Skip to main content

மருந்தும் இல்லை, மருத்துவரும் இல்லை… பாம்பு கடிக்கு பரிதாபமாக உயிரிழந்த சிறுவன்!

Published on 24/08/2020 | Edited on 24/08/2020

 

kid died due to snake bite

 

கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகில் உள்ள வளையமாதேவி ஊரைச் சேர்ந்தவர் குமார். இவரது மகன் 4 வயது சிறுவன் கவின். நேற்று சிறுவன் விளையாடிக் கொண்டிருந்தபோது அவர்கள் வீட்டருகே ஒரு புற்றிலிருந்து வெளியே வந்த பாம்பு சிறுவனைக் கடித்துள்ளது. சிறுவனின் அலறல் சத்தம் கேட்டு அங்கு ஓடி வந்த பெற்றோரிடம், தன்னை பாம்பு கடித்து விட்டதாகக் கூறியுள்ளான் கவின்.

 

இதையடுத்து அவர்கள், மகனை உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வதற்கு அவசரமாக புறப்பட்டனர். ஆனால் நேற்று ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு என்பதால் வாகனங்கள் எதுவும் கிடைக்கவில்லை. அடுத்து பக்கத்து வீட்டைச் சேர்ந்த ஒருவரிடம் பைக்கை இரவல் வாங்கிக்கொண்டு அவர்கள் ஊரான வளையமாதேவியிலிருந்து எட்டு கிலோமீட்டர் தூரமுள்ள சேத்தியாதோப்பு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு விரைந்து சென்றனர். அங்கு மருத்துவர்கள் யாரும் இல்லாததால் அங்கிருந்த செவிலியர்கள் சிறுவனின் நாடித் துடிப்பைப் பார்த்துவிட்டு, நாடித்துடிப்பு குறைந்து வருகிறது என்று கூறியுள்ளனர். ஆனால், அங்கு பாம்பு கடிக்கான மருந்துகள் இல்லாததாலும் அங்கிருந்து சிதம்பரம், கடலூர் போன்ற ஊர்களுக்குச் செல்வதற்கு போதிய வாகன வசதி இல்லாததாலும் பெரிதும் சிரமப்பட்டனர்.

 

இந்த நிலையில் 108 ஆம்புலன்ஸுக்கு தகவல் அளித்து ஒரு மணி நேரம் கழித்தே ஆம்புலன்ஸ் வந்துள்ளது. அந்த ஆம்புலன்ஸ் மூலம் சிறுவனை சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிறுவனை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இதைக்கேட்டு சிறுவனின் பெற்றோர்கள் கதறி அழுதனர். இந்தச் சம்பவம் குறித்து சேத்தியாத்தோப்பு பகுதியில் வாழும் மக்கள், அரசு சுகாதார நிலையத்தில் போதுமான மருத்துவர்களோ மருந்து மாத்திரைகளோ இல்லாத காரணத்தால்தான் சிறுவன் உயிரிழந்துள்ளதாகக் கூறினர். மேலும், ஊரடங்கு காலத்தில் 108 ஆம்புலன்ஸ் வாகனமும் அவசர உதவிக்கு வந்து சேரவில்லை என்று அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

 

சுகாதார நிலையங்களில் விஷக்கடிக்கு முறிவு ஏற்படுத்தும் மருந்துகள் அவசியம் இருப்பு வைத்திருக்க வேண்டும். அதேபோல், போதிய மருத்துவர்களை நியமிக்க வேண்டும். இந்தச் சம்பவத்தை அரசும் சுகாதாரத்துறை அதிகாரிகளும் கவனத்தில் கொண்டு விரைந்து தீர்வு காண வேண்டும் என்கிறார்கள் சேத்தியாத்தோப்பு பகுதியில் உள்ள கிராம மக்கள்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பாம்பு கடித்து பள்ளி மாணவி உயிரிழந்த சோகம்!

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
nn

புதுக்கோட்டையில் பாம்பு கடித்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட பள்ளி மாணவி சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் எம்.குளவாய்ப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த கூலித்தொழிலாளி சின்னதுரை மகள் விசித்ரா (வயது 14). இவர் அதே ஊரில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் 8 ஆம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த ஒரு வார காலமாக தேர்தலுக்காக சில தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டு விடுமுறை விடப்பட்டிருந்தது. இந்நிலையில் கடந்த 20 ஆம் தேதி விசித்ரா தனது வீட்டில் வளர்க்கும் ஆடுகளுக்கு இரைதேடிச் சென்றவர் ஒரு கருவேலமரத்தடியில் கொட்டிக்கிடந்த கருவேலங்காய்களை சேகரித்த போது கீழே இருந்த பாம்பு விரலில் கடித்துள்ளது.

பாம்பு கடித்து அலறிய சிறுமியை உடனே அங்கிருந்தவர்கள் மீட்டு, புதுக்கோட்டை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். பாம்பின் விஷம் வேகமாக உடலில் பரவியுள்ள நிலையில் தீவிர சிகிச்சை அளித்தும் மாணவி விசித்ரா சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். சிறுமியின் இறப்பால் கிராமமே சோகத்தில் மூழ்கியுள்ளது.

Next Story

தனியார் கல்லூரி பேருந்து மோதி 6 வயது சிறுவன் உயிரிழப்பு

Published on 17/04/2024 | Edited on 17/04/2024
6-year-old boy lost their live in private college bus crash

நாமக்கல்லில் தனியார் கல்லூரி பேருந்து மோதி ஆறு வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது.

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு ஈரோடு சாலையில் உள்ள  தோட்ட வாடி கிராமத்தில் உள்ள பேருந்து நிலைய பகுதியில் கூட்டப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்த சதீஷ் என்பவர் இருசக்கர வாகனத்தில் தன்னுடைய 6 வயது மகனுடன் சென்று கொண்டிருந்தார். அப்போது இருசக்கர வாகனத்திற்குப் பின்புறம் வந்த தனியார் கல்லூரி பேருந்து எதிர்பாராத விதமாக மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே 6 வயது சிறுவன் தலை நசுங்கி உயிரிழந்தார். தந்தை சதீஷ்குமாரின் கை முறிந்து துண்டானது.

இந்தச் சம்பவம் அங்குப் பரபரப்பை ஏற்படுத்த, உடனடியாக அங்கு வந்த போலீசார் சிறுவனின் உடலைக் கைப்பற்றி  பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். அந்தப் பகுதிகளில் காலை நேரத்தில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருப்பதாகவும், அந்த நேரத்தில் தனியார் பேருந்துகள் மிகுந்த வேகத்துடன் செல்வதால் சாலைத் தடுப்பு, வேகத்தடை ஆகியவற்றை அமைத்துக் கொடுக்க வேண்டும் என அந்த பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

திருச்செங்கோடு காவல் நிலைய போலீசார் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தனியார் கல்லூரி பேருந்து மோதி 6 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் அங்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.