ஈரோட்டில் பெண் பயணி ஒருவரை அரசு பேருந்து ஓட்டுனர் காலால் எட்டி உதைத்ததாக புகார் எழுந்துள்ளது.
கிருஷ்ணகிரியைச் சேர்ந்த பத்மாவதி என்பவர் தனது உறவினரான கர்ப்பிணி பெண்ணை உடன் அழைத்துக்கொண்டு ஈரோடு நகரப் பேருந்தில் சென்றுள்ளார். பேருந்து நிறுத்தத்தில் அந்தப் பெண் இறங்குவதற்கு முன் பேருந்தை நகர்த்தியதில் அவர் தடுமாறியுள்ளார். இதற்காக ஓட்டுனரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட பத்மாவதியை ஓட்டுனர் சின்னசாமி எட்டி உதைத்ததாகக் கூறப்படுகிறது.
இதைபார்த்த கர்ப்பிணியின் உறவினர்களும், சக பயணிகளும் அதிர்ச்சி அடைந்தனர். அந்த டிரைவருக்கு அவர்கள் எதிர்ப்பு தெரிவித்து திரண்டனர். உடனடியாக மற்ற டிரைவர்கள், கண்டக்டர்கள் விரைந்து சென்று உறவினர்களையும், பயணிகளையும் சமாதானம் செய்தனர். அதற்குள் கர்ப்பிணியை தாக்கியதாக கூறப்படும் டிரைவர் அங்கிருந்து தப்பி சென்றார். இதனால் ஆத்திரம் அடைந்த உறவினர்கள் மற்றும் பயணிகள் அரசு பஸ்சை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுபற்றிய தகவல் கிடைத்ததும் ஈரோடு டவுன் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். பத்மாவதி கொடுத்த புகாரின் அடிப்படையில் நகர போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.