தன்னைக் கட்சியில் இருந்து நீக்கியதை எதிர்த்து கு.க.செல்வம் எம்.எல்.ஏ தாக்கல் செய்த மனுவுக்கு பதிலளிக்கும்படி, தி.மு.க தலைவர் மற்றும் பொதுச் செயலாளருக்கு சென்னை நகர உரிமையியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
டில்லியில், பா.ஜ.க தலைவர் நட்டாவைச் சந்தித்தது, தமிழக பா.ஜ.க அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்றது போன்ற காரணங்களால், எம்.எல்.ஏ. கு.க.செல்வத்தை கட்சியில் இருந்து நீக்கி, தி.மு.க தலைமை, கடந்த ஆகஸ்ட் 13-ஆம் தேதி உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து கு.க.செல்வம், சென்னை நகர உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் தாக்கல் செய்த மனுவில், கட்சி சட்ட திட்டத்தின்படி, உறுப்பினரைக் கட்சியில் இருந்து நீக்க பொதுச் செயலாளருக்கு மட்டுமே அதிகாரம் உள்ளது. மேலும், கட்சி அனுப்பிய நோட்டீசுக்கு விளக்கமளித்தும், எந்த விசாரணையும் நடத்தாமல், என்னைக் கட்சியில் இருந்து நீக்கியுள்ளனர். நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் கூடுதலாக லிஃப்ட் அமைக்க வேண்டும் என்பதற்காகவே, ரயில்வே அமைச்சரை சந்திக்கச் சென்றேன். டில்லியில் செய்தியாளர்களைச் சந்தித்த போது, பா.ஜ.க.வில் இணைய வரவில்லை என்பதை விளக்கியிருந்தேன். ஆனாலும், என்னைக் கட்சியில் இருந்து நீக்கிவிட்டனர் என மனுவில் தெரிவித்துள்ளார்.
இந்த மனுவை விசாரித்த 17-ஆவது உதவி நகர உரிமையியல் நீதிமன்றம், மனுவுக்கு செப்டம்பர் 18-ஆம் தேதிக்குள் பதிலளிக்க தி.மு.க தலைவர் மற்றும் பொதுச் செயலாளருக்கு உத்தரவிட்டது.