Skip to main content

தடுப்பூசி போடப்பட்ட 2 குழந்தைகள் இறந்த விவகாரம்...  சுகாதாரத்துறை செயலாளர் பேட்டி!

Published on 19/02/2021 | Edited on 19/02/2021

 

kovai child vaccine incident Interview with the Secretary of Health

 

தர்மபுரியைச் சேர்ந்த பிரசாந்த் - விஜயலட்சுமி தம்பதியினர், கோவை மசக்காளிபாளையத்தில் தங்கி வேலைசெய்து வருகின்றனர். பிரசாந்த் அந்தப் பகுதியில் கார் ஓட்டுநராக பணியாற்றி வருகிறார். இவர்களுக்கு கிஷாந்த் என்ற மூன்று மாத ஆண் குழந்தை உள்ளது. இந்நிலையில் கிசாந்துக்கு நேற்று முன்தினம் (17.02.2021) அருகில் உள்ள அங்கன்வாடி மையத்தில் நடைபெற்ற முகாமில் பெண்டவேலன்ட், ரோட்டா வைரஸ் தடுப்பூசி, போலியோ சொட்டுமருந்து போட்டுள்ளனர். தடுப்பூசி போடப்பட்டு வீட்டிற்குச் சென்ற சில மணிநேரத்தில் குழந்தை மயங்கியுள்ளது. இதனால் பதறிய பெற்றோர், குழந்தையைக் கோவை அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது.

 

தடுப்பூசி காரணமாக குழந்தை உயிரிழந்துள்ளதாக பெற்றோர்கள் குற்றஞ்சாட்டிய நிலையில், இதுதொடர்பாக கோவை சிங்காநல்லூர் போலீசார் வழக்குப் பதிவுசெய்து விசாரித்து வருகின்றனர். உயிரிழந்த குழந்தை கிஷாந்தின் உடல் கோவை அரசு மருத்துவமனையில் பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டது.

 

 

kovai child vaccine incident Interview with the Secretary of Health

 

“அந்தக் குறிப்பிட்ட அங்கன்வாடி மையத்தில் நேற்று இதேபோன்று 13 குழந்தைகளுக்குத் தடுப்பூசி போடப்பட்ட நிலையில், அனைத்து குழந்தைகளும் நலமாக உள்ளன. இந்த ஒரு குழந்தை மட்டும் உயிரிழந்துள்ளது. எனவே பிரேதப் பரிசோதனைக்குப் பின்னரே இதில் உயிரிழப்புக்கான உண்மை தெரியவரும்” என முன்னரே சுகாரத்துறை அதிகாரிகள் தரப்பு கூறியிருந்த நிலையில், பிரேதப் பரிசோதனைக்குப் பின் நேற்று (18.02.2021) சுகாதாரத்துறை சார்பில் விளக்கம் ஒன்று வெளியிடப்பட்டது. அதில், “தடுப்பூசி போடப்பட்ட குழந்தை உயிரிழந்தது நிமோனியா காய்ச்சலால்தான். தடுப்பூசி போட்டதால் குழந்தை உயிரிழக்கவில்லை” என்று தெரிவிக்கப்பட்டது.

 

இந்நிலையில் சவுரிபாளையத்தில் வெற்றிமாறன் என்ற இரண்டரை வயது குழந்தைக்கு மசக்காளிபாளையம் துணை சுகாதார நிலையத்தில் தடுப்பூசி போடப்பட்ட நிலையில், அந்தக் குழந்தைக்கும் திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட, தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட நிலையில் குழந்தை உயிரிழந்தது.

 

kovai child vaccine incident Interview with the Secretary of Health

 

தடுப்பூசி போட்டப்பிறகு இரண்டு குழந்தைகள் அடுத்தடுத்து உயிரிழந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், இதுதொடர்பாக தனி மருத்துவர்கள் குழு விசாரிக்கும் என தமிழக சுகாதாரத்துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் செய்தியாளர்களைச் சந்தித்து பேசுகையில், ''ஒரு குழந்தை 15 மணிநேரத்திற்குள் இறந்திருக்கிறது. மற்றொரு குழந்தை 5 மணி நேரத்தில் இறந்திருக்கிறது. இந்த நேரத்தில் நாம் கவனிக்க வேண்டியது, குறிப்பிட்ட அந்த சுகாதார மையங்களில் இதே பேட்ச்சில் தடுப்பூசி போட்டுக்கொண்ட 10 குழந்தைகளும், 13 குழந்தைகளும் நலமாக உள்ளன. ஒருவகையில் இது நமக்குப் பாதுகாப்பு. ஆனால் இன்னொரு கோணத்தில், இந்த இரண்டு குழந்தைகள் உயிரிழப்பு குறித்து கமிட்டி முழுவதும் ஆராய்ந்து கொடுக்கும் தகவலின் அடிப்படையில்தான் சொல்ல முடியும். காய்ச்சல் இருப்பது தெரிந்தும் தடுப்பூசி போடப்பட்டதா என மாவட்ட அளவிலான கமிட்டி மற்றும் மாநில அளவிலான கமிட்டி சேர்ந்து முழுமையாக விசாரிப்பார்கள்'' என்றார்.

 

சார்ந்த செய்திகள்

Next Story

கோவையில் ஜிபே மூலம் பாஜக பணப்பட்டுவாடா-திமுக புகார்

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
DMK complains about BJP payment through GPay in Coimbatore

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ள தொகுதிகளில் தேர்தல் பரப்புரை நேற்று (17.04.2024) மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது. மேலும் இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகத்திலும், புதுச்சேரியிலும் வாக்குப்பதிவு நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் கோவை தொகுதியில் பாஜகவினர் ஜிபே மூலம் பண பட்டுவாடா செய்வதாக புகார்கள் எழுந்துள்ளது. இதுகுறித்து திமுக புகார் எழுப்பியுள்ளது. பிரச்சாரம் முடிந்தவுடன் வெளியூர் நபர்கள் தொகுதியை விட்டு வெளியேற வேண்டும் என்ற நடைமுறையை பின்பற்றவில்லை என திமுக குற்றம் சாட்டியுள்ளது. கோவை அவிநாசி சாலையில் உள்ள அலுவலகத்தில் வெளி மாவட்டத்தைச் சேர்ந்த பலர் தங்கி ஜிபே மூலம் பணம் பட்டுவாடா செய்து பாஜகவுக்கு வாக்களிக்கும்படி கோரி வருகின்றனர் எனவும், சென்னையை சேர்ந்த ஜெயப்பிரகாஷ், கிருஷ்ணகுமார், கரூரை சேர்ந்த சிவகுமார் ஆகியோர் பணம் பட்டுவாடா செய்வதாகவும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் திமுக வலியுறுத்தியுள்ளது.

Next Story

தனியார் கல்லூரி பேருந்து மோதி 6 வயது சிறுவன் உயிரிழப்பு

Published on 17/04/2024 | Edited on 17/04/2024
6-year-old boy lost their live in private college bus crash

நாமக்கல்லில் தனியார் கல்லூரி பேருந்து மோதி ஆறு வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது.

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு ஈரோடு சாலையில் உள்ள  தோட்ட வாடி கிராமத்தில் உள்ள பேருந்து நிலைய பகுதியில் கூட்டப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்த சதீஷ் என்பவர் இருசக்கர வாகனத்தில் தன்னுடைய 6 வயது மகனுடன் சென்று கொண்டிருந்தார். அப்போது இருசக்கர வாகனத்திற்குப் பின்புறம் வந்த தனியார் கல்லூரி பேருந்து எதிர்பாராத விதமாக மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே 6 வயது சிறுவன் தலை நசுங்கி உயிரிழந்தார். தந்தை சதீஷ்குமாரின் கை முறிந்து துண்டானது.

இந்தச் சம்பவம் அங்குப் பரபரப்பை ஏற்படுத்த, உடனடியாக அங்கு வந்த போலீசார் சிறுவனின் உடலைக் கைப்பற்றி  பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். அந்தப் பகுதிகளில் காலை நேரத்தில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருப்பதாகவும், அந்த நேரத்தில் தனியார் பேருந்துகள் மிகுந்த வேகத்துடன் செல்வதால் சாலைத் தடுப்பு, வேகத்தடை ஆகியவற்றை அமைத்துக் கொடுக்க வேண்டும் என அந்த பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

திருச்செங்கோடு காவல் நிலைய போலீசார் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தனியார் கல்லூரி பேருந்து மோதி 6 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் அங்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.