Skip to main content

உழவர் நிதியுதவி திட்டத்தில் நிலமற்ற வடமாநிலத்தவர்கள் சேர்ந்தது எப்படி? பரபரப்பு தகவல்கள்!

Published on 28/09/2020 | Edited on 28/09/2020

 

Kissan scheme issue northindians are members

 

பிரதமரின் உழவர் நிதியுதவி திட்டத்தில் (கிசான் சம்மான் நிதி யோஜனா) போலி உறுப்பினர்கள் மூலம் பல நூறு கோடி ரூபாய் மோசடி நடந்திருப்பது அண்மையில் அம்பலமானது. சேலம், திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், நாகை, பெரம்பலூர், கன்னியாகுமரி உள்ளிட்ட 15க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் இத்திட்டத்தின் கீழ் விவசாயிகள் பெயரில் போலி நபர்களைச் சேர்த்து முறைகேடு நடந்திருப்பது தெரியவந்தது. இரண்டு தவணையாக தலா 2,000 ரூபாய் வீதம் பெற்று மோசடி நடந்துள்ளது.


புகார் எழுந்த மாவட்டங்களில் உள்ள சி.பி.சி.ஐ.டி போலீசார் இந்த வழக்கை தீவிரமாக விசாரித்து வருகின்றனர். சேலம் மாவட்டத்தில் உழவர் நிதியுதவி திட்டத்தில் 18 ஆயிரம் பேர் போலி பயனாளிகளாகச் சேர்ந்துள்ளனர். அரசுத்துறை அதிகாரிகள் பலர் இதன் பின்னணியில் இருப்பதும் தெரிய வந்துள்ளது. இதன்மூலம், இம்மாவட்டத்தில் மட்டும் 6 கோடி ரூபாய் மோசடி நடந்திருப்பது முதல்கட்ட விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக, சேலம் சி.பி.சி.ஐ.டி போலீசார் 51 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். 


இந்த மோசடி தொடர்பாக, உதவி வட்டார அலுவலர் அன்பழகன் உள்பட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இது ஒருபுறம் இருக்க, இதுவரை முறைகேடாக உதவித்தொகை பெற்ற, போலி பயனாளிகளிடம் இருந்து பணத்தை மீட்கும் முயற்சிகளும் முடுக்கிவிடப்பட்டுள்ளன. இதன்மூலம், 3.15 கோடி ரூபாய் மீட்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு முழுவதும் இதேபோல மொத்தம் 72 கோடி ரூபாய் திரும்பப் பெறப்பட்டுள்ளது. 


இதில் வேடிக்கை என்னவென்றால், உழவர் நிதியுதவி திட்டத்தில் தமிழகத்திற்கு வேலை தேடி வந்த வடமாநிலத்தவர்கள் பலரும் பயனாளிகளாக சேர்க்கப்பட்டிருப்பதுதான். அந்த வகையில் மட்டும் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் சேர்க்கப்பட்டுள்ளனர். 


பீஹார், ராஜஸ்தான், மத்திய பிரதேசம், மஹாராஷ்டிரா, ஒடிசா, மேற்கு வங்கம் உள்ளிட்ட 20 மாநிலங்களைச் சேர்ந்த நபர்கள், தமிழக விவசாயிகள் என்ற பெயரில் போலி பயனாளிகளாகச் சேர்ந்திருப்பது தெரிய வந்துள்ளது. அவர்கள் இதுவரை தலா 2,000 ரூபாய் வீதம், இரண்டு தவணைகளில் 4,000 ரூபாய் பெற்றுள்ளனர்.


சேலம் மாவட்டத்தில் மட்டும், வட மாநிலங்களைச் சேர்ந்த 1,234 பேர் இத்திட்டத்தில் சேர்க்கப்பட்டு உள்ளனர். உழவர் நிதியுதவி திட்டத்தில் சேர்வதற்கு அந்தந்த மாநிலத்தில் 5 ஏக்கர் வரையிலான விவசாய நிலம் இருக்க வேண்டும் என்பது முக்கிய தகுதியாகும். 


ஆனால், தமிழ்நாட்டில் சொந்தமாக விவசாய நிலமே இல்லாத வடமாநிலத்தவர்கள் பலரும் இத்திட்டத்தில் பயனாளிகளாகச் சேர்க்கப்பட்டு இருப்பது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இடைத்தரகர்கள் மூலம் தனியார் இ-சேவை மையங்கள் மூலம் வடமாநிலத்தவர்கள் பலரும் உழவர் நிதியுதவி திட்டத்தில் சேர்ந்துள்ளனர். இதற்கு அரசு அதிகாரிகளும் உடந்தையாக இருந்துள்ளனர். போலிப் பயனாளிகளுக்கு அடையாள அட்டை வழங்க ஒவ்வொருவரிடம் இருந்தும் 2,000 ரூபாய் வசூலித்துள்ளனர்.

 

Ad


பயனாளிகளின் விவரங்களை நேரில் சரிபார்த்திருக்க வேண்டிய வருவாய்த்துறை மற்றும் வேளாண் துறை அதிகாரிகள் வசூலில் கவனம் செலுத்தியதால் அவற்றை கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டனர். இதனால்தான், பெரிய அளவில் மோசடி நடந்துள்ளதாக தெரியவந்துள்ளது.


இது தொடர்பாக, சி.பி.சி.ஐ.டி தரப்பில் கேட்டபோது, ''தமிழ்நாட்டில் விவசாய நிலமே இல்லாத வடமாநிலத்தினர் பலர் சிறு, குறு விவசாயிகள் பெயரில் உழவர் நிதியுதவி திட்டத்தில், போலிப் பயனாளிகளாகச் சேர்ந்துள்ளனர். இதில், அரசுத்துறை உயரதிகாரிகள் சிலருக்கும் தொடர்பு இருக்கிறது. அதுபற்றியும் விசாரித்து வருகிறோம்,'' என்றனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

100வது உழவர் ரயில் - இன்று தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி! 

Published on 28/12/2020 | Edited on 28/12/2020
modi ji

 

 

மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் போராட்டம் 33 வது நாளாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது. மத்திய அரசுடன் நாளை பேச்சுவார்த்தை நடத்த தயார் என விவசாய அமைப்புகள் அறிவித்துள்ளன.

 

இந்தநிலையில், 100வது உழவர் ரயில் (கிசான் ரயில்) சேவையை இன்று மாலை 4.30 மணிக்கு காணொலி காட்சி மூலமாக தொடங்கி வைக்கவுள்ளார் பிரதமர் மோடி. மகாராஷ்டிராவில் சங்கோலா மற்றும் மேற்கு வங்கத்தின் ஷாலிமார் இடையே இந்த நூறாவது உழவர் ரயில் இயங்கவுள்ளது 

 

விவசாய விளைபொருட்களை ஏற்றி செல்லும் இந்த உழவர் ரயில் சேவை, முதன்முதலில் மகாராஷ்டிராவின் தேவலாலி மற்றும் பீகார் மாநிலத்தின் தனபூர்  இடையே ஆகஸ்ட் 7 ஆம் தேதி தொடங்கப்பட்டது. மத்திய வேளாண் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர், இதனை தொடங்கி வைத்தார். அதன் பிறகு படிப்படியாக இந்த சேவை விரிவுபடுத்தப்பட்டு இன்று நூறாவது உழவர் ரயில் சேவை தொடங்கப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.

 

 

Next Story

கிசான் திட்டத்தில் முறைகேடு செய்த ரூபாய் 123 கோடி மீட்பு!

Published on 26/10/2020 | Edited on 26/10/2020

 

pm kisan scheme tamilnadu farmers rs 123 seized

தமிழகத்தில் பிரதமரின் கிசான் திட்ட முறைகேடு தொடர்பான விசாரணையை சி.பி.சி.ஐ.டி. போலீசார் தீவிரப்படுத்தியுள்ள நிலையில், அந்தந்த மாவட்ட ஆட்சியர்களும் முறைகேட்டில் ஈடுபட்டவர்களின் வங்கிக்கணக்கை முடக்கி, பணத்தை மீட்டு வருகின்றனர்.

 

இந்த நிலையில், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் வேளாண்மை துறை சார்பில் செயல்படுத்தப்படும் பல்வேறு திட்ட செயலாக்கப் பணிகள் குறித்த ஆய்வு கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று முன்தினம் (24/10/2020) நடைபெற்றது. தமிழக வேளாண்துறை இயக்குநர் தட்சிணாமூர்த்தி தலைமையில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் கூடுதல் இயக்குனர் சங்கரலிங்கம், இணை இயக்குனர் வேலாயுதம், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் சுந்தரம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

 

கூட்டத்தில் பேசிய தமிழக வேளாண்துறை இயக்குனர் தட்சிணாமூர்த்தி, "வேளாண் துறையால் செயல்படுத்தப்படும் திட்டப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். மக்காச் சோளம் பயிரிடப்பட்டு படைபுழு தாக்கம் அதிகம் உள்ளதால் அவை கட்டுப்படுத்தும் வழிமுறை குறித்து அதிகாரிகளுக்கும் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. தரிசு நிலங்களை விளை நிலங்களாக மாற்றும் திட்டம் மத்திய மற்றும் மாநில அரசு திட்டங்கள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

 

மேலும் உணவு தானிய உற்பத்தி சொட்டுநீர் பாசன திட்டம் நிர்ணயிக்கப்பட்ட இலக்கை அடைய வேண்டும். தமிழகத்தில் கிசான் திட்ட முறைகேட்டில் ஈடுபட்டவர்களின் வங்கிக்கணக்கில் இருந்து இதுவரை 123 கோடி ரூபாய் பணம் மீட்கப்பட்டுள்ளது. இன்னும் இரண்டு லட்சம் பேரிடம் இருந்தும் பணத்தை மீட்கும் பணி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது."இவ்வாறு தட்சிணாமூர்த்தி கூறினார்.

 

தமிழகத்தில் கிசான் திட்ட முறைகேடு தொடர்பாக, அரசு ஊழியர்கள், அரசு உயர் அதிகாரிகள், இடைத்தரகர்கள் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்டவர்களை கைது செய்த சி.பி.சி.ஐ.டி. போலீசார், அவர்களிடம் தொடர் விசாரணை நடத்தி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.