ADVERTISEMENT

“எவ்வளவு வேண்டும்...” - தனபாலிடம் பேரம் பேசிய அதிமுக முக்கிய பிரமுகர்?

10:51 AM Sep 08, 2023 | mathi23

ADVERTISEMENT

ADVERTISEMENT

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அடுத்துள்ள கோடநாடு பகுதியில் கடந்த 2017 ஆம் ஆண்டு ஏப்ரல் 24 ஆம் தேதி முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்குச் சொந்தமான பங்களாவில் கொலை மற்றும் கொள்ளைச் சம்பவம் நடைபெற்றது. இதில், ஜெயலலிதாவின் கார் ஓட்டுநர் கனகராஜ், வாளையார் மனோஜ், சயான் உள்ளிட்ட 11 பேர் ஈடுபட்டுள்ளனர் என்று காவல்துறையினருக்குத் தெரியவந்தது. இந்த கொலை சம்பவம் தொடர்பாக கார் ஓட்டுநர் கனகராஜை காவல்துறையினர் தேடி வந்த நிலையில், 2017 ஆம் ஆண்டு ஏப்ரல் 29 ஆம் தேதி வாகன விபத்தில் மர்மமான முறையில் உயிரிழந்தார். அதே நேரத்தில் கனகராஜ் அழைத்து வந்த கூலிப்படை 10 பேரையும் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.

காவல்துறையினர் நடத்திய தொடர் விசாரணையில், இந்த கொலை சம்பவம் தொடர்பாகச் சில ஆவணங்களை கனகராஜின் சகோதரர் தனபால் அழித்ததாகக் காவல்துறையினருக்குத் தெரியவந்தது. இது சம்பந்தமாக, கடந்த 2021 ஆம் ஆண்டு அக்டோபர் 25 ஆம் தேதி ஜெயலலிதாவின் கார் ஓட்டுநர் கனகராஜின் சகோதரர் தனபால் மற்றும் அவரது உறவினர் ரமேஷ் ஆகியோரை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். இதையடுத்து, தனபாலை ஜாமீனில் விடுவித்தனர். வெளியே வந்த தனபால், கடந்த மாதம் நில மோசடி வழக்கில் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

இதனிடையே, கடந்த சில நாட்களுக்கு முன்பு தனபாலுக்கு நெஞ்சு வலி ஏற்பட்டதால் சேலம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும்போது செய்தியாளர்கள் வெளியே கூடி நின்றனர். அப்போது அவர், “எனது மகள் இரண்டு பேரையும் முதல்வர் தான் காப்பாற்ற வேண்டும். கோடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கு குறித்த கூடுதல் தகவல்களை விரைவில் தெரிவிக்க உள்ளேன்” என்று கூறியிருந்தார். இதையடுத்து ஜாமீனில் வெளியே வந்துள்ள தனபால் சேலத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தபோது, “ஓட்டுநர் கனகராஜ் எனது தம்பி; அதனால் என்னையும் விசாரித்தார்கள். சிபிசிஐடி போலீசார் வேண்டும் என்றால் என்னை விசாரிக்கட்டும். நான் முழு ஒத்துழைப்பும் அளிப்பதற்குத் தயாராக இருக்கிறேன்” என்று கூறி இருந்தார்.

இதையடுத்து கனகராஜின் சகோதரர் தனபாலிடம் விசாரணை நடத்த அனுமதி வழங்கக் கோரி உதகை நீதிமன்றத்தில் சிபிசிஐடி சார்பில் மனுத்தாக்கல் செய்திருந்த நிலையில், கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் கனகராஜின் சகோதரர் தனபாலிடம் சி.பி.சிஐ.டி போலீசார் விசாரணை நடத்த உதகை நீதிமன்றம் அனுமதி வழங்கி இருந்தது. தனபாலிடம் விசாரணை நடத்த நீதிமன்ற அனுமதி ஏதும் தேவையில்லை. சம்மன் அனுப்பி சிபிசிஐடி போலீசார் விசாரித்துக் கொள்ளலாம் என நீதிமன்றம் உத்தரவிட்டு இருந்தது. இதையடுத்து, கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக வரும் 14 ஆம் தேதி கோவையில் உள்ள சி.பி.சி.ஐ.டி அலுவலகத்தில் ஆஜராகி விளக்கம் அளிக்க தனபாலுக்கு சி.பி.சி.ஐ.டி போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர்.

இந்த நிலையில், சிபிசிஐடி விசாரணைக்குத் தயாராக இருப்பதாகக் கூறி தனபால் நேற்று சேலத்தில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர், “கோடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கு பற்றி கடந்த 2017 ஆம் ஆண்டில் இருந்தே தவறுகளை பற்றி கூறிக்கொண்டு இருக்கிறேன். யாரும் சொல்லிக் கொடுத்து நான் பேசவில்லை. இந்த வழக்கு குறித்த விசாரணையின் போது உண்மை எதுவும் பேசக்கூடாது. எவ்வளவு பணம் வேண்டுமானாலும் தருகிறேன் என்று அதிமுகவின் முக்கிய பிரமுகர் ஒருவர் என்னிடம் பேரம் பேச வந்தார். என்னிடம் பேரம் பேச வர வேண்டாம் என்று கூறி அவரை அனுப்பி விட்டேன்.

எனக்கும், என் மனைவிக்கும் எந்தவித பிரச்சனையும் இல்லை. நான் பத்திரிகையாளர்களைச் சந்தித்து அடிக்கடி பேசி வருவதால் ஆபத்து ஏற்படும் என்று நினைத்து என் மனைவி என்னை பற்றி புகார் கொடுத்துள்ளார். ஆனால் இந்த வழக்கில் உள்ள உண்மையை வெளியே கொண்டு வர வேண்டும். அப்போதைய விசாரணை அதிகாரிகள், ஆட்சியாளர்களுக்கு துணை நின்று கொண்டு என்னை மிகவும் கொடுமைப் படுத்தினார்கள். இப்போது உள்ள எதிர்க்கட்சியினரால் எனக்கும், என் குழந்தைகளுக்கும் அச்சுறுத்தல் உள்ளது. கோடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கு சம்பந்தமாக கோவை சிபிசிஐடி விசாரணையின் போது அனைத்து உண்மைகளையும் கூறுவேன். என் மனைவியை வைத்து புகார் கொடுத்தால், நான் காவல்துறையினரால் கைது செய்யப்படுவேன். அதன் பின்னர், கோடநாடு வழக்கில் விசாரணையில் ஆஜராகாமல் தள்ளிப்போகும் சூழ்நிலையை உருவாக்கவே, அவர் மூலம் என் மீது புகார் கொடுக்க வைத்துள்ளனர்” என்று கூறினார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT