ADVERTISEMENT

கீழ்ப்பாக்கம் மனநல காப்பக காதல் ஜோடி திருமணம்; அமைச்சர்கள் பங்கேற்பு

12:12 PM Oct 28, 2022 | tarivazhagan

ADVERTISEMENT

சென்னை கீழ்ப்பாக்கம் மனநல காப்பகத்தில் சிகிச்சை பெற்று குணமடைந்த இருவர் காதலித்து திருமணம் செய்து கொண்ட நிகழ்வு அனைவர் மத்தியிலும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ADVERTISEMENT

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு சென்னையைச் சேர்ந்த மகேந்திரனும் வேலூரைச் சேர்ந்த தீபாவும் குடும்பத் தகராறு மற்றும் தந்தை இறந்த சோகம் என இருவேறு காரணங்களால் மன அழுத்தம் ஏற்பட்டு கீழ்ப்பாக்கம் அரசு மனநல மருத்துவமனையில் உள்நோயாளிகளாக சிகிச்சை பெற்று வந்துள்ளனர்.

இவர்களுக்கு, காப்பக இயக்குநர் பூர்ணா சந்திரிகா மற்றும் மருத்துவர்கள் அடங்கிய குழுவினர் தொடர் சிகிச்சை அளித்து வந்தனர். இதில் அவர்களுக்கு மன அழுத்தம் நீங்கி பிரச்சனையிலிருந்து விடுபட, இருவரும் காப்பகத்தில் உள்ள கேர் சென்டரில் தங்கி மனநல காப்பகத்திலேயே பல்வேறு பணிகளில் ஈடுபட்டு வந்தனர். எம்.ஃபில். படித்துள்ள மகேந்திரன் காப்பகத்தில் உள்ள நோயாளிகளுக்கான பயிற்சி மையத்தில் பராமரிப்பாளராகப் பணியாற்றி வருகிறார். ஆசிரியர் படிப்பு முடித்த தீபாவும் அதே காப்பகம் சார்பில் நடத்தப்படும் பேக்கரி ஒன்றில் பணிபுரிந்து வருகிறார்.

அரசு கீழ்பாக்கம் மனநல காப்பகத்தில் சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே இருவருக்கும் காதல் மலர்ந்துள்ளது. அதன் பிறகு மகேந்திரனின் காதலை தீபாவிடம் சொல்லியுள்ளார். அப்போது சற்று சுணக்கம் காட்டிய தீபா, காலப்போக்கில் சம்மதம் தெரிவித்துள்ளார். இந்த விவகாரம் காப்பக இயக்குநர் பூர்ணா சந்திரிகாவுக்கு தெரியவந்த நிலையில் இருவரையும் அழைத்துக் கண்டித்துள்ளார். மேலும், அவர்கள் சொன்ன காரணமும் அவர்களின் ஒற்றுமையான பேச்சும் அவர்களின் மனநிலை மேலும் பாதிக்காத வண்ணம் இருக்கும் என முடிவெடுத்த இயக்குநர், இருவருக்கும் தாங்களே திருமணம் நடத்தி வைக்கிறோம் எனத் தெரிவித்துள்ளார். அதன்படி காப்பக மருத்துவர்கள், ஊழியர்கள், நண்பர்கள் என்று பலர் உதவியுடன் புதியதாக வாடகை வீடு, வீட்டிற்குத் தேவையான பொருட்கள் அனைத்தையும் தயார் செய்து கொடுத்துள்ளார்கள்.

இந்த நிலையில், இன்று 28.10.2022 தேதி காலையில் கீழ்ப்பாக்கம் மனநல காப்பகத்தின் இயக்குநர் பூர்ணா சந்திரிகா, சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு தலைமையில் மருத்துவர்கள் முன்னிலையில் சித்தி புத்தி விநாயகர் கோயிலில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தாலி எடுத்துக் கொடுக்க காதல் தம்பதியினர் திருமணம் செய்து கொண்டனர். 200 ஆண்டுகள் பழமையான மனநல காப்பகத்தில் இந்தத் திருமணமே முதல் திருமணமாக தடம் பதித்துள்ளது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT