திருமணமான புதுப்பெண் காரில் கடத்தப்பட்ட சம்பவம் சேலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே சிவசங்கராபுரத்தைச் சேர்ந்தவர் இளங்கோ(23). இவரும், தேவியாகுறிச்சியைச் சேர்ந்த 23 வயது பெண்ணும் காதலித்து வந்துள்ளனர். இவர்களது காதலுக்கு பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், இருவரும் திருமணம் செய்துகொண்டனர். பின்பு பாதுகாப்பு கேட்டு போலீசில் புகார் அளித்திருந்தனர்.
இந்நிலையில் திருமணமான புதுப் பெண்ணை கடத்தி விட்டதாகக் காதலன் இளங்கோ பள்ளப்பட்டி போலீசில் புகாரளித்துள்ளார். அதில், நாங்கள் இருவரும் காதல் திருமணம் செய்து கொண்டோம். அதன் பிறகு சேலத்தில் உள்ள ஒரு தனியார் விடுதியில் அறை எடுத்துத் தங்கியிருந்தோம். இங்கு இருந்தால் எங்களைப் பிரித்து விடுவார்கள் என்பதால், நானும் எனது காதல் மனைவியும் ஊட்டி செல்ல திட்டமிட்டிருந்தோம். அதற்காக காரில் புறப்படத் தயாராக இருந்த நிலையில், திடீரென ஒரு காரில் வந்த 4 பேர் என்னை கத்தி முனையில் வைத்து என்னுடைய காதல் மனைவியை கடத்திச் சென்றனர். எனவே அவரை மீட்டுத் தர வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார். அதன் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.