
திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையத்தில் பாதுகாப்பு நடவடிக்கை காரணமாக ரயில்களில் வரும் பயணிகள் உடைமைகள் மற்றும் சந்தேகத்திற்குரிய நபர்கள், சட்டவிரோதமான செயல்களில் ஈடுபடுகிறார்களா? என திருச்சி ரயில்வே பாதுகாப்பு படை வீரர்கள் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று இரவு 7.40 மணிக்கு காரைக்காலில் இருந்து எர்ணாகுளம் செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில், திருச்சி ரயில் நிலையத்தின் முதல் நடைமேடைக்கு வந்து சேர்ந்தது. அப்போது ரயில்வே பாதுகாப்பு படையினர் ரயில் பெட்டிகளில் சோதனை மேற்கொண்டனர். அப்போது கொல்கத்தாவைச் சேர்ந்த நபர் சந்தேகத்திற்கிடமாக 6 கிலோ எடையுள்ள தங்க ஆபரணங்களை கொண்டு செல்வது தெரியவந்தது.
அவற்றின் மதிப்பு ரூ.6 கோடி ஆகும். ஆனால், அதற்குரிய எந்த ஒரு முறையான ஆவணங்களோ ஏதும் இல்லாத காரணத்தினால் இதுதொடர்பாக வருமானவரித் துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் நேரடியாக வந்து ஆய்வு செய்து எவ்வித ஆவணங்களும் இல்லாததால் அதற்காக ரூ.17 லட்சம் அபராதம் விதித்தனர். இது தொடர்பாக 3 நபர்கள் மீது வருமான வரித்துறை அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் அதற்கான தொகையை அவர்கள் கட்டினால் அதை விடுவிப்பதற்கு தயாராக இருப்பதாக ரயில்வே பாதுகாப்பு படையினர் தெரிவித்தனர். திருச்சியில் எக்ஸ்பிரஸ் ரெயிலில் தங்க நகை எவ்வித ஆவணமும் இன்றி கடத்திச் செல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.