Skip to main content

மூன்று குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து இறந்துபோனதை உறுதி செய்தபிறகு தற்கொலை செய்துகொண்ட தாய்!

Published on 10/11/2020 | Edited on 10/11/2020

 

ddd

 

 

குடும்பத்தகராறு காரணமாக மூன்று மகன்களுக்கு விஷம் கொடுத்து கொன்றுவிட்டு தாய் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

 

கேரள மாநிலம் மலப்புரம் அருகே உள்ள வழிக்கடவு புதுக்கல் பகுதியை சேர்ந்தவர் 42 வயதான ராமன். இவருக்கு ரகனா (வயது 33) என்ற மனைவியும், ஆதித்யன் (13), அர்ஜூன் (11), ஆனந்த் (8) ஆகிய மூன்று மகன்களும் இருந்தனர். ராமன் - ரகனா தம்பதிகளுக்கு திருமணம் முடிந்து 14 ஆண்டுகள் ஆகிறது. ராமன் கோழிக்கோட்டில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தநிலையில் கடந்த 7ஆம் தேதி மாலையிலும் கணவன்-மனைவி இடையே தகராறு ஏற்பட்டது. பின்னர் ராமன் மாலையில் வேலைக்காக சென்றுவிட்டார்.

 

அன்றைய தினம் ரகனா இரவில் படுக்க செல்லும்போது தனது 3 மகன்களுக்கும் விஷத்தை கொடுத்திருக்கிறார். அதை குடித்த 3 பேரும் சிறிது நேரத்திலேயே வாயில் நுரை தள்ளியபடி மயங்கினர். பிறகு அவர்கள் இறந்துபோனதை உறுதி செய்த பிறகு மற்றொரு அறைக்கு சென்ற ரகனா கதவை சாத்திவிட்டு அங்கிருந்த மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். 

 

மறுநாள் பகல் 12 மணி ஆகியும் அவர்கள் வீட்டின் கதவு திறக்கவில்லை. இதனால் அக்கம்பக்கத்தினர் சந்தேகம் அடைந்து ரகனாவின் உறவினருக்கு தகவல் கொடுத்தனர். அவர் அங்கு வந்து கதவை தட்டினார். பலமுறை தட்டியும் கதவு திறக்கப்படவில்லை. கதவை உடைந்து உள்ளே சென்றபோது, ஒரு அறையில் ஆதித்யன், அர்ஜூன், ஆனந்த் ஆகியோர் பிணமாக கிடந்ததையும், மற்றொரு அறையில் ரகனா தூக்கில் தொங்கியபடி பிணமாக கிடந்ததையும் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

 

இதுகுறித்து உடனடியாக வழிக்கடவு போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் கிடைத்த போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். இதேபோல் இந்த சம்பவம் குறித்து தகவல் கிடைத்ததும் கோழிக்கோட்டில் இருந்து ராமன் விரைந்து வந்து மனைவி மற்றும் குழந்தைகளின் உடல்களை பார்த்து கதறி அழுதார். 

 

ரகனா உள்பட 4 பேரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மலப்புரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருவதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ரகனா தூக்கில் தொங்கிய அறையில் ஒரு கடிதமும் கைப்பற்றப்பட்டது. அதில் என்ன எழுதப்பட்டு இருந்தது என்பது தெரியவில்லை என்கிறனர் சம்பவ இடத்தில் இருந்தவர்கள்.

 

 

சார்ந்த செய்திகள்