Skip to main content

கொ.ம.தே.க. நிர்வாகி கொலை வழக்கில் மேலும் 3 பேர் கைது; கூலிப்படையை ஏவி கொன்றது அம்பலம்

Published on 29/08/2022 | Edited on 29/08/2022

 

KMDK member passed away case police arrested three more person

 

நாமக்கல் மாவட்டம் வெப்படை அருகே உள்ள பாதரையைச் சேர்ந்தவர் கவுதம் (31). இவர், சொந்தமாக நிதி நிறுவனம் நடத்தி வந்தார். அத்துடன், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியில் பள்ளிபாளையம் வடக்கு ஒன்றிய இளைஞரணித் தலைவராகவும் இருந்தார். 

 

ஆக. 22ம் தேதி, மர்ம கும்பல் அவரை காரில் கடத்திச்சென்றது. மூன்று நாள்கள் கழித்து, சங்ககிரி அருகே மேட்டுக்காடு ஏரிக்கரை முள்புதரில் கவுதம் சடலமாக மீட்கப்பட்டார். பள்ளிபாளையம் காவல்நிலைய காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். ஆரம்பத்தில் அரசியல் கொலையாக இருக்குமோ என்று சந்தேகம் நிலவியது. தீவிர விசாரணையில், பணம் கொடுக்கல் வாங்கல் தொடர்பாக இந்தக் கொலை நடந்திருப்பது தெரியவந்தது. 

 

கவுதமை கொலை செய்ததாக, அவர் நடத்தி வந்த நிதி நிறுவனத்தில் வேலை செய்து வந்த குணசேகரன், பிரகாஷ், தீபன் ஆகிய மூன்று பேரையும் காவல்துறையினர் முதல்கட்டமாக கைது செய்தனர். இவர்களில், தீபன் 15 லட்சம் ரூபாயை கையாடல் செய்திருந்தார். அதைக் கண்டுபிடித்துவிட்ட கவுதம், அவரிடம் பணத்தை திருப்பி ஒப்படைக்கும்படி கேட்டதோடு, அவர் மீது காவல்துறையில் புகார் அளிக்க உள்ளதாகவும் கூறியுள்ளார். 

 

இதில் அவர்களுக்குள் ஏற்பட்ட மோதல்தான், கொலை வரை சென்றுள்ளது. தீபன் கூட்டாளிகளை உதவிக்குச் சேர்த்துக்கொண்டு கூலிப்படையை ஏவி கொலை செய்துள்ளார். அந்தக் கும்பல் கவுதமை கத்தியால் சரமாரியாக குத்தி கொலை செய்துள்ளனர்.


இவர்கள் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் கூலிப்படையாக செயல்பட்ட நாகப்பட்டினத்தைச் சேர்ந்த அரவிந்த் (24), முகேஷ் (30), கிருஷ்ணகிரியைச் சேர்ந்த தமிழரசன் (38) ஆகிய மூன்று பேரையும் காவல்துறையினர் கைது செய்தனர். இந்த கொலை வழக்கில் மேலும் சிலரை தேடி வருகின்றனர். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தனியார் கல்லூரி பேருந்து மோதி 6 வயது சிறுவன் உயிரிழப்பு

Published on 17/04/2024 | Edited on 17/04/2024
6-year-old boy lost their live in private college bus crash

நாமக்கல்லில் தனியார் கல்லூரி பேருந்து மோதி ஆறு வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது.

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு ஈரோடு சாலையில் உள்ள  தோட்ட வாடி கிராமத்தில் உள்ள பேருந்து நிலைய பகுதியில் கூட்டப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்த சதீஷ் என்பவர் இருசக்கர வாகனத்தில் தன்னுடைய 6 வயது மகனுடன் சென்று கொண்டிருந்தார். அப்போது இருசக்கர வாகனத்திற்குப் பின்புறம் வந்த தனியார் கல்லூரி பேருந்து எதிர்பாராத விதமாக மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே 6 வயது சிறுவன் தலை நசுங்கி உயிரிழந்தார். தந்தை சதீஷ்குமாரின் கை முறிந்து துண்டானது.

இந்தச் சம்பவம் அங்குப் பரபரப்பை ஏற்படுத்த, உடனடியாக அங்கு வந்த போலீசார் சிறுவனின் உடலைக் கைப்பற்றி  பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். அந்தப் பகுதிகளில் காலை நேரத்தில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருப்பதாகவும், அந்த நேரத்தில் தனியார் பேருந்துகள் மிகுந்த வேகத்துடன் செல்வதால் சாலைத் தடுப்பு, வேகத்தடை ஆகியவற்றை அமைத்துக் கொடுக்க வேண்டும் என அந்த பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

திருச்செங்கோடு காவல் நிலைய போலீசார் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தனியார் கல்லூரி பேருந்து மோதி 6 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் அங்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

Next Story

'பிரதான தொழில் திமுகவால் நசிந்து நலிந்து வருகிறது'-எடப்பாடி பழனிசாமி பேச்சு

Published on 12/04/2024 | Edited on 12/04/2024
'The main industry is being destroyed by DMK'-Edappadi Palaniswami's speech

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அதே சமயம் தமிழக அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்களை தொடங்கியுள்ளன.

இந்நிலையில் நாமக்கலில் அதிமுக வேட்பாளர் தமிழ்மணியை ஆதரித்து கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பரப்புரை மேற்கொண்டார். கூட்டத்தில்  அவர் பேசுகையில், ''கைத்தொழில் நெசவாளர்கள் பாதிப்பாகாத வகையில் பார்த்துக் கொண்ட அரசு அதிமுக .அரசு ஏழை எளிய குடும்பத்தைச் சேர்ந்த பலர் கைத்தறி தொழிலில் ஈடுபட்டுள்ளார்கள். சங்ககிரி, திருச்செங்கோடு, நாமக்கல் உள்ளிட்ட இடங்களில் விசைத்தறிகள் செயல்பட்டு வருகிறது. அந்தப் பகுதிகளில் நன்கு அறிமுகமானவன் நான். எல்லா இடத்திற்கும் நான் சென்று வந்திருக்கின்றேன். இந்த விசைத்தறி தொழில் ஒரு பிரதான தொழிலாக இருக்கிறது. பல்லாயிரக்கணக்கான பேர் விசைத்தறி தொழிலில் ஈடுபட்டுள்ளார்கள்.

இன்றைக்கு அந்தத் தொழில் எல்லாம் நசுங்கி நலிவடைந்து வருகிறது. இந்தத் தொழில் சிறக்க ஏதாவது இந்த அரசு நடவடிக்கை வேண்டும் என குரல் கொடுத்தால், திமுக அரசு எதையுமே கண்டுகொள்ளாமல் இருக்கிறது. விலையில்லா வேட்டி, சேலைகள் அதிமுக ஆட்சிக் காலத்தில் உரிய நேரத்தில் இந்தப் பகுதியில் உள்ள மக்களுக்கு ஆர்டர் கொடுத்தோம். இதனால் அந்தத் தொழில் பாதுகாக்கப்பட்டது. ஆனால் 2021 சரியான ஆர்டர் கொடுக்கவில்லை. அதனால் வேலை வாய்ப்பை இழந்தார்கள். 2024ல் தரமான நூல் கொடுக்கவில்லை. அதனால் இப்பொழுது தொழில் சரிவை கண்டுள்ளது. ஆகவே அதிமுக ஆட்சி உங்கள் ஆதரவோடு மீண்டும் மலரும். அப்பொழுது இந்தத் தொழில் செழிக்கும். திமுகவின் பொம்மை முதலமைச்சர் தமிழகத்தை ஆண்டு கொண்டிருக்கும் வரை இப்படித்தான் இருக்கும். இதற்கெல்லாம் விடிவு காலம் வர வேண்டும் என்றால் மீண்டும் அதிமுக கட்சிக்கு வர வேண்டும். அப்பொழுதுதான் ஏழைகள் இல்லை என்ற சொல்லை உருவாக்க முடியும்''என்றார்.