ADVERTISEMENT

கோவை குண்டுவெடிப்பு குற்றவாளி முகமது அன்சாரிக்கு 20 நாட்கள் பரோல்!

07:54 PM Mar 14, 2018 | Anonymous (not verified)


கோவை குண்டுவெடிப்பு வழக்கில் 2வது குற்றவாளியான முகமது அன்சாரிக்கு 20 நாட்கள் பரோல் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கோவையில் கடந்த 1998 ஆம் ஆண்டு நடைபெற்ற குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட முகமது அன்சாரி, அந்த வழக்கில் 2வது குற்றவாளியாக சேர்க்கப்பட்டு அவருக்கு ஆயுள் தண்டனையும் விதிக்கப்பட்டது. இந்நிலையில் 20 வருடமாக கோவை சிறையில் இருந்து வருகிறார். இந்நிலையில் இவருக்கு பரோல் வழங்கக் கோரி அவரது மனைவி சம்சுனிசா என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார்.

அந்த மனுவில் தங்களுக்கு 3 மகள்கள் உள்ளதாகவும் மூத்த மகளான பாத்திமா என்பவருக்கு திருமண ஏற்பாடு நடைபெற்று வருகிறது. வரும் ஏப்ரல் 17ஆம் தேதி திருமணம் நடக்க இருக்கிறது. இதனால் மகளின் திருமணத்திற்காக தன்னுடைய கணவரை 2மாத காலம் பரோல் வழங்க கோரி மனுவில் தெரிவித்து இருந்தார்.

இந்த மனு நீதிபதி சி.டி.செல்வம் மற்றும் நீதிபதி என்.சதீஸ்குமார் அடங்கிய அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, ஏப்ரல் 10தேதி முதல் 20நாட்கள் பரோல் வழங்கி நீதிபதிகள் உத்தரவிட்டனர். 20ஆண்டுகளாக சிறையில் இருந்த முகமது அன்சாரிக்கு முதன் முதலாக பரோல் கிடைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT
ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT