Skip to main content

தனது எழுத்து படைப்புகள் அனைத்தையும் வாசகர் ஒருவருக்கு எழுதி  கொடுத்த கி.ரா..! 

Published on 18/05/2021 | Edited on 18/05/2021

 

ki rajanarayanan who wrote all his writing works for a reader ..!

 

கி.ரா. என்று சுருக்கமாக அழைக்கப்படும் கி.ராஜநாராயணன், தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகில் உள்ள இடைசெவல் கிராமத்தைச் சேர்ந்தவர். 1922-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 19-ஆம் தேதி பிறந்த இவரது இயற்பெயர் ராயங்கல ஸ்ரீ கிருஷ்ணராஜ நாராயண பெருமாள் ராமானுஜம். பின்னாட்களில் இதைச் சுருக்கி, கி.ராஜநாராயணன் என்று வைத்துக் கொண்டார். அது பின்னர் கி.ரா என ஆனது. கரிசல் இலக்கியத்தின் முன்னோடி எனப் போற்றப்படும் கி.ரா 1958 -ஆம் ஆண்டு முதல் கடைசிக் காலம் வரை  எழுதிக்கொண்டே இருந்தவர்.

 

ஏழாம் வகுப்பு வரை மட்டுமே பயின்ற கி.ரா பிறகு, விவசாயம் பார்த்து வந்தார். 35 வயதுக்கு மேல் எழுதத் தொடங்கினார். அவரின் 'மாயமான்’என்ற முதல் சிறுகதை 1958-ல் 'சரஸ்வதி' இதழில் வெளியாகி வாசகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றதால், தொடர்ந்து பல சிறுகதைகள் எழுதினார்.

 

கரிசல் பூமி மக்களின் வாழ்க்கை, துன்பங்கள், நம்பிக்கைகள், ஏமாற்றங்களை இவரது எழுத்துகள் விவரித்தன. சிறுகதை, குறுநாவல், நாவல், கிராமியக் கதை, கடிதம் என்று தமிழ் இலக்கியத்தின் பல்வேறு தளங்களிலும் முத்திரை பதித்தார்.

 

வாய்மொழிக் கதை சொல்லும் மரபின் கூறுகளைத் தனது படைப்பின் அடிப்படை அம்சங்களாகக் கொண்டிருந்தார். வட்டார வாய்மொழி மரபு, செவ்விலக்கியக் கூறுகள், நேரடியான இதழியல் நடை ஆகிய மூன்று கூறுகளையும் கலந்து, தனக்கென தனி நடையை உருவாக்கிக் கொண்டவர்.

 

பிரபல இதழ்களில் இவரது கதைகள் தொடர்ந்து வெளிவந்தன. 2007-ல் இவை அனைத்தும் தொகுக்கப்பட்டு 944 பக்கங்கள் கொண்ட 'நாட்டுப்புறக்கதைக் களஞ்சியம்’ என்ற படைப்பாக வெளியானது. 2009-ல் மட்டும் இவரது 30 புத்தகங்கள் வெளி வந்தன. இவரது சில கதைகள் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப் பட்டுள்ளன. சிறுகதைத் தொகுப்புகள், 2 குறுநாவல்கள், 6 கட்டுரைத் தொகுதிகள், 3 நாவல்கள் எழுதியுள்ளார். 

 

'இவரது நூல்களில் 'கோமதி', 'கண்ணீர், 'கரிசல் கதைகள், 'கி.ரா.பக்கங்கள்', 'கிராமியக் கதைகள்', 'கொத்தை பருத்தி, 'புதுவை வட்டார நாட்டுப்புறக் கதைகள், 'கோபல்ல கிராமம்' 'புதுமைப் பித்தன், 'மாமலை ஜீவா' ஆகியவை குறிப்பிடத்தக்கவை. 'கிடை’ என்ற இவரது குறுநாவல் 'ஒருத்தி' என்ற திரைப்படமாக தயாரிக்கப்பட்டுள்ளது. "ஒரே மூச்சில் ஒரு கதையை எழுதி முடிக்கும் வழக்கம் எனக்கு கிடையாது. எழுதியதைப் படித்து, மீண்டும் மீண்டும் அடித்துத் திருத்தி எழுதும் பழக்கம் உள்ளவன்’என்று குறிப்பிட்டுள்ளார் கி.ரா.

 

படிக்காத இவர் படைத்த செறிவான படைப்புகளை வைத்து புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் சிறப்புப் பேராசிரியராக பணியாற்றும் வாய்ப்பு கிடைத்தது.  சாகித்திய அகாதமி விருதைப் பெற்ற கி.ராவின் இலக்கிய பணிக்கு மரியாதை செலுத்தும் வகையில் புதுச்சேரி லாஸ்பேட்டையில் அவருக்கு வீடு அளித்தது புதுச்சேரி அரசு. அவரது மூத்த மகன் திவாகரன், இளைய மகன் பிரபு என்கிற பிரபாகரன். 

 

கடைசி காலத்தில் கி.ரா.வை எழுத்தாளரான இளைய மகன் பிரபு மற்றும் ஒளிப்பட கலைஞர் இளவேனில் ஆகியோர் இவரை கவனித்து வந்துள்ளனர். கரோனா காலத்திலும் அவர் கைப்பிரதியாக பெண்களைப் பற்றிய  "அண்டரெண்டப்பட்சி" எனும் புத்தகத்தை எழுதியுள்ளார். இதை அச்சில் ஏற்றாமல் கைப்பிரதியாகவே வாசகர்கள் படிக்க வேண்டும் என கி.ரா. விருப்பம் தெரிவித்துள்ளார். மேலும், ஜாதி குறித்த "சாவஞ்செத்த சாதிகள்" என்று கதையினையும் எழுதியுள்ளார். தான் எழுதாமல் விட்ட கதைகளைத் தொகுப்பாகக் கொண்டு "மிச்ச கதைகள்" என்ற புத்தகத்தைத் தயாரித்துள்ளார்.

 

கடந்த டிசம்பர் 26-ஆம் தேதி சுயநினைவுடன்  எழுதிக் கொள்வதாகக் கூறி ஒரு எழுத்து படிவத்தை அவர் வெளியிட்டுள்ளார். அதில் தனது படைப்புகள் அனைத்தும் புதுவை இளவேனில், அவரது மூத்த மகன் திவாகரன், இளைய மகன் பிரபு என்கிற பிரபாகரன் ஆகியோருக்கும்  சேரும் என அவர் கைப்பட எழுதியுள்ளார். மேலும் இது தொடர்பான வீடியோ பதிவினை ஒன்றிணையும் கி.ராஜநாராயணன் வெளியிட்டுள்ளார். இன்று முதல் தனது படைப்புகள் அனைத்தும் இந்த மூவரையும் சாரும் என வாசகர்களுக்கும் பதிப்பாளர்களுக்கும் அவர் தெரிவித்துள்ளார்.

 

தனது படைப்புகளை வெளியிடும் பதிப்பாளர்களும் திரைப்படமாக வெளியிடுபவர்களும் அதன் ராயல்டியை இந்த மூவருக்கும் கொடுக்க வேண்டும் எனக் கையொப்பமிட்டுள்ளார். இந்த மூவரும் தனது படைப்புகள் மூலம் வரும் வருவாயில் ஒரு பகுதியை "கரிசல் அறக்கட்டளை" எனத் துவங்கி எழுத்தாளர்களுக்கும் சிறு பத்திரிகைகளுக்கும் தனது பெயரில் பணமுடிப்பும், கூடிய விருதினை வழங்குமாறும் கேட்டுக் கொண்டுள்ளார்.

 

தமிழ் இலக்கிய வரலாற்றில் முதல் முறையாகத் தனது எழுத்துப் படைப்புகள் அனைத்தையும் வாசகர் ஒருவருக்கு எழுத்தாளர் எழுதிக்  கொடுத்து இருப்பது இதுவே முதல் முறை.

 

99 வயதாகும் கி.ராஜநாராயணன் புதுச்சேரி லாஸ்பேட்டை அரசு குடியிருப்பில் அவரது இல்லத்தில் நே‌ற்று இரவு 11 மணிக்குக் காலமானார். வயது முதிர்வு காரணமாக உடல்நிலை பாதிக்கப்பட்டு வீட்டிலேயே சிகிச்சை பெற்ற நிலையிலே அவர் இறந்துள்ளார். லாஸ்பேட்டை அரசு குடியிருப்பில் அஞ்சலிக்கு வைக்கப்பட்ட அவரது உடல் மதியம் கோவில்பட்டியில் உள்ள அவரது சொந்த ஊருக்கு எடுத்துச் செல்லப்பட்டு இறுதிச்சடங்கு செய்யப்பட்ட உள்ளது.

 

புதுச்சேரி அரசு சார்பில் போலீஸ் மரியாதையுடன் அவரது உடலுக்கு மரியாதை செலுத்தப்பட்டது.  லாஸ்பேட்டையில் உள்ள அரசு குடியிருப்பில் அவரது உடலுக்கு அரசு சார்பில் சட்டமன்ற உறுப்பினர்கள் சிவா, வைத்தியநாதன், கல்யாணசுந்தரம், செய்தித்துறை இயக்குனர் வினயராஜ் ஆகியோர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்கள். மேலும் கி.ராஜநாராயணன் உடலுக்கு புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன், முன்னாள் முதல்வர் நாராயணசாமி மற்றும் பல்வேறு எழுத்தாளர்கள், அரசியல் தலைவர்கள், சமூக ஆர்வலர்கள் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர்.

 

பின்னர் எழுத்தாளர் கி.ரா. உடல் ஆம்புலன்ஸ் மூலம் புதுச்சேரியிலிருந்து கோவில்பட்டி இடைச்செவல் கிராமத்திற்குக் கொண்டு செல்லப்பட்டது. இரவு 8 மணியளவில் அவரது உடல் அங்கு செல்லும் எனத் தெரிகிறது. 

 

இதனிடையே துணை நிலை ஆளுநர் தமிழிசை  வெளியிட்டுள்ள இரங்கல் குறிப்பில், "நாட்டுப்புற இலக்கியத்தை முதன்மைப்படுத்தியதில் கி.ராவுக்கு தனி இடம் உண்டு. தமிழ் கதை இலக்கியத்தில் புதிய திசைவழியை உருவாக்கிக் கொடுத்த கரிசல் இலக்கியத்தின் முன்னோடி கி.ரா. லாஸ்பேட்டையில் உள்ள கி.ரா.வின் இல்லம் நினைவு நூலகமாக மாற்றுவது குறித்துப் பரிசீலிக்கப்படும்" என்று தெரிவித்துள்ளார். 

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

“அன்னைத் தமிழ் அரியணை ஏறுமா?” - ராமதாஸ்

Published on 16/03/2024 | Edited on 16/03/2024
Ramadoss questioned Will Tamil ascend the throne?

தமிழ்நாடு அரசின் சார்பில் 2வது உலகத் தமிழ் செம்மொழி மாநாடு அடுத்த ஆண்டு ஜூன் மாதம் சென்னையில் நடத்தப்படும் எனத் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்திருந்தார்.

இந்த நிலையில், செம்மொழி மாநாட்டிற்கு முன்பாக கல்வி, வணிகம், நீதிமன்றங்களில் அன்னைத் தமிழ் அரியணை ஏறுமா? என்று பா.ம.க நிறுவனர் ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார். 

இது தொடர்பாக, ராமதாஸ் தனது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது, “தமிழ்நாடு அரசின் சார்பில் இரண்டாவது உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு அடுத்த ஆண்டு ஜூன் மாதத்தில் சென்னையில் நடத்தப்படும் என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்திருக்கிறார். நல்லது. அதற்குள்ளாகத் தமிழ்க் கட்டாயப் பாடம், தமிழ் பயிற்று மொழி, சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ் அலுவல் மொழி, கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களில் தமிழ்ப் பெயர்ப்பலகைகள் ஆகியவற்றை சாத்தியமாக்கி  அன்னைத் தமிழை அரியணையில் ஏற்றுமா தமிழக அரசு?” என்று தெரிவித்துள்ளார்.

Next Story

எழுத்துப் பிழையுடன் அரசு பெயர்ப் பலகைகள்; கவனிக்குமா தமிழ் வளர்ச்சித்துறை?

Published on 11/03/2024 | Edited on 11/03/2024
Spelling mistake on government office name boards

தமிழகத்தில் கடந்த 2021ஆம் ஆண்டு திமுக ஆட்சிக்கு வந்த பிறகு, அதுவரை நடைமுறையில் இருந்து வந்த வீட்டுவசதித் துறையை, 'வீட்டுவசதி  மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை' என்று பெயர் மாற்றியது. அதேபோல, குடிசை மாற்று வாரியத் துறையை, 'தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம்' என்று பெயர்களை மாற்றி அமைத்தது. ஆனால் இந்த இரு துறைகளின் பெயர்களிலும் இடம்பெற்றுள்ள, 'நகர்ப்புறம்' என்ற சொல்லை, 'நகர்ப்புரம்' என்று குறிப்பிட்டுள்ளனர். அரசின் இணையதளத்திலும் அவ்வாறே பிழையுடன் 'நகர்ப்புரம்' என்றே பதிவு செய்துள்ளனர். அதாவது, வல்லின 'றகரம்' வர வேண்டிய இடத்தில்,  இடையின 'ரகர' எழுத்தைக் குறிப்பிட்டு, 'நகர்ப்புரம்' என்று பிழையுடன் குறிப்பிடப்பட்டு இருந்தது.

முதல்வர் மு.க.ஸ்டாலின், கடந்த 11.12.2021 ஆம் தேதி சேலத்தில் கலந்து கொண்ட நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவிலும்கூட, 'நகர்ப்புரம்'  என்று குறிப்பிட்டே பதாகைகள் வைக்கப்பட்டு இருந்தன. செய்தி மக்கள் தொடர்புத் துறை அச்சிட்டு இருந்த அழைப்பிதழிலும் 'நகர்ப்புரம்'  என்று பிழையுடனே குறிப்பிட்டு இருந்தனர். இதுகுறித்து நக்கீரன் இணைய ஊடகத்தில் 20.12.2021ஆம் தேதி செய்தி வெளியிட்ட பிறகு, அரசு இணையதளத்தில் இருந்து பிழையான சொல்  திருத்தம் செய்யப்பட்டு 'நகர்ப்புறம்' என்று மாற்றப்பட்டது.

இது இப்படி இருக்க, சேலம் குமாரசாமிப்பட்டியில் கட்டப்பட்டுள்ள நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலைய கட்டட முகப்பின் இடப்பக்கத்தில், 'நகர்புர' சமுதாய சுகாதார மையம் என்றும், வலப்பக்கத்தில் 'நகர்ப்புர' ஆரம்ப சுகாதார நிலையம் என்றும், நுழைவு வாயில் முன்பு உள்ள முகப்பு  சுவரில் உள்ள கருப்பு நிற பளிங்கு கல்வெட்டில், 'நகர்புற' சமுதாய சுகாதார மையம் என்றும் எழுத்துப் பிழைகளுடன் பெயர்ப் பலகை வைத்துள்ளனர். வல்லின றகர எழுத்துடன் குறிப்பிடப்படும் புறம் என்ற சொல்லுக்கு திசை, பக்கம், வெளியே, காலம், வீரம், புறநானூறு என பல பொருள்கள்  உள்ளன. இங்கே நகர்ப்புறம் என்பது அனைத்து உட்கட்டமைப்பு வசதிகளையும் பெற்ற நிலப்பரப்பைக் குறிக்கும். அதாவது, இடவாகுபெயராக  வருவது, புறம் ஆகும். நகர் + புறம் = நகர்ப்புறம் எனலாம். ஆகையால், நகர்ப்புறம் என்றே பெயர்ப் பலகையில் குறிப்பிட்டிருக்க வேண்டும்.

அதேபோல, இடையின 'ரகற' எழுத்துடன் குறிப்பிடப்படும் புரம் என்ற சொல்லுக்கு நகரம், ஊர் என்று பொருள்கள் உள்ளன. இது ஒரு  பெயர்ச்சொல்லாகும். வணிகர்கள் வாழும் பகுதியை நகர் என்கிறார்கள் மொழியியல் ஆய்வாளர்கள். காஞ்சிபுரம் என்றால் காஞ்சி நகர் என்றும், விழுப்புரம் என்றால் விழுமிய நகர், பல்லவபுரம் என்றால் பல்லவ நகர் என்றும் பொருள்படும்.  எனில், நகர்ப்புரம் என்று குறிப்பிட்டால் அதன் பொருள் 'நகர்நகர்' என்றாகி விடும். ஆக, நகர்ப்புரம் என்று குறிப்பிடுவது முற்றிலும் பிழையானது.

Spelling mistake on government office name boards

இது ஒருபுறம் இருக்க, சேலம் குமாரசாமிப்பட்டியில் நகர்ப்புற சுகாதார மையத்தில் பெயர்ப்பலகை எழுதுகையில், அதிகாரிகள் நகர்ப்புறம்  அல்லது நகர்ப்புரம் என்பதில் கடைசி வரை பெரும் குழப்பத்துடன் இருந்திருக்கக்கூடும். ஓரிடத்தில் 'நகர்புரம்' என்றும், மற்றொரு இடத்தில் 'நகர்ப்புரம்' என்றும், நுழைவு வாயில் பகுதியில் 'நகர்புறம்' என்றும் விதவிதமாக  எழுதியுள்ளனர். நகர் + புறம் என்றாலும் சரி; நகர்+புரம் என்றாலும் சரி; சேர்த்து எழுதும்போது இரண்டு சொல்லுக்கும் இடையில் 'ப்' என்ற  ஒற்றெழுத்து மிகும். இலக்கண விதிப்படி சொல்வதெனில், வருமொழியில் ககரம், சகரம், தகரம், பகரம் ஆகிய எழுத்துகளில் தொடங்கும் சொற்கள் இருந்தால், அவ்விரண்டு சொற்களுக்கும் இடையில் க், ச், த், ப் ஆகியவற்றுக்கு இனமான ஏதேனும் ஓர் ஒற்றெழுத்துத் தோன்றும்.

இது மட்டுமின்றி, சேலம் பெரமனூர் நாராயணசாமி தெருவில் உள்ள தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய நிர்வாகப் பொறியாளர்  அலுவலக பெயர் பலகையிலும் நகர்ப்புறம் என்பதை 'நகர்ப்புரம்' என்று எழுத்துப் பிழையுடன் வைத்துள்ளனர். இப்படி பிழையான பெயர்ப் பலகைகளை அன்றாடம் காண்போருக்கு, ஒரு கட்டத்தில் அந்தச் சொல்தான் சரியாக இருக்குமோ என்ற முடிவுக்கும் வந்து விடும் அபாயம் இருக்கிறது. இது தொடர்பாக நாம் சேலம் மாவட்ட தமிழ் வளர்ச்சித்துறை உதவி இயக்குநர் ஜோதியிடம் கேட்டபோது, ''இடையின ரகர எழுத்துடன்  'நகர்ப்புரம்' என்று எழுதுவது பிழையானதுதான். சேலம் குமாரசாமிப்பட்டி சுகாதார நிலைய பெயர்ப்பலகையில் நகர்ப்புறம் என்றுதான் எழுத  வேண்டும். இது தொடர்பாக நீங்கள் ஒரு கடிதம் எழுதினால் எங்கெங்கு பிழைகள் இருக்கிறதோ அங்கெல்லாம் திருத்தி எழுதி விடுகிறோம்,'' என்றார்.     

Spelling mistake on government office name boards

அவரை தொடர்பு கொண்டபோது, 'ஐயா' என்றே அழைத்தவர், முழு உரையாடலையும் மொழி கலப்பின்றி பேசினார். பதவிக்குத் தகுந்த அணுகுமுறை சரிதான் என்றாலும் கூட, இதற்கெல்லாம் அரசுக்குக் கடிதம் எழுதினால்தான் பிழைகள் திருத்தப்படும் என்பது சற்று முரணாக இருந்தது. ஒரு தவற்றைச் சுட்டிக்காட்டிய பிறகு அரசு அலுவலர்கள் அதை சரிசெய்வதே சிறந்தது. நகர்ப்புறமா? அல்லது நகர்ப்புரமா? என்ற குழப்பம் இன்னும் தமிழக அரசுக்கே தீர்ந்தபாடில்லை போலிருக்கிறது. நடப்பு ஆண்டுக்கான நிதிநிலை  அறிக்கையிலும் நகர்ப்புறம் என்று வர வேண்டிய எல்லா இடங்களிலும் நகர்ப்புரம் என்றே பிழையுடன் குறிப்பிட்டு இருந்தனர்.

செவ்வியல் செறிவுடன் கூடிய தமிழ் மொழி, ஏற்கெனவே வேகமாகச் சிதைந்து வருகிறது. அதை அழிந்து விடாமல் காப்பதே நம் கடமை.  நாடாளுமன்றத் தேர்தலைக் காரணம் காட்டி, காலம் தாழ்த்தாமல் மேற்படி பிழைகளைத் தமிழ் வளர்ச்சித்துறை மற்றும் சேலம் மாநகராட்சி  அலுவலர்கள் விரைந்து சரிசெய்திட வேண்டும்.