Skip to main content

அத்துமீறிய கேரள இளைஞர்கள்; பதறிய ஊழியர்கள் - நள்ளிரவில் பயங்கரம் 

Published on 16/12/2023 | Edited on 16/12/2023
Kerala youth threatened the bar staff and bought alcohol in Coimbatore

கோவை மாவட்டம், கேரளா செல்லும் வழியில் அமைந்துள்ளது எட்டிமடை கிராமம். இந்தப் பகுதியில் உள்ள சாலையில், சுமார் 1 கிலோ மீட்டர் தூரத்திற்கு காடுகள் சூழ்ந்திருக்கும். இந்தக் காட்டுப்பகுதியில் ஒரு டாஸ்மாக் கடை உள்ளது. இந்த டாஸ்மாக் கடைக்கு அருகிலேயே பார் ஒன்றும் உள்ளது. காட்டுப்பகுதியில் இருக்கும் டாஸ்மாக் பார் என்றாலும், பகல் நேரத்தில் இந்தச் சாலை வழியாக செல்லும் பயணிகளும், மது பிரியர்களும் ஏராளமாக வந்து செல்வார்கள். இதன் காரணமாக இந்த பாரில் எப்போதும் கூட்டம் இருந்துகொண்டே இருக்கும். இரவு பத்து மணிக்கு சாத்தப்படும் இந்தப் பாரில், வேலை செய்யும் பணியாளர்களுக்கு அதன் அருகிலேயே தங்கிக்கொள்ள அறை அமைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இந்தப் பாரில் வேலை செய்த சில ஊழியர்கள் வேலை முடிந்த பிறகு தங்களின் அறைக்குச் சென்று தூங்கியுள்ளனர். அப்போது அதிகாலை சுமார் 3 மணியளவில் அங்கு வந்த மர்ம நபர்கள் சிலர், பாரின் கதவினை தட்டியுள்ளனர். அப்போது பாருக்குள் யாரும் இல்லாத காரணத்தால் அதன் கதவுகள் திறக்கப்படவில்லை. அதன் பின்னர் பாருக்கு பின் புறம் சென்று, அங்கிருந்த அறையின் கதவினை தட்டியுள்ளனர். ஆனால், ஊழியர்கள் அனைவரும் நல்ல அசதியில் உறங்கியதால் அந்தக் கதவினை யாரும் திறக்கவில்லை. இதனால், ஆத்திரமடைந்த மர்ம கும்பல், தொடர்ந்து அந்த அறையின் கதவினை வேகமாக தட்டியுள்ளனர்.

பின்னர், ஒரு வழியாக அந்த அறையின் ஜன்னல் ஒன்று திறந்துள்ளது. அப்போது அறையின் உள்ளே இருந்தபடி ஊழியர் ஒருவர், என்ன வேணும் உங்களுக்கு?.. எனக் கேள்வி எழுப்பியுள்ளார். உடனே வெளியே நின்ற 3 பேர் அடங்கிய மர்ம கும்பல், தங்களுக்கு மதுபானம் வேண்டும் என்று கேட்டுள்ளனர். இதனைக் கேட்ட பார் ஊழியர், ரூம்ல எதுவும் இல்லைங்க... எனவும், காலையில் டாஸ்மாக் கடை திறந்தபிறகு மட்டும்தான் மதுபானம் கிடைக்கும் என்றும் கூறியிருக்கிறார். ஆனால், அந்த ஊழியரின் பேச்சை கண்டுகொள்ளாத மர்ம நபர்கள் அங்கேயே நின்றுகொண்டு ஏய்.. மதுபாட்டில் இல்லாமல் இருக்காது.. உடனே எடுத்து வா... என மிரட்டும் தொணியில் கூறியுள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த பார் ஊழியர், கதவை வேகமாக திறந்து, பாரில் மதுவகைகள் எதுவும் இல்லை எனச் சத்தமாக கூறியுள்ளார்.

இந்த வார்த்தையைக் கேட்டதும், கோபத்தின் உச்சத்திற்கே சென்ற மர்ம நபர் ஒருவர், யாரும் எதிர்பாராத நேரத்தில் சட்டென்று தன் இடுப்பில் இருந்து துப்பாக்கியை எடுத்து, டேய்... ஒழுங்கா சரக்கு பாட்டில் எடுத்து வா.. இல்ல போட்டுத்தள்ளிடுவோம்.. என மிரட்டியுள்ளார். நடு ராத்திரியில் துப்பாக்கியைக் காட்டியதும் நடுங்கிப் போன ஊழியர், உடனே ஒடிச்சென்று, பாரைத் திறந்து அங்கிருந்த மதுபாட்டில்கள் சிலவற்றை எடுத்துக்கொடுத்துள்ளார். அதுவரை ஆத்திரத்தோடு வெளியே நின்ற மூன்று பேரும், மதுபாட்டில்கள் கிடைத்ததும் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர். அதுவரை செய்வதறியாது தவித்து நின்ற பார் ஊழியர்கள், அவர்கள் சென்றதும், உடனே இது குறித்து அவர்களின் முதலாளிக்கு தகவல் கொடுத்துள்ளனர். அதன் பின்னர், சம்பவ இடத்திற்கு சென்ற பார் உரிமையாளர், ஊழியர்களையும் அழைத்துச் சென்று க.க.சாவடி காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். 

புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், இது குறித்து அங்கிருந்த சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் விசாரணை நடத்தியுள்ளனர். அப்போது, நள்ளிரவு நேரத்தில் துப்பாக்கியை காட்டி, மது வாங்கிச்சென்ற மூன்று பேரின் அங்க அடையாளங்களை வைத்து யார் என்ற கோணத்தில் தீவிரமாக விசாரித்துள்ளனர். இந்த விசாரணையில், துப்பாக்கியைக் காட்டிய மர்ம நபர்கள் மூவரும், கேரள மாநிலம் கொழிஞ்சாம் பாறையைச் சேர்ந்த  விபின், சதீஷ் மற்றும் அர்ஜுன் என்பதை உறுதிசெய்துள்ளனர். 

இதனையடுத்து மூவரையும் கைது செய்த போலீசார், அவர்களுக்கு துப்பாக்கி எப்படி கிடைத்தது என்று விசாரித்த போது, அவர்கள் பயன்படுத்திய துப்பாக்கி, பறவைகளை விரட்ட பயன்படுத்தும் ஏர் கன் வகையைச் சேர்ந்தது என்பது தெரியவந்துள்ளது. இதனையடுத்து மூவரையும் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். நள்ளிரவில் டாஸ்மாக் பார் ஊழியர்களிடம் துப்பாக்கியைக் காட்டி, மது வாங்கிச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சார்ந்த செய்திகள்

Next Story

கோவில் காவலாளி அடித்துக் கொலை; போலீசார் தீவிர சோதனை!

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
69-year-old temple watchman was beaten to passed away near Mappedu

திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் ஒன்றியம் மப்பேடு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மேட்டுமாநகர் பகுதியில் புதிதாக விநாயகர் கோயில் கட்டும் பணி நடைபெற்று வருகிறது.  இந்நிலையில் கட்டுமான பணிக்காக செங்கல் இறக்கி வைத்திருப்பதால், அதனை பாதுகாப்பதற்காக  கோவிலுக்கு காவலாளியாக செல்வம் (69) என்ற முதியவர் கடந்த இரண்டு நாட்களாக வேலை பார்த்து வந்துள்ளார்.

இந்நிலையில் இன்று காலை கோவில் காவலாளி செல்வம் தலையில் பலத்த காயங்களுடன் விழுந்து கிடப்பதைக் கண்ட அப்பகுதி மக்கள் மப்பேடு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து மப்பேடு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ஆய்வு நடத்தினர். தலையில் பலத்த காயங்களுடன் உயிரிழந்த காவலாளி செல்வம் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

போலீசார் நடத்திய விசாரணையில், முதியவர் செல்வத்திற்கு திருமணம் ஆகி மனைவி மற்றும் பிள்ளைகள் ஏற்கெனவே இறந்துவிட்ட நிலையில், தனியாக வாழ்ந்து வந்தது தெரிந்தது. மப்பேடு மாநகரில் உள்ள செங்கல் சூளையில் வேலை பார்த்து வந்த இவர் கடந்த இரண்டு நாட்களாக கோயில் கட்டுமான பணி காரணமாக இரவு காவலாளியாக வேலை பார்த்ததும் தெரியவந்தது. எனவே புதிதாக கட்டப்படும் கோயிலில் 69 வயதான செல்லம் முதியவர் காவலாளியாக வேலை பார்த்த நிலையில் அவரை அடித்து கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. எதற்காக இந்த கொலை நடைபெற்றது? இந்தக் கொலை சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்கள் யார்? என்பது குறித்து மப்பேடு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். காவலாளிக்கே பாதுகாப்பு இல்லாத சம்பவத்தால் பொதுமக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர்.

Next Story

சங்கம்விடுதி குடிநீர் தொட்டி விவகாரம்! அதிகாரிகள் ஆய்வு!

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
Sangamviduthi drinking water tank issue officials investigation

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட சங்கம்விடுதி ஊராட்சியில் உள்ள குருவாண்டான் தெருவில் சுமார் 100 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்தப் பகுதி பொதுமக்களின் பயன்பாட்டிற்காக அதே பகுதியில் ஆழ்குழாய் கிணறு அமைத்து மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி மூலம் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. பொதுமக்களுக்கு மட்டுமின்றி அப்பகுதியில் உள்ள அங்கன்வாடி மையத்திற்கும் இந்த தண்ணீரே வழங்கப்படுகிறது. ஒரே தொட்டியில் இருந்தே அனைத்து சமுதாய மக்களுக்கும் குடிநீர் வழங்கப்படுகிறது. பாகுபாடற்ற ஒற்றுமையான கிராமமாக உள்ளது.

இந்த நிலையில் சில நாட்களுக்கு முன்பு காலையில் குழாயில் தண்ணீர் தூசியாக வந்துள்ளதையடுத்து அப்பகுதி இளைஞர்கள் தண்ணீர் தொட்டியில் ஏறிப் பார்த்துவிட்டு தண்ணீரை வெளியேற்றி பார்த்துள்ளனர். உள்ளே பாசி போல கருப்பாக ஆங்காங்கே கிடந்துள்ளது. அவற்றை சேகரித்து வெளியே எடுத்து பார்த்த போது கூடியிருந்தவர்கள் ஒவ்வொருவரும் மாட்டுச் சாணம் என்றும், தொட்டி சரியாக கழுவாததால் சேர்ந்துள்ள பாசி என்றும் கூறினர்.

Sangamviduthi drinking water tank issue officials investigation

இந்த தகவல் அறிந்து வருவாய்த் துறை, ஊரகவளர்ச்சித்துறை, காவல்துறை, சுகாதாரத்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து ஆய்வு செய்து விசாரனை செய்தனர். தொடர்ந்து தண்ணீரையும், தண்ணீர் தொட்டியில்இருந்து சேகரிக்கப்பட்ட கழிவுகளையும் ஆய்வுக்காக எடுத்துச் சென்றதுடன் தற்காலிகமாக சம்மந்தப்பட்ட தண்ணீர் தொட்டியில் இருந்து குடிநீர் கொடுப்பதை நிறுத்திவிட்டு டேங்கர் லாரிகள் மூலம் தண்ணீர் வழங்க ஏற்பாடு செய்தனர். சேகரிக்கப்பட்ட மாதிரிகள் ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து அறந்தாங்கி டிடி நமச்சிவாயம் தலைமையில் கடந்த 2 நாட்களாக அந்த ஊரில் மருத்துவ முகாம் நடந்து வருகிறது. மேலும் அதே பகுதியில் உள்ள காவிரி குடிநீர் தொட்டியில் இருந்து தண்ணீர் வழங்க அதிகாரிகள் ஆய்வு செய்துள்ளனர். இந்த நிலையில் அங்குள்ள சிலர் கூறும் போது, தண்ணீர் தொட்டி சரிவர சுத்தம் செய்யாததால் தேங்கிய பாசி கரைந்து குழாய்களில் வந்திருக்கலாம். மேலும் இந்த ஒரே தொட்டியில் இருந்தே அனைத்து சமூதாயத்தவர்களுக்கும் தண்ணீர் போவதால் வேறு கழிவுகளை கலந்திருக்க அச்சப்படுவார்கள். ஆய்வு முடிவுகள் வந்த பிறகே உண்மை நிலை தெரியும். அதற்குள் யாரும் சமுதாய ரீதியாக அணுக வேண்டாம் என்கின்றனர்.

Sangamviduthi drinking water tank issue officials investigation

தண்ணீர் தொட்டியை ஆய்வு செய்த டிடி நமச்சிவாயம்.. கழிவு இருந்ததாக மக்கள் சொன்னார்கள் கழிவுகள், தண்ணீர் ஆய்விற்கு போய் உள்ளது. ஏதேனும் கலந்த தண்ணீரை குடித்திருந்தால் வாந்தி, வயிற்றுப்போக்கு வந்திருக்கும். இதுவரை இந்த கிராமத்தில் அப்படி எந்த பாதிப்பும் இல்லை. மேலும் தண்ணீர் தொட்டியில் மீண்டும் சுத்தம் செய்து தண்ணீர் ஏற்றி குளோரின் செய்யப்பட்டுள்ளது. அதை ஆய்வு செய்யும் போது கலப்படம் இருந்தால் தெரியும். இரண்டு நாள் மருத்துவ முகாமில் நேற்று 40 பேரும் இன்று 12 பேருமே வந்துள்ளனர். அவர்களும் சாதாரணமாக வந்தவர்கள் தான். தொடர்ந்து ஆய்வுகள் நடக்கிறது என்றார். இந்த நிலையில் போலீசார் வஜ்ரா வாகனத்துடன் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.