ADVERTISEMENT

விசாரணைக்கு உள்ளே சென்ற தனபால்; இபிஎஸ் வழக்கில் வெளியான இடைக்கால உத்தரவு

11:22 AM Sep 26, 2023 | kalaimohan

ADVERTISEMENT

ADVERTISEMENT

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கை தற்போது சி.பி.சி.ஐ.டி. விசாரணை நடத்தி வருகிறது. இதில், முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிடமும், சசிகலாவிடம் சிறிது காலம் கார் ஓட்டுநராக இருந்த கனகராஜ் முக்கிய குற்றவாளியாகப் பார்க்கப்படுகிறார். இவரது அண்ணன் தனபால், சமீபகாலமாக இந்த வழக்கில் பல பகீர் குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகிறார். இந்நிலையில், அவரை விசாரிக்க சி.பி.சி.ஐ.டி. போலீஸார் சம்மன் அனுப்பியிருந்தனர்.

அதனை ஏற்று கடந்த 14 ஆம் தேதி கோவையில் உள்ள சி.பி..சி.ஐ.டி. அலுவலகத்தில் ஆஜரான தனபாலிடம் எட்டு மணி நேரத்திற்கு மேலாக சிபிசிஐடி போலீஸ் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் கனகராஜை அடித்துக் கொன்றுவிட்டு விபத்து எனக் காட்டியுள்ளனர் எனத் தெரிவித்த தனபால், சேலம், நீலகிரி, கோவை, திருப்பூரைச் சேர்ந்த முக்கிய அரசியல் பிரமுகர்கள் மற்றும் காவல் அதிகாரிகள் பட்டியலைச் சமர்ப்பித்தார். செப்டம்பர் 26 ஆம் தேதி மீண்டும் ஆஜராக தனபாலுக்கு சம்மன் கொடுக்கப்பட்டது. அதன்படி மீண்டும் இரண்டாம் முறையாக சிபிசிஐடி அலுவலகத்தில் இன்று தனபால் ஆஜரானார். செய்தியாளர்களைச் சந்தித்த அவர், இந்த வழக்கில் எடப்பாடி பழனிசாமியை விசாரிக்க வேண்டும் என தெரிவித்து விட்டு விசாரணைக்கு உள்ளே சென்றுள்ளார்.

அதே நேரம் கொடநாடு வழக்கில் தன்னை தொடர்புப்படுத்தி பேசக்கூடாது; நாடாளுமன்ற தேர்தல் வரவுள்ள நிலையில் கட்சியின் பெயரையும் என் பெயருக்கும் களங்கம் ஏற்படுத்தும் நோக்கில் அரசியல் எதிரிகளின் பின்னணியில் கனகராஜ் சகோதரர் தனபால் பேட்டி அளித்து வருகிறார். 1.10 கோடி ரூபாய் மான நஷ்ட ஈடு வழங்க வேண்டும் எனவும் கோரி எடப்பாடி பழனிசாமியால் தொடரப்பட்ட வழக்கு நீதிபதி மஞ்சுளாவுக்கு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கில் கொடநாடு வழக்கில் எடப்பாடி பழனிசாமியை தொடர்புப்படுத்தி பேச கனகராஜின் சகோதரர் தனபாலுக்கு இடைக்காலத் தடை விதித்த நீதிமன்றம், இது குறித்து தனபால் பதிலளிக்க உத்தரவிட்டு எடப்பாடி பழனிசாமி தொடர்ந்த இந்த வழக்கின் விசாரணையை அக்டோபர் 10 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT