Skip to main content

உழவர் கடன் அட்டை பெற விவசாயிகளுக்கு அழைப்பு: ஆட்சியர் ராமன் தகவல்!

Published on 12/02/2020 | Edited on 12/02/2020

நாடு முழுவதும் உள்ள விவசாயிகளுக்கு, பிரதம மந்திரி விவசாயி கவுரவ நிதி திட்டத்தின் கீழ், உழவர் கடன் அட்டை (கிசான் கிரெடிட் கார்டு) வழங்கப்பட்டு வருகிறது. தகுதி வாய்ந்த பயனாளிகளுக்கு, விண்ணப்பித்த 15 நாள்களுக்குள் கிசான் கிரெடிட் கார்டு வழங்கப்படுகிறது.


கடன் அட்டை பெற விரும்பும் விவசாயிகள், தங்கள் விவசாய அல்லது சேமிப்புத் திட்ட கணக்கு உள்ள வங்கிக்கிளையை அணுகி உழவர் கடன் அட்டையைப் பெற்று மானிய சலுகையுடன் வங்கிக்கடன் பெறலாம்.

kisan credit card salem district collector raman invite as farmers


ஏற்கனவே உழவர் கடன் அட்டை பெற்றுள்ள விவசாயிகள், தங்களின் வங்கிக்கிளையை அணுகி கடன் தொகையின் வரம்பை உயர்த்தவும் விண்ணப்பிக்கலாம். அத்துடன், செயல்படாத உழவர் கடன் அட்டை உள்ளோர், வங்கிக்கிளையை அணுகி, கடன் அட்டையை செயல்படுத்தவும், புதிய கடன் வரம்பிற்கு அனுமதியும் பெறலாம். 


உழவர் கடன் அட்டை இல்லாத விவசாயிகள், தங்களது நில ஆவணங்கள் மற்றும் அடங்கல் ஆவணத்துடன் புதிய கடன் அட்டை பெறுவதற்கு வங்கிக் கிளையை அணுக வேண்டும். உழவர் கடன் அட்டைதாரர்கள் கால்நடை மற்றும் மீன் பிடிப்பிற்கான பராமரிப்பு செலவுகளுக்கான கடன் தொகையை, வரம்பில் சேர்ப்பதற்காக வங்கிக்கிளையை அணுகலாம். கடன் அட்டை பெறுவதற்கு இத்திட்டத்தின் இணையதளம் மூலம் குறுஞ்செய்தி அனுப்பப்படும். 


இத்திட்டத்தின் விவசாயப் பயனாளிகள், ஒரு பக்கப் படிவத்தில் தங்களது நிலம், பயிர் விவரங்கள் மற்றும் வேறு எந்த வங்கிக் கிளையிலும் கடன் அட்டை பெறவில்லை என்பதற்கான உறுதிமொழி பிரமாணம் சமர்ப்பிக்க வேண்டும். இவ்விண்ணப்பத்தை பொது சேவை மையங்கள் மூலமும் சமர்ப்பிக்கலாம். 


சேலம் மாவட்ட விவசாயிகள் அனைவரும், இத்திட்டத்தில் பயன்பெற வேண்டும் என சேலம் மாவட்ட ஆட்சியர் ராமன் தெரிவித்துள்ளார்.

 

சார்ந்த செய்திகள்

Next Story

வாக்களிக்க சென்ற இருவர் மயங்கி விழுந்து உயிரிழப்பு!

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
Two people who went to vote fainted and passed way

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது

அந்த வகையில் தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெறவுள்ளது.  இந்த நிலையில் காலை 7 மணி முதல் வாக்காள பெருமக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். அதேபோன்று அரசியல் கட்சி தலைவர்கள், வேட்பாளர்கள் என பலரும் தங்களின் வாக்குகளை வாக்குச்சாவடிகளில் செலுத்தி வருகின்றனர். தமிழ்நாட்டில் காலை 9 மணி நிலவரப்படி 24.34 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.

இந்த நிலையில் வாக்களிக்க சென்ற இருவர் மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளனர். சேலம் மாவட்டம் கெங்கவல்லி அருகே செந்தாரப்பட்டி ஊராட்சி தொடக்கப்பள்ளி வாக்குச்சாவடி மையத்தில் வாக்களிக்கச் சென்ற சின்னபொண்ணு (77) என்ற மூதாட்டி மயங்கி விழுந்து உயிரிழந்தார். அதேபோன்று, சேலம் மாநகராட்சி நடுநிலைப்பள்ளி வளாகத்தில் சூரமங்கலம் பகுதியை சேர்ந்த பழனிசாமி(65) தனது மனைவியுடன் வாக்களிக்கச் சென்றபோது மயங்கி விழுந்து பலியானார். சேலம் மாநகரில் நடந்த இந்த துயர் சம்பவம் அப்பகுதி மக்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Next Story

17 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த போர் வீரனின் நடுகல் கண்டுபிடிப்பு!

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
17th century warrior headstone Kantipudi

சேலம் மாவட்டம், மாதநாயக்கன்பட்டி பெருந்தலைவர் காமராசர் நினைவு அரசு மேல்நிலைப்பள்ளி தொன்மை பாதுகாப்பு மன்றத்தின் தலைவர் தலைமை ஆசிரியர், பொறுப்பு ஆசிரியர்களாக அன்பரசி, விஜயகுமார் ஆகியோர் உள்ளனர். இப்பள்ளி மாணவர்கள் கொடுத்த தகவலின்படி ஆசிரியர்களும், மாணவர்களும் களப்பயணத்தின் போது வீரனின்  நடுகல்  ஒன்று கண்டறியப்பட்டது.

பொது ஆண்டு 17 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த இந்த நடுகல்லில் எழுத்துகள் எதுவும் இல்லை. கல்பூமியின் மேற்பரப்பில் 2 அடி உயரமும் 1.5  அடி அகலம் கொண்டது. இந்த நடுகல்லை சுற்றி கல்திட்டை போன்ற அமைப்பும் உள்ளது . நடுகல்லில் போர் வீரனின் சிற்பம்  உள்ளது.
வேட்டைக்கு சென்று இறந்ததற்காக எடுக்கப்பட்ட நடுகல்லாக இருக்கலாம். ஆலிடாசனம் நிலையில் வில்லில் நாணில் அம்பு எய்துவது போன்றும், இடுப்பில் குரு வாளும், காதில் பத்ர குண்டலமும்,   கழுத்தில் சரப்பளி, சவுடி, முத்தாரம் அணிகலன் அணிந்திருப்பது  போன்றும் கையில் தோள்வளை  இருப்பது போன்ற உருவமைப்பு உள்ளது.

17th century warrior headstone Kantipudi

இப்பகுதி தாருகாவனத்திற்க்கு அருகில் இருப்பதால்  இந்த வீரன் வேட்டுவ தலைவனாக இருக்கலாம். இந்த நடுகல் எல்லாம் அவர்களின் நினைவைப் போற்றும் வகையில் வைக்கப்பட்டதாகும்.  தொன்மை பாதுகாப்பு மன்றத்தின் சார்பாக தொல்லியல் சார்ந்த வரலாற்று தகவல்களையும், அதனை பற்றிய விழிப்புணர்வையும் இன்றை இளைய தலைமுறை மாணவர்களுக்கு கொண்டு சேர்ப்பது தான் தொன்மை பாதுகாப்பு மன்றத்தின் நோக்கமாகும் என்கின்றனர் தொன்மை பாதுகாப்பு மன்ற ஆசிரியர்கள்.