Skip to main content

சிலம்பக் கலையை கற்றுக்கொடுக்கும் +2 மாணவன்... 

Published on 26/06/2020 | Edited on 26/06/2020
Kiliyanur near Ulundurpet - +2 student

 

உலகம் முழுவதும் கரோனா பெரும் அச்சத்தை மக்களுக்கு கொடுத்து வருகிறது. இது ஒரு பக்கம் என்றால் அதேநேரத்தில் கிராமங்களில் விவசாய வேலைகள் தவிர மற்ற நேரங்களில் அத்தியாவசிய தேவைக்காககவும், பொழுதுபோக்கவும் நகரங்களுக்கு சென்று வருவார்கள். ஆனால் இப்போது கரோனா காரணமாக தமிழக கிராமங்களில் இருந்து அருகில் உள்ள நகரப் பகுதிகளுக்கு செல்வது குறைந்துள்ளது.

 

இப்படி கிராமப்புறங்களில் வீடுகளிலேயே முடங்கிக் கிடக்கக்கூடாது. ஓய்வு நேரத்தை கரோனா அதிகப்படுத்தி கொடுத்துள்ளது, இதை பயனுள்ள வகையில் கழிக்க வேண்டும் என்று பலர் பலவிதமான பணிகளை செய்து வருகிறார்கள்.

 

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை அருகே உள்ள கிளியனூர் கிராமத்தை சேர்ந்த இளைஞர் திருமலை ஒரு வித்தியாசமான முறையில், ஊரில் உள்ள சிறுவர்கள், இளைஞர்கள், பெரியவர்கள் அனைவருக்கும் பயன்படக்கூடிய பாதுகாப்பு தரக்கூடிய கலையைக் கற்றுத் தருகிறார். தமிழரின் பாரம்பரிய தற்காப்பு கலையான சிலம்ப கலையை நன்கு கற்றுத் தேர்ந்தவர் திருமலை. இந்த கலையை பல்வேறு கிராமங்களில் நடைபெறும் திருவிழாக்களில் மக்களை கவரும் வகையில் நடத்திக் காட்டியவர் தற்போது கரோனா காரணமாக கிராம மக்களுக்கு அதிக நேரம் ஓய்வு கிடைத்துள்ளது, இந்த நேரத்தை வீணடிக்கக்கூடாது என்று உணர்ந்த திருமலை தனது ஊரில் உள்ள சிறுவர்கள், இளைஞர்கள், பெரியவர்கள் அனைவரையும் அழைத்து அவர்களுக்கு சிலம்பக் கலையை கற்றுக் கொடுத்து வருகிறார்.

 

தினசரி காலை, மாலை, இரவு நேரங்களிலும் இவரது சிலம்பப் பயிற்சி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதை கற்றுக்கொள்வதற்கு ஆர்வமுடன் நிறைய பேர் வருகிறார்கள். அனைவருக்கும் பாகுபாடில்லாமல் ஊதியம் எதுவும் வாங்காமல் இலவசமாகவே கற்றுக்கொடுத்து வருகிறார் திருமலை.

 

இதுகுறித்து அவரிடம் பயிற்சிபெறும் இளைஞர்களிடம் கேட்டபோது, “தமிழரின் பண்பாட்டு கலை சிலம்பம், இது ஒரு தற்காப்பு கலையும் கூட. திருடர்களிடம் இருந்து பாதுகாத்துக் கொள்ள முடியும். ஒவ்வொரு மனிதரும் சிலம்பத்தை கற்றுக்கொள்ள வேண்டியது அவசியம். மேலும் இதே கலையை எங்கள் ஊரில் உள்ள பெண்களுக்கும் கற்றுத் தருமாறு எங்கள் குரு திருமலையிடம் கூறியுள்ளோம். ஏனென்றால் தற்போது பெண்களுக்கு போதிய பாதுகாப்பு இல்லை. அதனால் பெண்கள் பல்வேறு விதங்களில் பாதிப்புக்கு ஆளாகிறார்கள். எனவே சிலம்ப கலையை கற்று வைத்திருந்தால் அவர்களுக்கு ஆபத்து ஏற்படும் நேரத்தில் அதைப் பயன்படுத்தி தங்களை பாதுகாத்துக்கொள்ள முடியும். எனவே சிலம்பகலை தமிழகத்தில் உள்ள இளைஞர்கள் பெண்கள் சிறுவர்கள் அனைவரும் ஆண், பெண் பாகுபாடின்றி கற்றுக்கொள்ள வேண்டியகலை என்றனர். ஆர்வமுடன் சிலம்பம் கற்றுக்கொள்ள முன்வரும் பெண்களுக்கும் கற்றுத்தர திருமலையும் சம்மதித்துள்ளார்.

 

இளைஞர் திருமலை பனிரெண்டாம் வகுப்பு படிக்கும் மாணவர். ஏற்கனவே ஏழ்மை குடும்பத்தை சேர்ந்தவர் என்பதால் சென்னையில் உள்ள ஒரு குருகுலப் பள்ளியில் தங்கி படித்துள்ளார். அந்தப் பள்ளி விடுதி காப்பாளர் திருமலை சிலம்பப் பயிற்சி பெற்றிருப்பது தெரிந்து, அந்த கலையை அந்த பள்ளியில் உள்ள மாணவ, மாணவிகளுக்கு கற்றுத் தருமாறு கோரியுள்ளார். அதேபோன்று திருமலையும் கற்றுக் கொடுத்துள்ளார். தற்போது தனது தந்தைக்கு வயதாகி விட்டதால் தனது சொந்த ஊரான கிளியினுருக்கு வந்துள்ளார். இப்போது தமது ஊரில் சிலம்பப் பயிற்சி கற்றுத் தந்து வரும் திருமலை தனது வருமானத்திற்காக திருமணம் போன்ற விசேஷங்களுக்கு சமையல் உதவியாளராக அவ்வப்போது சென்று வருகிறார். தற்போது தனது ஊரிலேயே உள்ள பள்ளியில் பிளஸ் 2 படித்தும் வருகிறார். இவரது நிலையை அறிந்த சிலம்பம் கற்றுக் கொள்ளும் பிள்ளைகளின் பெற்றோர்கள், திருமலைக்கு அவர்களாகவே முன்வந்து உதவி செய்து வருகிறார்கள்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தந்தை உயிரிழந்த போதும் 12 ஆம் வகுப்பு தேர்வு எழுதிய மாணவி!

Published on 16/03/2024 | Edited on 16/03/2024
 student who wrote her 12th class exam despite  passed away of her father

கடலூர் சூரப்ப நாயக்கன் சாவடி பகுதியைச் சேர்ந்த ரத்தினவடிவேல். இவர் ஓய்வு பெற்ற அளவையர். இவர் வெள்ளிக்கிழமை(15.3.2024) காலை உடல்நிலை சரியில்லாத காரணத்தால் உயிரிழந்தார்.  இவரது மகள் ராஜேஸ்வரி வயது 16 இவர் கடலூரில் உள்ள தனியார் மேல்நிலைப் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்து வருகிறார்.  இவருக்கு வெள்ளிக்கிழமை இயற்பியல் தேர்வு இருந்துள்ளது.

தந்தை உயிரிழந்ததை பார்த்து கதறி அழுத்துள்ளார். ஒரு கட்டத்தில் அவர் தன்னை திடப்படுத்திக் கொண்டு  இயற்பியல் தேர்வு எழுத செல்வதாக கூறி தேர்வு எழுதும் பள்ளிக்கு சென்றுள்ளார். இவரை பார்த்து அங்கிருந்த சக மாணவ மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் மாணவிக்கு ஆறுதல் கூறி ஊக்கமளித்தனர்.

இதனை தொடர்ந்து அவர் பள்ளியில் இயற்பியல் தேர்வு எழுதினார். பின்னர் தேர்வு முடிந்த பிறகு அவரது தந்தையின் இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்டார். இந்நிகழ்வு கடலூரில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

Next Story

கர்ப்பமாக்கிய காதலன்; உயிருக்குப் போராடும் மாணவி!

Published on 29/02/2024 | Edited on 29/02/2024
college girl health was affected due to having pregnant

திண்டுக்கல் மாவட்டம் மேட்டுப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் ராஜம்மாள். இவரது பேத்தி கலா(17)(பெயர் மாற்றப்பட்டுள்ளது). பெற்றோரை இழந்த இவர் பாட்டியின் பராமரிப்பில் வளர்ந்து வருகிறார். இந்த நிலையில் திண்டுக்கல் காந்திகிராம் பகுதியில் உள்ள ஒரு  கல்லூரியில் டிப்ளமோ படித்து வந்தார்.

இந்த நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு கலாவை பார்ப்பதற்காக அவரது அத்தை கல்லூரி விடுதிக்குச் சென்றார். அப்போது அவரது உடலில் மாற்றங்கள் ஏற்பட்டு இருப்பதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர் பின்னர் கலாவை அழைத்துச் சென்று அங்குள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தார். அப்போது மருத்துவர்கள் பரிசோதித்துவிட்டு கலா கர்ப்பமாக இருப்பதாகத் தெரிவித்தனர்.

இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த கலாவின் அத்தை, கலாவிடம் கர்ப்பத்துக்கான காரணம் குறித்து கேட்டபோது, திண்டுக்கல் மாவட்டம் அம்பாத்துறை பகுதியைச் சேர்ந்த தனது காதலன் ராம்குமார் தான் தனது கர்ப்பத்துக்கு காரணம் எனத் தெரிவித்தார். இந்த வாலிபர் காந்திகிராம் சின்னாளப்பட்டி பகுதியில் உள்ள ஒரு குழந்தைகள் காப்பகத்தில் கணக்காளராகப் பணியாற்றி வருகிறார்.  இந்த நிலையில், கலாவை அவர் தனது அண்ணன் வீட்டுக்கு அழைத்துச் சென்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் அவருடன் தனிமையில் இருந்தது தெரியவந்தது.

அதைத் தொடர்ந்து கலாவின் கர்ப்பத்தை அவரது அத்தை கலைக்க முடிவு செய்தார். அதன்படி திருச்சி உறையூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அவரை இரு தினங்களுக்கு முன்பு சேர்த்தார். பின்னர் மருத்துவர்கள் அந்த மாணவிக்கு கருக்கலைப்பு செய்துள்ளனர். ஆனால் பல மணி நேரமாகியும் உதிரப்போக்கு நிற்கவில்லை.  அதன் பின்னர் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதையடுத்து உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ள அந்த மாணவிக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இந்த விவகாரம் அரசு மருத்துவமனை வரை சென்றதால் போலீஸ் கவனத்திற்கு சென்றது. அதைத் தொடர்ந்து திருவரங்கம் அனைத்து மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் நளினி மாணவியின் கர்ப்பத்துக்கு காரணமான ராம்குமார், கர்ப்பத்தை கலைக்க முயற்சி செய்த அவரது அத்தை  மற்றும் கர்ப்பத்தை கலைத்த டாக்டர் உட்பட 3 பேர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.