
திருச்சி மாவட்டம், லால்குடி வட்டம், ஆலங்குடி ஊராட்சிக்குட்பட்ட கே.வி.பேட்டை பகுதியில் உள்ள கொள்ளிடம் ஆற்றில் தண்ணீர் வரத்து அதிகரித்து, கூழையாற்றில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார், நேற்று நள்ளிரவில் அப்பகுதியினைப் பார்வையிட்டு, அலுவலர்கள் கண்காணிப்புடன் பணியாற்றிட உத்தரவிட்டார். மேலும் பாதுகாப்பு நடவடிக்கையாக, சர்ச்சில் தங்க வைக்கப்பட்டுள்ள அப்பகுதி மக்களிடம் மாவட்ட ஆட்சியர் கலந்துரையாடி, பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு நல்கிடும்படி கேட்டுக் கொண்டார். அவர்களுக்கான உணவுகளையும் முறையாக ஏற்பாடு செய்யவும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

அதேபோல் திருச்சி, மண்ணச்சநல்லூர் வட்டம், பிச்சாண்டார்கோவில் ஊராட்சி, வாழவந்தபுரம் பகுதியில் உள்ள கொள்ளிடம் ஆற்றில் தண்ணீர் வரத்தினை நேற்று நள்ளிரவில் மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார், பார்வையிட்டார். மேலும், அலுவலர்கள் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் கண்காணிப்புடன் பணியாற்றிடவும் உத்தரவிட்டார். அப்பகுதி மக்களை பாதுகாப்பு நடவடிக்கையாக, பிச்சாண்டார்கோவில் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளதையடுத்து, அவர்களுக்கு உணவினை வழங்கி, பாதுகாப்புடன் கண்காணித்திட அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார்.