நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையத்தில் உள்ள அன்னை சத்யா நகர் உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதியில் வசிக்கும் ஏழை, எளிய விசைத்தறி தொழிலாளர்களைக் குறிவைத்து கிட்னி திருட்டு நடைபெறுவதாக பகீர் புகார் எழுந்துள்ளது. அதாவது விசைத்தறி தொழிலாளர்களின் ஏழ்மையை பயன்படுத்திக் குறைந்த விலைக்குச் சட்டவிரோதமாகச் சிறுநீரகத்தைப் பறிப்பதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. 

Advertisment

இந்த புகாரையடுத்து நாமக்கல் மாவட்ட சுகாதாரத்துறை இணை இயக்குநர் ராஜமோகன் தலைமையிலான மருத்துவக் குழுவினர், வருவாய்த்துறை அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் இன்று (17.06.2025) காலை முதல் அன்னை சத்யா நகர் குடியிருப்பு பகுதி மற்றும் பள்ளிபாளையம் அரசு மருத்துவமனை உள்ளிட்ட இடங்களில் தீவிர விசாரணை நடத்தினர். அதே சமயம் அந்த பகுதியில் கிட்னி விற்பனைக்காக இடைத்தரகா செயல்பட்டது ஆனந்தன் என்பது தெரியவந்தது. இவர் ஏழை தொழிலாளர்களைத் திருச்சி, பெரம்பலூர் மற்றும் கொச்சி ஆகிய பகுதிகளில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று பணம் வாங்கி தருவதாகவும், கிட்னியை விற்பனை செய்ததாகவும் தெரியவந்துள்ளது. 

Advertisment

இந்நிலையில் கிட்னி விற்பனையில் தரகராகச் செயல்பட்ட ஆனந்தன் தற்போது தலைமறைவாகியுள்ளார். அதாவது ஆனந்தனிடம் இது விசாரணை செய்வதற்காக போலீசார் அவரது வீட்டிற்கு சென்றபோது. அவர் தலைமறைவாக உள்ளது தெரியவந்துள்ளது. மேலும் ஆனந்தனின் வீடும் பூட்டப்பட்டுள்ளது. பள்ளிபாளையம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஏழைகளிடமிருந்து சிறுநீரகம் திருடப்பட்டது தொடர்பான குற்றச்சாட்டுப் பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்வலையையும், அதிர்ச்சியையும்  ஏற்படுத்தியுள்ளது.