Skip to main content

“எவ்வளவு வேண்டும்...” - தனபாலிடம் பேரம் பேசிய அதிமுக முக்கிய பிரமுகர்?

Published on 08/09/2023 | Edited on 08/09/2023

 

Kodanadu case; "The AIADMK figure who bargained not to speak the truth" - Kanagaraj's brother Dhanapal

 

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அடுத்துள்ள கோடநாடு பகுதியில் கடந்த 2017 ஆம் ஆண்டு ஏப்ரல் 24 ஆம் தேதி முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்குச் சொந்தமான பங்களாவில் கொலை மற்றும் கொள்ளைச் சம்பவம் நடைபெற்றது. இதில், ஜெயலலிதாவின் கார் ஓட்டுநர் கனகராஜ், வாளையார் மனோஜ், சயான் உள்ளிட்ட 11 பேர் ஈடுபட்டுள்ளனர் என்று காவல்துறையினருக்குத் தெரியவந்தது. இந்த கொலை சம்பவம் தொடர்பாக கார் ஓட்டுநர் கனகராஜை காவல்துறையினர் தேடி வந்த நிலையில், 2017 ஆம் ஆண்டு ஏப்ரல் 29 ஆம் தேதி வாகன விபத்தில் மர்மமான முறையில் உயிரிழந்தார். அதே நேரத்தில் கனகராஜ் அழைத்து வந்த கூலிப்படை 10 பேரையும் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.

 

காவல்துறையினர் நடத்திய தொடர் விசாரணையில், இந்த கொலை சம்பவம் தொடர்பாகச் சில ஆவணங்களை கனகராஜின் சகோதரர் தனபால் அழித்ததாகக் காவல்துறையினருக்குத் தெரியவந்தது. இது சம்பந்தமாக, கடந்த 2021 ஆம் ஆண்டு அக்டோபர் 25 ஆம் தேதி ஜெயலலிதாவின் கார் ஓட்டுநர் கனகராஜின் சகோதரர் தனபால் மற்றும் அவரது உறவினர் ரமேஷ் ஆகியோரை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். இதையடுத்து, தனபாலை ஜாமீனில் விடுவித்தனர். வெளியே வந்த தனபால், கடந்த மாதம் நில மோசடி வழக்கில் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

 

இதனிடையே, கடந்த சில நாட்களுக்கு முன்பு தனபாலுக்கு நெஞ்சு வலி ஏற்பட்டதால் சேலம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும்போது செய்தியாளர்கள் வெளியே கூடி நின்றனர். அப்போது அவர், “எனது மகள் இரண்டு பேரையும் முதல்வர் தான் காப்பாற்ற வேண்டும். கோடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கு குறித்த கூடுதல் தகவல்களை விரைவில் தெரிவிக்க உள்ளேன்” என்று கூறியிருந்தார். இதையடுத்து ஜாமீனில் வெளியே வந்துள்ள தனபால் சேலத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தபோது, “ஓட்டுநர் கனகராஜ் எனது தம்பி; அதனால் என்னையும் விசாரித்தார்கள். சிபிசிஐடி போலீசார் வேண்டும் என்றால் என்னை விசாரிக்கட்டும். நான் முழு ஒத்துழைப்பும் அளிப்பதற்குத் தயாராக இருக்கிறேன்” என்று கூறி இருந்தார்.

 

இதையடுத்து கனகராஜின் சகோதரர் தனபாலிடம் விசாரணை நடத்த அனுமதி வழங்கக் கோரி உதகை நீதிமன்றத்தில் சிபிசிஐடி சார்பில் மனுத்தாக்கல் செய்திருந்த நிலையில், கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் கனகராஜின் சகோதரர் தனபாலிடம் சி.பி.சிஐ.டி போலீசார் விசாரணை நடத்த உதகை நீதிமன்றம் அனுமதி வழங்கி இருந்தது. தனபாலிடம் விசாரணை நடத்த நீதிமன்ற அனுமதி ஏதும் தேவையில்லை. சம்மன் அனுப்பி சிபிசிஐடி போலீசார் விசாரித்துக் கொள்ளலாம் என நீதிமன்றம் உத்தரவிட்டு இருந்தது. இதையடுத்து, கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக வரும் 14 ஆம் தேதி கோவையில் உள்ள சி.பி.சி.ஐ.டி அலுவலகத்தில் ஆஜராகி விளக்கம் அளிக்க தனபாலுக்கு சி.பி.சி.ஐ.டி போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர். 

 

இந்த நிலையில், சிபிசிஐடி விசாரணைக்குத் தயாராக இருப்பதாகக் கூறி தனபால் நேற்று சேலத்தில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர், “கோடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கு பற்றி கடந்த 2017 ஆம் ஆண்டில் இருந்தே தவறுகளை பற்றி கூறிக்கொண்டு இருக்கிறேன். யாரும் சொல்லிக் கொடுத்து நான் பேசவில்லை. இந்த வழக்கு குறித்த விசாரணையின் போது உண்மை எதுவும் பேசக்கூடாது. எவ்வளவு பணம் வேண்டுமானாலும் தருகிறேன் என்று அதிமுகவின் முக்கிய பிரமுகர் ஒருவர் என்னிடம் பேரம் பேச வந்தார். என்னிடம் பேரம் பேச வர வேண்டாம் என்று கூறி அவரை அனுப்பி விட்டேன்.

 

எனக்கும், என் மனைவிக்கும் எந்தவித பிரச்சனையும் இல்லை. நான் பத்திரிகையாளர்களைச் சந்தித்து அடிக்கடி பேசி வருவதால் ஆபத்து ஏற்படும் என்று நினைத்து என் மனைவி என்னை பற்றி புகார் கொடுத்துள்ளார். ஆனால் இந்த வழக்கில் உள்ள உண்மையை வெளியே கொண்டு வர வேண்டும். அப்போதைய விசாரணை அதிகாரிகள், ஆட்சியாளர்களுக்கு துணை நின்று கொண்டு என்னை மிகவும் கொடுமைப் படுத்தினார்கள். இப்போது உள்ள எதிர்க்கட்சியினரால் எனக்கும், என் குழந்தைகளுக்கும் அச்சுறுத்தல் உள்ளது. கோடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கு சம்பந்தமாக கோவை சிபிசிஐடி விசாரணையின் போது அனைத்து உண்மைகளையும் கூறுவேன்.  என் மனைவியை வைத்து புகார் கொடுத்தால், நான் காவல்துறையினரால் கைது செய்யப்படுவேன். அதன் பின்னர், கோடநாடு வழக்கில் விசாரணையில் ஆஜராகாமல் தள்ளிப்போகும் சூழ்நிலையை உருவாக்கவே, அவர் மூலம் என் மீது புகார் கொடுக்க வைத்துள்ளனர்” என்று கூறினார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ரூ.4 கோடி பறிமுதல் விவகாரம்; ஆவணங்கள் சிபிசிஐடியிடம் ஒப்படைப்பு! 

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
Rs. 4 crore confiscation issue; Documents handed over to CBCId

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து திருநெல்வேலிக்கு செல்லும் ரயிலில் தாம்பரம் ரயில் நிலையத்தில் கடந்த 6 ஆம் தேதி (06.04.2024) இரவு உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்ல முயன்றதாக சுமார் ரூ.4 கோடி மதிப்பிலான ரொக்கம் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டது. இதனையடுத்து இந்தப் பணத்தை எடுத்து வந்த புரசைவாக்கம் தனியார் விடுதி மேலாளரும் பாஜக உறுப்பினருமான சதீஷ், அவரின் சகோதரர் நவீன் மற்றும் லாரி ஓட்டுநர் பெருமாள் ஆகிய 3 பேரும் கைது செய்யப்பட்டனர். அப்போது திருநெல்வேலி மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு, இந்தப் பணத்தைக் கொண்டு செல்ல முயன்றதாக மூவரும் வாக்குமூலம் கொடுத்ததாகத் தகவல் வெளியாகி இருந்தது.

இந்தச் சம்பவம் தொடர்பாக நயினார் நாகேந்திரன் ஆஜராகி பதிலளிக்கும்படி காவல்துறை தரப்பில் சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. ஆனால் நயினார் நாகேந்திரன் விசாரணைக்கு ஆஜராகாத நிலையில் விசாரணைக்கு ஆஜராக பத்து நாட்கள் அவகாசம் வேண்டும் என நயினார் நாகேந்திரன் தரப்பில் காவல்துறைக்கு பதில் கடிதம் கொடுக்கப்பட்டிருந்தது. அதேசமயம் இந்தப் பணத்தை நயினார் நாகேந்திரன் உறவினர் முருகன், இவரின் நண்பர்களான ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் ஆகிய 3 மூவரும் கொடுத்து அனுப்பியதாக தெரிவித்திருந்தனர். இதனடிப்படையில் போலீசார் முருகன், ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் ஆகியோருக்கு சம்மன் அனுப்பி இருந்தனர். இதனையடுத்து இவர்கள் நேற்று முன்தினம் (23.04.2024) தாம்பரம் காவல் நிலையத்தில் நேரில் ஆஜராகி இருந்தனர்.

அப்போது நயினார் நாகேந்திரன் உறவினர் முருகன் காவல்துறையில் அளித்த வாக்குமூலத்தில், “தனக்கும் கைப்பற்றப்பட்ட பணத்திற்கும் எவ்வித சம்பந்தமமும் இல்லை. நயினார் நாகேந்திரன் உதவியாளர் மணிகண்டன் 3 நபர்கள் பணம் கொண்டு வருகிறார்கள். எனவே இவர்களின் பாதுகாப்பிற்காக இருவரை அனுப்ப கேட்டுக்கொண்டதால் தான் தன்னிடம் வேலை பார்க்கும் ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் என இருவரையும் அனுப்பி வைத்தேன். சென்னையில் 4 ஹோட்டல்களை வாடகைக்கு எடுத்து நடத்தி வருகிறேன். அதில் ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் இருவரும் பணியாற்றி வருகின்றனர்” எனத் தெரிவித்துள்ளார். இந்த வாக்குமூலத்தின் அடிப்படையில் நயினார் நாகேந்திரன், மணிகண்டனுக்கு காவல் துறை சார்பில் சம்மன் அனுப்பப்பட்டதாக தகவல் வெளியாகி இருந்தது. 

Rs. 4 crore confiscation issue; Documents handed over to CBCId

சென்னை தியாகராயர் நகரில் நயினார் நாகேந்திரன் இது குறித்து செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசுகையில், “இந்த விவகாரத்தில் முழுக்க முழுக்க என்னை டார்கெட் செய்கின்றனர். இது ஒரு அரசியல் சூழ்ச்சி ஆகும். ரூ.4 கோடியை எங்கேயோ பிடித்துவிட்டு என் பெயரையும் சேர்த்து பயன்படுத்துகின்றனர். தமிழகத்தில் சுமார் 200 கோடிக்கும் மேல் பணம் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்டது குறித்து விசாரிக்கின்றனர். கைப்பற்றப்பட்ட இந்தப் பணத்திற்கும் எனக்கும் எந்த வித சம்பந்தமும் இல்லை. தாம்பரம் காவல் நிலையத்தில் மே 2 ஆம் தேதி விசாரணைக்கு ஆஜராக உள்ளேன்” எனத் தெரிவித்திருந்தார். இத்தகைய சூழலில் இந்த வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி தமிழக போலீஸ் டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவு ஒன்றை பிறப்பித்திருந்தார். 

Rs. 4 crore confiscation issue; Documents handed over to CBCId

இந்நிலையில் தாம்பரம் போலீசார் இந்த வழக்கு தொடர்பான கோப்புகளை எழும்பூரில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்திற்கு கொண்டு சென்று ஒப்படைத்தனர். அதாவது பணம் எடுத்துச் சென்ற சூட்கேஸ்கள், 7 பைகள், 3 செல்போன்கள், 15 பேரிடம் பெற வாக்குமூலம் தகவல் அடங்கிய ஆவணங்கள், நயினார் ஹோட்டல் அருகே இருந்த சிசிடிவி காட்சிகள், ரயில் டிக்கெட் பெற நயினார் கையொப்பமிட்ட அவசர கோட்டாவிற்கான படிவம் ஆகியவற்றை தாம்பரம் காவல் நிலைய ஆய்வாளர் பாலமுரளி தலைமையிலான போலீசார் இந்த ஆவணங்களை சிபிசிஐடி போலீசாரிடம் ஒப்படைத்தனர். விரைவில்  சிபிசிஐடி போலீசார் விசாரணையை தொடங்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Next Story

முன்னாள் பிரதமரின் பேரன் மீது பாலியல் புகார்!

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
complaint against the grandson of the former prime minister

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. இதனையடுத்து 13 மாநிலங்களில் உள்ள 88 மக்களவைத் தொகுதிகளில் நேற்று முன்தினம் (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது. மொத்தம் 28 தொகுதிகள் கொண்ட கர்நாடகா மாநிலத்தில் ஏப்ரல் 26 ஆம் தேதி 14 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ளது. மே 7 ஆம் தேதி மற்ற 14 தொகுதிகளில் தேர்தல் நடைபெறவிருக்கிறது.

இந்தத் தேர்தலில், பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில், தேவகவுடாவின் ஜனதா தளம் (எஸ்) கட்சி போட்டியிடுகிறது. கர்நாடகாவில் ஆளும் கட்சியான காங்கிரஸ் இந்தத் தேர்தலில் தனித்துப் போட்டியிடுகிறது. இந்நிலையில் முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரனும், ஹாசன் மக்களவைத் தொகுதியின் எம்.பி.யுமான பிரஜ்வல் ரேவண்ணா பல பெண்களை பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார் எழுந்துள்ளது. தன்னிடம் உதவி கேட்டு வந்த ஏராளமான பெண்களை பிரஜ்வல் ரேவண்ணா பாலியல் தேவைகளுக்காக பயன்படுத்திக் கொண்டதாக பரபரப்பு குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பிரஜ்வல் ரேவண்ணா பல பெண்களுடன் இருப்பது போன்ற ஆபாச காட்சிகள் வெளியாகி மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் பிரஜ்வல் ரேவண்ணா மீது உரிய நடவடிக்கை எடுக்கவும் மாநில மகளிர் ஆணையம் கர்நாடக அரசுக்கு கடிதம் எழுதியுள்ளது.

இதனையடுத்து இந்தப் புகார் குறித்து சிறப்பு புலானாய்வுக் குழு அமைத்து விசாரணை தொடங்க முடிவெடுக்கப்பட்டுள்ளது. அதே சமயம் புகார் குறித்த நெருக்கடி அதிகரிப்பால் பிரஜ்வல் ரேவண்ணா கர்நாடகாவில் இருந்து ஜெர்மனிக்கு தப்பியோடியதாவும் தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து கர்நாடக முதல்வர் சித்தராமைய தனது எக்ஸ் சமூக வலைத்தளப்பக்கத்தில், “பிரஜ்வல் ரேவண்ணாவின் ஆபாச வீடியோ வழக்கு தொடர்பாக சிறப்பு புலனாய்வு குழுவை அமைக்க அரசு முடிவு செய்துள்ளது. ஹாசன் மாவட்டத்தில் பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகியிருப்பது போன்ற ஆபாச வீடியோ காட்சிகள் பரவி வருகின்றன. இந்நிலையில், எஸ்ஐடி விசாரணை நடத்துமாறு அரசுக்கு மகளிர் ஆணையத் தலைவர் கடிதம் எழுதியிருந்தார். எனவே இந்தக் கோரிக்கையை ஏற்று இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது” எனக் குறிப்பிட்டுள்ளார். இந்த மக்களவைத் தேர்தலில் ஹாசன் தொகுதியில் பாஜக கூட்டணி வேட்பாளராக பிரஸ்வால் ரேவண்ணா மீண்டும் போட்டியிடுவது குறிப்பிடத்தக்கது.