர் சுத்தமல்லி காவல் நிலையத்தில் ஓட்டல் உரிமையாளர் ஒருவரை தாக்கியதால் பிரச்சனையில் சிக்கினார். இப்போது, பொறியாளர் ஒருவரை தாக்கியது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. அதுவும் இந்த வழக்கை மகளிர் போலீஸார் விசாரித்து வரும் நிலையில், பெண்ணின் உறவினர் என்ற முறையில் பேச வந்ததாக கூறி, தாக்குதல் நடத்தியது சர்ச்சைக்கு வித்திட்டுள்ளது.

“கணவன்-மனைவிக்கு இடையே பிரச்சனை ஏற்படும்போது, அவர்களுக்கு கவுன்சிலிங் கொடுத்து பிரச்சனைக்கு தீர்வு காண்பது தான் காவல் துறையின் வேலை. அதைவிடுத்து அர்த்த ராத்திரியில் வந்து வீடு புகுந்து தாக்குவதை எப்படி ஏற்றுக் கொள்ள முடியும்?” என்கிறார் பழனிக்குமாரின் தந்தை ராமமூர்த்தி.
 

palanikumar

 

 

“போனில் இசக்கிராஜா அழைத்தார் என்பதற்காக ஏற்கனவே 2 முறை கோவில்பட்டி கிழக்கு காவல் நிலையத்திற்கு சென்றேன். ஆனால், அவர் அங்கு இல்லை. இன்றைக்கு அதிகாலையில் வந்து ஸ்டேசனுக்கு கூப்பிட்டால் வரமாட்டியா? என்று கேட்டு என்னை அடித்து உதைத்தார். அதுவும் நான் விசாரிக்க வரவில்லை. பெண்ணின் உறவினர் என்ற அடிப்படையில் பேச வந்தேன் என்று கூறிவிட்டு தாக்கினார்”என்பது பழனிக்குமாரின் குற்றச்சாட்டு ஆகும்.
 

சில மாதங்களுக்கு முன்னர் வாட்ஸ் அப் ஆடியோ மூலம் குறிப்பிட்ட சில ரௌடிகளுக்கு எச்சரிக்கை விடுத்தார் எஸ்.ஐ.இசக்கிராஜா. அதேபோல், வழக்கு விவகாரங்களிலும் அதிரடி காட்டினார். இதனால், அவரை மக்கள் ஹீரோவாக பார்த்தனர். ஆனால், சில பிரச்சனைகளில் கொஞ்சம் எல்லை மீறிச் சென்றது, அவரை வில்லனாக பார்க்கும் நிலைக்கு தள்ளி இருக்கிறது. போலீஸ் வில்லனாக மாறுவது நல்லது அல்ல!

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

நயினார் நாகேந்திரனுக்கு எதிராக வழக்கு!

Published on 15/04/2024 | Edited on 15/04/2024
Case against Nayinar Nagendran!

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு நாடு முழுவதும் ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாக தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால் வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இத்தகைய சூழலில் சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து திருநெல்வேலிக்கு செல்லும் ரயிலில் தாம்பரம் ரயில் நிலையத்தில் கடந்த 06.04.2024 அன்று இரவு உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்ல முயன்ற ரூ. 4 கோடி மதிப்பிலான ரொக்கம் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டது. 6 பைகளில் கட்டுக்கட்டாக இருந்த 500 ரூபாய் நோட்டுகளைப் பறக்கும் படையினர் அதிரடியாகப் பறிமுதல் செய்தனர்.

இதனையடுத்து இந்தப் பணத்தை எடுத்து வந்த புரசைவாக்கம் தனியார் விடுதி மேலாளரும் பாஜக உறுப்பினருமான சதீஷ், அவரின் சகோதரர் நவீன் மற்றும் லாரி ஓட்டுநர் பெருமாள் ஆகிய 3 பேரும் கைது செய்யப்பட்டனர். திருநெல்வேலி மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு, இந்தப் பணத்தைக் கொண்டு செல்ல முயன்றதாக மூவரும் பகீர் வாக்குமூலம் கொடுத்ததாகத் தகவல் வெளியாகி இருந்தது. இச்சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் அடிப்படையில் பாஜக தொழில்துறை மாநில துணைத்தலைவர் கோவர்தனின் உணவகத்தில் அதிகாரிகள் சோதனை நடத்தினர்.  இந்தச் சோதனையில் ரூ.1.10 லட்சம் பணம் கைப்பற்றப்பட்டது. இதனையடுத்து, நெல்லையில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு காவல்துறை சார்பில் சம்மன் அனுப்பப்பட்டது.

இந்த நிலையில், பா.ஜ.க வேட்பாளர் நயினார் நாகேந்திரன் போட்டியிடும் நெல்லை தொகுதிக்குத் தேர்தல் நடத்த தடை விதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர் மகாராஜன், சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது, ‘வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் பதிவான வழக்கை மறைத்து நயினார் நாகேந்திரன் வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். அதனால், நயினார் நாகேந்திரனின் வேட்புமனுவை நிராகரிக்க கோரிய தன் ஆட்சேபனை மீது முடிவெடுக்கும் வரை தேர்தலுக்கு தடை விதிக்க வேண்டும். மேலும், நயினார் நாகேந்திரனின் வேட்புமனுவை ஏற்றது சட்டவிரோதம் என அறிவிக்க வேண்டும்’ என்று கூறப்பட்டுள்ளது. இதனையடுத்து இந்த மனு தொடர்பான விசாரணை, சென்னை உயர்நீதிமன்றத்திற்கு நாளை (16-04-24)  விசாணைக்கு வருகிறது. 

Next Story

“தமிழ் கலாச்சாரம் மீது திமுக காங்கிரஸுக்கு வெறுப்பு உள்ளது” - பிரதமர் மோடி

Published on 15/04/2024 | Edited on 15/04/2024
PM Modi says DMK-Congress hates Tamil culture

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அந்த வகையில் திமுக, அதிமுக, நாம் தமிழர், பாஜக ஆகிய கட்சிகள் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றன.

இந்நிலையில் திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே அகஸ்தியர்பட்டியில் பிரதமர் மோடி இன்று (15.04.2024) தேர்தல் பரப்புரை மேற்கொண்டார். அப்போது திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி, தென்காசி ஆகிய நாடாளுமன்ற மக்களவை தொகுதிகளின் பாஜக மற்றும் அதன் கூட்டணிக் கட்சியின் வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் மோடி பரப்புரை மேற்கொண்டார்.

அப்போது பேசிய பிரதமர் மோடி, “தமிழ் புத்தாண்டு தினத்தில் பா.ஜ.க தனது தேர்தல் அறிக்கையை வெளியிட்டது. தமிழ் மொழியை பா.ஜ.க உலக அளவில் பிரபலப்படுத்தும். உலகம் முழுவதும் திருவள்ளுவர் மையங்களை அமைக்க பா.ஜ.க முடிவு செய்துள்ளது. தமிழ் கலாச்சாரம் மீது திமுக காங்கிரஸுக்கு வெறுப்பு உள்ளது. குடும்ப கட்சியான காங்கிரஸ், காமராஜரை அவமதித்தது. எம்.ஜி.ஆர் புகழை திமுக அவமதித்தது. ஜெயலலிதாவை சட்டசபையில் மோசமாக நடத்தியது.

பா.ஜ.க மற்றும் கூட்டணிக் கட்சியினர் தேர்தல் பிரச்சாரம் செய்வதை திமுக அரசு தடுக்கிறது. திமுகவும், காங்கிரஸும் தமிழ்நாட்டு நலனுக்கு விரோதமாக கச்சத்தீவை வேறொரு நாட்டுக்கு கொடுத்துவிட்டனர். கச்சத்தீவை தாரைவார்த்தது மன்னிக்க முடியாத பாவம். குடும்ப அரசியலை ஆதரிக்கும் கட்சியின் ஊழல் ஆட்சியால் தமிழ்நாடு துன்பப்படுகிறது” எனப் பேசினார்.