Skip to main content

கோவை சரக டிஐஜி தற்கொலை; டிஜிபி விளக்கம்

Published on 07/07/2023 | Edited on 07/07/2023

 

kovai police dig incident police dgp explain 

 

கோவை சரக டிஐஜியாக கடந்த ஜனவரி மாதம் முதல் பணியாற்றி வந்த விஜயகுமார் இன்று அதிகாலை தனது வீட்டில் துப்பாக்கியில் சுட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். பிரேதப் பரிசோதனைக்காக அவரது உடல் கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. டிஐஜி தற்கொலை குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை செய்து வருகின்றனர். இந்த சம்பவம் போலீசார் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

 

இவர் கடந்த 2009ம் ஆண்டு காவல்துறை பணியில் இணைந்தார். இதனைத் தொடர்ந்து காஞ்சிபுரம், கடலூர், நாகப்பட்டினம் மற்றும் திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக இவர் பணியாற்றியுள்ளார். அதேபோல சென்னையில் அண்ணா நகர் துணை ஆணையராக பணியாற்றி வந்த இவருக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டது. இதன் அடிப்படையில் கோவை சரக டி.ஐ.ஜி-யாக கடந்த ஜனவரி மாதம் 6 ஆம் தேதி கோவை சரக காவல்துறை துணைத் தலைவராக பொறுப்பேற்றுக் கொண்டு பணிபுரிந்து வந்தார்.

 

டி.ஐ.ஜி.யின் இந்த தற்கொலைக்கு குடும்ப பிரச்சனை காரணமாக இருக்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது. தனது பாதுகாவலரின் துப்பாக்கியால் தன்னைத் தானே சுட்டு உயிரை மாய்த்துக் கொண்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. அவரது சொந்த ஊர் தேனி மாவட்டம் ரத்தினம் நகர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

இந்நிலையில் தமிழக டிஜிபி சங்கர் ஜிவால், கோவை சரக டிஐஜி விஜயகுமார் தற்கொலை குறித்து தெரிவிக்கையில், “டிஐஜி விஜயகுமார் மன அழுத்தத்தில் இருந்து வந்துள்ளார். மேலும் மன அழுத்தத்திற்கு நிவாரணம் அளிக்கும் வகையில் மருந்துகள் எடுத்து வந்துள்ளார். இந்நிலையில் விஜயகுமார் காலையில் நடைப்பயிற்சி மேற்கொண்ட பிறகு தற்கொலை செய்து கொண்டதாக முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. தற்கொலை செய்து கொண்டதற்கு பணிச்சுமை காரணம் அல்ல” எனத் தெரிவித்துள்ளார். முன்னதாக கோவை சரக டிஐஜி விஜயகுமார் மறைவுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது இரங்கலைத் தெரிவித்து இருந்தார். 

 

 

சார்ந்த செய்திகள்