Skip to main content

கண்மாயில் மூழ்கி பலியான குழந்தைகள்! பரிதவிப்பில் பெற்றோர்

Published on 17/05/2023 | Edited on 17/05/2023

 

Kids passes away in river in puthukottai

 

கோடை விடுமுறை விடப்பட்டுள்ள நிலையில், பள்ளி மாணவர்கள் தண்ணீரில் மூழ்கி பலியாகும் சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்துள்ளது. அதிலும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்களே அடுத்தடுத்து பலியாகும் துயரச் சம்பவங்களால் பெற்றோர்கள் கதிகலங்கி நிற்கிறார்கள்.

 

திருச்சி - புதுக்கோட்டை மாவட்ட எல்லை கிராமம் மருங்காபுரி ஒன்றியம் வைரம்பட்டி கிராமம் (திருச்சி மாவட்டம்). இந்த கிராமத்தைச் சேர்ந்தவர்கள் கூலித் தொழிலாளிகளான முருகேசன் - சுதா தம்பதி. இவர்களுக்கு லோகநாதன் (வயது 12), தருண்ஸ்ரீ (வயது 8) என இரண்டு மகன்கள் இருந்தனர். முருகேசன் கோவையில் தங்கி கூலி வேலை செய்து வருகிறார். சுதா தனது மகன்களுடன் திருப்பூரில் தங்கி இருந்து கூலி வேலை செய்து கொண்டே தனது மகன்களை அங்குள்ள ஒரு பள்ளியில் படிக்க வைத்துள்ளார்.

 

தற்போது குழந்தைகளுக்கு கோடை விடுமுறை என்பதால் சிறுவர்களை அழைத்துக் கொண்டு தங்கள் சொந்த ஊருக்கு வந்துள்ளனர். இன்று (17ம் தேதி) மதியம் லோகநாதன் (வயது 12), தருண்ஸ்ரீ (வயது 8). இரண்டு சிறுவர்களும் வீட்டின் அருகில் உள்ள புதுக்கோட்டை மாவட்டம், ஒலியமங்கலம் ஊராட்சி சேர்வைகாரன்பட்டி எத்தவேளாண் கண்மாய் பக்கமாக இயற்கை உபாதை கழிக்கச் சென்றுள்ளனர். அவர்கள் சென்று நீண்ட நேரமாகியும் வீட்டிற்கு வரவில்லை என்று அவர்களது அம்மா சுதா தேடிச் சென்றபோது கண்மாய் கரையில் இரு சிறுவர்களின் டவுசர்கள் கிடந்துள்ளன. தண்ணீரில் ஒரு சிறுவனின் உடல் மிதந்துள்ளது.

 

இதைப் பார்த்து அவர் கதறியுள்ளார். அதைப் பார்த்த அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து கண்மாய்க்குள் இறங்கி தேடியபோது மற்றொரு சிறுவனின் சடலமும் மீட்கப்பட்டது. இந்தத் தகவல் அறிந்து அங்கு வந்த காவல்துறையினர், கண்மாயில் இருந்து மீட்கப்பட்ட இரு சிறுவர்களின் உடல்களையும் பிரேதப் பரிசோதனைக்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரு சிறுவர்களும் தண்ணீரில் மூழ்கி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தந்தை; நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
Father sentenced to life imprisonment for misbehaving with daughter

திருச்சி மாவட்டம் துறையூர் வட்டம் பகுதியைச் சேர்ந்தவர் 64 வயதான விவசாயி. இவருக்கு 35 வயதில் மாற்றுத்திறனாளி (மன நலம் பாதிக்கப்பட்ட ) ஒரு மகள் இருந்தார். கை, கால்களும் செயல் இழந்த அந்த பெண் தனது தாயாரின் பராமரிப்பில் இருந்து வந்த நிலையில் அவரது தாயார் இறந்து விட்டார்.

இதனையடுத்து தனது தந்தை மற்றும் பாட்டியின் பராமரிப்பில் இருந்து வந்தார். இந்நிலையில் கடந்த 2021 ஆவது ஆண்டில் பெண்ணின் உடல் நிலையில் மாற்றம் ஏற்பட்டதையடுத்து, மருத்துவ பரிசோதனை மேற்கொண்டனர். இதில் மாற்றுத்திறனாளியான அந்த பெண் கர்ப்பமாக இருந்தது தெரியவந்தது. இது குறித்து அவரது உறவினர்கள் முசிறி மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தனர்.

இதைத்தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில், தந்தையான விவசாயியே அவரது மகளை 2020 ஆம் ஆண்டு டிசம்பர் 19 ஆம் தேதி பாலியல் தொல்லைக்கு உள்ளாக்கிய விவரம் தெரியவந்தது. இதனையடுத்து அவரை போலீஸார் கைது செய்தனர். அடுத்த சில மாதங்களில், பெண்ணுக்கு குறை பிரசவத்தில் குழந்தை இறந்து பிறந்தது. மேலும் 5 மாதங்கள் கழித்து உடல் நலம் மிகவும் பாதிக்கப்பட்ட நிலையில் அந்த பெண்ணும் உயிரிழந்தார்.

இதுதொடர்பான வழக்கு திருச்சி மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் தொடரப்பட்டு நடந்து வந்தது. வழக்கில் வியாழக்கிழமை தீர்ப்பளிக்கப்பட்டது. இதில், குற்றம் நிரூபிக்கப்பட்டதையடுத்து விவசாயிக்கு வாழ்நாள் சிறை தண்டனையும், ரூ. 10,000 அபராதமும் விதித்து நீதிபதி ஸ்ரீவத்சன் தீர்ப்பளித்தார். இந்த வழக்கில் அரசுத்தரப்பு சிறப்பு வழக்குரைஞராக ஜாகிர் உசேன் ஆஜரானார்.

Next Story

சொத்துக்குவிப்பு வழக்கு; 79 வயது முன்னாள் சார்பதிவாளருக்கு 5 ஆண்டுகள் சிறை!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
79-year-old ex-registrar sentenced to 5 years in prison for Asset transfer case

திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஜானகிராமன் (79). இவரது மனைவி வசந்தி (65). ஜானகிராமன் கடந்த 1989ஆம் ஆண்டு முதல் 1993ஆம் ஆண்டு வரை சார்பதிவாளராக பணியாற்றி வந்தார்.  ஜானகிராமனின் பணிகாலத்தில் அவரது பெயரிலும், அவரது மனைவி பெயரிலும் பல்வேறு இடங்களில் 37 லட்சத்துக்கும் மேற்பட்ட சொத்துக்களை வாங்கியுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக போலீசாருக்கு புகார் அளிக்கப்பட்டது.

அந்தப் புகாரின் பேரில், வருமானத்திற்கு அதிகமான சொத்துக்களை சேர்த்ததாக கணவர் மற்றும் மனைவி மீது திருச்சி மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் லஞ்சஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். மேலும், இது தொடர்பான வழக்கு திருச்சி ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்தது.

இந்த நிலையில், இந்த விசாரணை இன்று (25-04-24) நீதிபதிகள் முன்பு வந்தது. அப்போது, இந்த வழக்கை விசாரணை நடத்திய நீதிபதிகள், இருவர் மீதான குற்றச்சாட்டுகளையும் உறுதிப்படுத்தினர். இதனையடுத்து, ஜானகிராமனுக்கும், அவரது மனைவி வசந்திக்கும் ஐந்து ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிபதி அதிரடி தீர்ப்பளித்தார். அவர்கள் இருவரது பெயரில் உள்ள சொத்துக்களின் தற்போதைய மதிப்பு ரூ.100 கோடிக்கும் மேல் இருக்கும் எனக் கூறப்படும் நிலையில், அவற்றை பறிமுதல் செய்யவும் நீதிபதி உத்தரவிட்டார்.