ADVERTISEMENT

பாலியல் சிதைவில் நூறு பெண்களா..? குற்றவாளிகளை தப்பவிடும் அரசு..! -போராட்டத்தில் கொ.ம.தே.க.

05:16 PM Mar 04, 2019 | jeevathangavel

ADVERTISEMENT

கோவை மாவட்டம் பொள்ளாச்சி பகுதியில் வசிக்கும் ஒரு கும்பல் நடத்திய காம வேட்டையில் கூலி வேலைக்கு செல்லும் பெண்கள் முதல் கல்லூரி மாணவிகள் வரை என ஏராளமான அப்பாவி பெண்கள் பாலியல் துன்புறுத்தலுக்கு இரையாகியுள்ளனர். இந்த அதிர்ச்சிகரமான தகவல் தற்போது வெளியாகி கோவை மற்றும் திருப்பூர் மாவட்டத்தையே அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது.

ADVERTISEMENT


இந்த கொடூர செயலில் ஈடுபட்ட காம வெறியர்களான திருநாவுக்கரசு, பார் நாகராஜ், ஜேம்ஸ், மேலும் ஏழுக்கும் மேற்பட்ட இளைஞர்களை கைது செய்து சட்டப்படி அதிக பட்ச தண்டனை கொடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.


அப்பாவி பெண்களை குறிவைத்து தங்கள் வலைக்குள் கொண்டு வந்து பலாத்காரம் செய்வது அதை போட்டோ மற்றும் வீடியோவாக எடுத்து அதை காட்டியே தொடர்ந்து மிரட்டலில் பணிய வைப்பது, இதில் சில வசதியான பெண்களையும் மடக்கி அவர்களிடம் லட்சக்கணக்கில் பணம் பறிப்பது என இந்த சமூக விரோதிகள் சில ஆண்டுகளாக தொடர்ந்து ஈடுபட்டு வந்துள்ளனர். இவர்களால் உடல் ரீதியாக இரையான பெண்களின் எண்ணிக்கை நூறு பேர் வரை இருக்கலாம் என்ற அதிர்ச்சிகரமான தகவல்கள் அப்பகுதி மக்களையே நிலைகுலைய வைத்துள்ளது.



இந்த கொடுஞ்செயலில் ஈடுபட்ட அனைத்து குற்றவாளிகளையும் உடனே கைது செய்ய வேண்டும், அந்த குற்றவாளிகள் ஆளும் அ.தி.மு.க. கட்சியின் பின்னனியில் இருப்பதால் போலீஸ் நடவடிக்கை தீவிரமாக எடுக்கவில்லையென்றும் எடப்பாடி அரசே... காவல்துறையே குற்றவாளிகளுக்கு துணை போகாதே என்று இன்று காலை பொள்ளாச்சியில் கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சியின் சார்பில் கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது. இதில் அக்கட்சியின் பொதுச் செயலாளர் E.R.ஈஸ்வரன் கலந்து கொண்டு குற்றவாளிகளை காப்பாற்ற நினைக்கும் ஆளுங்கட்சிக்கு எதிராக கண்டன கோஷமிட்டார். இதில் பல நூற்றுக்கணக்கான ஆண்களும் பெண்களும் கலந்து கொன்டனர்.

ஒரு கும்பலால் ஏராளமான பெண்கள் பாலியல் சிதைவுக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் அடுத்தடுத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தவுள்ளது.


ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT