Kerala medical waste dumped in Tamil Nadu

தமிழகத்தில், குறிப்பாகத் திருநெல்வேலி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் இருந்து கேரள மாநிலத்திற்குக் காய்கறிகள், பால் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் மற்றும் கனிம வளங்கள் லாரிகளில் அனுப்பப்படுகின்றன. அதன் பின்னர் கேரளாவில் இருந்து திரும்பி வரும் லாரிகளில் கோழி இறைச்சி கழிவுகள், மருத்துவ கழிவுகள் போன்றவை மூட்டை மூட்டையாகத் தமிழகத்தில் கொட்டப்படும் சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

Advertisment

இந்நிலையில் தான் திருநெல்வேலி மாவட்டம் சீதப்பன்நல்லூர் அருகே உள்ள நடுக்கல்லூர், பலவூர் உள்ளிட்ட இடங்களில் உள்ள அரசுக்குச் சொந்தமான புறம்போக்கு நிலங்களில் கடந்த 2 தினங்களாக மூட்டை மூட்டையாகக் கேரளா மாநிலத்தைச் சேர்ந்த மருத்துவக் கழிவுகள் கொட்டப்பட்டுள்ளன. அதாவது திருவனந்தபுரம் மண்டல புற்றுநோய் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையின் மருத்துவக் கழிவுகள் அதிகப்படியாகக் கொட்டப்பட்டுள்ளது கண்டறியப்பட்டுள்ளது. இந்த மருத்துவக் கழிவில் மருத்துவமனையின் அனுமதிச் சீட்டுகள், ரத்தக் கசிவுகள், பஞ்சுகள் மற்றும் குளுக்கோஸ் பாட்டில்கள் பல்வேறு வகையான பொருட்கள் கழிவுகளாகக் கொட்டப்பட்டுள்ளன.

Advertisment

இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வருவாய்த்துறை உள்ளிட்ட அரசு அதிகாரிகள் இது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே சமயம் அப்பகுதி மக்கள், ‘தமிழக - கேரள எல்லையில் வாகன சோதனையை அதிகரிக்க வேண்டும். ஏற்கனவே இங்கு கொட்டப்பட்டுள்ள மருத்துவ கழிவுகளை அகற்ற வேண்டும்’ என்று அப்பகுதி மக்கள் அரசுக்குக் கோரிக்கை வைத்துள்ளனர். கேரளாவைச் மருத்துவக் கழிவுகள் திருநெல்வேலி பகுதியில் கொட்டப்பட்ட சம்பவம் மக்கள் மத்தியில் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.