Skip to main content

கொங்கணாபுரம் சந்தை; ஒரே நாளில் 6 கோடிக்கு வர்த்தகம்! 

Published on 25/06/2022 | Edited on 25/06/2022

 

Konganapuram Saturn Market; 6 crore trade in one day!

 

கொங்கணாபுரம் சனி சந்தையில், ஆடு, கோழி, காய்கறிகள், பழங்கள் விற்பனை மூலம் இன்று (25/06/2022) ஒரே நாளில் 6 கோடி ரூபாய்க்கு வர்த்தகம் நடந்தது.

 

சேலம் மாவட்டம், இடைப்பாடி அருகே உள்ள கொங்கணாபுரத்தில் வாரந்தோறும் சனிக்கிழமைகளில் சந்தை கூடுவது வழக்கம். வழக்கமான மளிகை பொருள்கள், காய்கறிகள் உள்ளிட்ட பொருள்களும் விற்பனை செய்யப்படும் தளமாக இருந்தாலும் கூட, இறைச்சிக்கான ஆடு விற்பனைக்கு இந்த சந்தை பெயர் பெற்றதாகும். 

 

சேலம், இடைப்பாடி மற்றும் அதன் சுற்றுவட்டாரங்கள் மட்டுமின்றி அண்டை மாவட்டங்களான நாமக்கல், ஈரோடு, தர்மபுரி ஆகிய மாவட்டங்களில் இருந்து விவசாயிகள், வியாபாரிகள் ஆடு, கோழிகளை விற்பனைக்குக் கொண்டு வருகின்றனர். இன்று (ஜூன் 25) கூடிய சந்தையில் 10 கிலோ எடையுள்ள ஆடு 5 ஆயிரம் முதல் 6,400 ரூபாய் வரையும், 20 கிலோ எடையுள்ள செம்மறி ஆடுகள் 10,300 முதல் 12,600 ரூபாய் வரையும், வளர்ப்பு குட்டி ஆடுகள் 3,000 ரூபாய் வரையிலும்  விற்பனை ஆயின. 

 

ஆடுகள் மட்டுமின்றி பந்தய சேவல்கள் விற்பனைக்கும் இந்த சந்தை சிறப்பு வாய்ந்தது. இன்று ஒரே நாளில் 3500 பந்தய சேவல்கள் விற்பனை ஆகின. காகம், கீரி, செங்கருப்பு, மயில், சுருளி ரக பந்தய சேவல்கள் 1000 முதல் 3500 ரூபாய் வரை விற்பனை ஆகின. இவை தவிர 130 டன் காய்கறிகள் விற்பனைக்கு வந்திருந்தன. 60 கிலோ கொண்ட சின்ன வெங்காயம், பெரிய வெங்காயம் 1200 முதல் 1800 ரூபாய் வரையிலும் விற்பனை செய்யப்பட்டது. 

 

தக்காளி கிலோ 25 முதல் 35 ரூபாய் விற்பனை ஆனது. பலாப்பழங்கள் ரகத்திற்கேற்ப 100 முதல் 250 ரூபாய் வரை விற்பனை ஆனது. கொங்கணாபுரம் சனி சந்தையில், இன்று ஒரே நாளில் 6 கோடி ரூபாய்க்கு வர்த்தகம் நடந்ததாக சந்தை பொறுப்பாளர்கள் கூறினார்கள்.


சார்ந்த செய்திகள்

Next Story

வாக்களிக்க சென்ற இருவர் மயங்கி விழுந்து உயிரிழப்பு!

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
Two people who went to vote fainted and passed way

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது

அந்த வகையில் தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெறவுள்ளது.  இந்த நிலையில் காலை 7 மணி முதல் வாக்காள பெருமக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். அதேபோன்று அரசியல் கட்சி தலைவர்கள், வேட்பாளர்கள் என பலரும் தங்களின் வாக்குகளை வாக்குச்சாவடிகளில் செலுத்தி வருகின்றனர். தமிழ்நாட்டில் காலை 9 மணி நிலவரப்படி 24.34 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.

இந்த நிலையில் வாக்களிக்க சென்ற இருவர் மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளனர். சேலம் மாவட்டம் கெங்கவல்லி அருகே செந்தாரப்பட்டி ஊராட்சி தொடக்கப்பள்ளி வாக்குச்சாவடி மையத்தில் வாக்களிக்கச் சென்ற சின்னபொண்ணு (77) என்ற மூதாட்டி மயங்கி விழுந்து உயிரிழந்தார். அதேபோன்று, சேலம் மாநகராட்சி நடுநிலைப்பள்ளி வளாகத்தில் சூரமங்கலம் பகுதியை சேர்ந்த பழனிசாமி(65) தனது மனைவியுடன் வாக்களிக்கச் சென்றபோது மயங்கி விழுந்து பலியானார். சேலம் மாநகரில் நடந்த இந்த துயர் சம்பவம் அப்பகுதி மக்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Next Story

17 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த போர் வீரனின் நடுகல் கண்டுபிடிப்பு!

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
17th century warrior headstone Kantipudi

சேலம் மாவட்டம், மாதநாயக்கன்பட்டி பெருந்தலைவர் காமராசர் நினைவு அரசு மேல்நிலைப்பள்ளி தொன்மை பாதுகாப்பு மன்றத்தின் தலைவர் தலைமை ஆசிரியர், பொறுப்பு ஆசிரியர்களாக அன்பரசி, விஜயகுமார் ஆகியோர் உள்ளனர். இப்பள்ளி மாணவர்கள் கொடுத்த தகவலின்படி ஆசிரியர்களும், மாணவர்களும் களப்பயணத்தின் போது வீரனின்  நடுகல்  ஒன்று கண்டறியப்பட்டது.

பொது ஆண்டு 17 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த இந்த நடுகல்லில் எழுத்துகள் எதுவும் இல்லை. கல்பூமியின் மேற்பரப்பில் 2 அடி உயரமும் 1.5  அடி அகலம் கொண்டது. இந்த நடுகல்லை சுற்றி கல்திட்டை போன்ற அமைப்பும் உள்ளது . நடுகல்லில் போர் வீரனின் சிற்பம்  உள்ளது.
வேட்டைக்கு சென்று இறந்ததற்காக எடுக்கப்பட்ட நடுகல்லாக இருக்கலாம். ஆலிடாசனம் நிலையில் வில்லில் நாணில் அம்பு எய்துவது போன்றும், இடுப்பில் குரு வாளும், காதில் பத்ர குண்டலமும்,   கழுத்தில் சரப்பளி, சவுடி, முத்தாரம் அணிகலன் அணிந்திருப்பது  போன்றும் கையில் தோள்வளை  இருப்பது போன்ற உருவமைப்பு உள்ளது.

17th century warrior headstone Kantipudi

இப்பகுதி தாருகாவனத்திற்க்கு அருகில் இருப்பதால்  இந்த வீரன் வேட்டுவ தலைவனாக இருக்கலாம். இந்த நடுகல் எல்லாம் அவர்களின் நினைவைப் போற்றும் வகையில் வைக்கப்பட்டதாகும்.  தொன்மை பாதுகாப்பு மன்றத்தின் சார்பாக தொல்லியல் சார்ந்த வரலாற்று தகவல்களையும், அதனை பற்றிய விழிப்புணர்வையும் இன்றை இளைய தலைமுறை மாணவர்களுக்கு கொண்டு சேர்ப்பது தான் தொன்மை பாதுகாப்பு மன்றத்தின் நோக்கமாகும் என்கின்றனர் தொன்மை பாதுகாப்பு மன்ற ஆசிரியர்கள்.