Advertisment

கிட்னி திருட்டு விவகாரம்; தமிழகம் முழுவதும் ஆய்வு செய்ய உத்தரவு!

tn-sec

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம், பள்ளிப்பாளையத்தில் உள்ள அன்னை சத்யா நகர் உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதியில் வசிக்கும் ஏழை, எளிய விசைத்தறி தொழிலாளர்களைக் குறிவைத்து கிட்னி திருட்டு நடைபெறுவதாக பகீர் புகார் எழுந்துள்ளது. அதாவது விசைத்தறி தொழிலாளர்களின் ஏழ்மையைப் பயன்படுத்திக் குறைந்த விலைக்குச் சட்டவிரோதமாகச் சிறுநீரகத்தைப் பறிப்பதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த புகாரை அடுத்து நாமக்கல் மாவட்ட சுகாதாரத்துறை இணை இயக்குநர் ராஜமோகன் தலைமையிலான மருத்துவக் குழுவினர், வருவாய்த்துறை அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் நேற்று (17.06.2025) காலை முதல் அன்னை சத்யா நகர் குடியிருப்பு பகுதி மற்றும் பள்ளிபாளையம் அரசு மருத்துவமனை உள்ளிட்ட இடங்களில் தீவிர விசாரணை நடத்தினர். 

Advertisment

இந்த விசாரணையில் அந்த பகுதியில் கிட்னி விற்பனைக்காக இடைத்தரகராகச் செயல்பட்டது ஆனந்தன் என்பது தெரியவந்தது. இவர் ஏழை தொழிலாளர்களைத் திருச்சி, பெரம்பலூர், கோவை மற்றும் கொச்சி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று பணம் வாங்கி தருவதாகவும், கிட்னியை விற்பனை செய்ததாகவும் தெரியவந்துள்ளது. இதனையடுத்து ஆனந்தனிடம் இது குறித்து விசாரணை செய்வதற்காக போலீசார் அவரது வீட்டிற்குச் சென்றனர். அப்போது அவர் தலைமறைவாக உள்ளது தெரியவந்தது. மேலும் ஆனந்தனின் வீடும் பூட்டப்பட்டுள்ளது. 

இத்தகைய சூழலில் தான் தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் மதுரையில் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவரிடம் செய்தியாளர்கள் இந்த விவகாரம் குறித்து கேள்வி எழுப்பினர். இதற்கு அமைச்சர் மா. சுப்பிரமணியன் பதிலளித்துப் பேசுகையில், “தவறுதலாக வியாபார வணிக நோக்கத்தோடு உடல் உறுப்புகள் விற்பனையை யார் செய்தாலும் மிகப்பெரிய அளவில் தண்டிக்கப்படுவார்கள். இது மாதிரி யார் செய்தாலும் தண்டனைக்குரியது. இது குறித்து விசாரித்துக் கொண்டு இருக்கிறார்கள். நிச்சயமாகக் குற்றவாளிகள் தப்பவே முடியாது” எனப் பேசியிருந்தார். 

இந்நிலையில் இது போன்ற சம்பவங்கள் தமிழகம் முழுவதும் நடைபெற்றுள்ளதா?. அதோடு குறைந்த விலைக்குப் பொதுமக்களை ஏமாற்றி இது போன்று உடல் உறுப்புகள் திருடப்படுகிறதா?. சட்டவிரோதமாக உடல் உறுப்புகள் விற்பனை செய்யப்படுவதைத் தடுப்பது குறித்து தீவிர ஆலோசனை நடைபெற்று வருகிறது. மேலும் இது குறித்து தமிழகம் முழுவதும் ஆய்வு செய்ய மருத்துவத்துறை உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாகப் புகார்கள் வந்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்க ஊரக நலப்பணிகள் இயக்குநர் ராஜமூர்த்தி ஆணையிட்டுள்ளார். இது தொடர்பாகப் பிறப்பிக்கப்பட்டுள்ள உத்தரவில் இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட நபர்கள் மீதும், மருத்துவமனைகள் மீதும் எவ்வித பாரபட்சமும் இன்றி நடவடிக்கை எடுப்பதற்கு உரிய அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன.

public health department tn govt Investigation kumarapalayam PALLIPALAYAM namakkal kidney
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe