Skip to main content

கேரளா அரசு எப்போதும் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை மதித்ததில்லை.. விவசாயிகள் குமுறல்

Published on 29/10/2021 | Edited on 29/10/2021

 

The Kerala government has never respected the verdict of the Supreme Court

 

தேனி, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம், மதுரை உள்பட 5 மாவட்ட விவசாயிகளின் நீர் ஆதாரமாக முல்லை பெரியார் அணை உள்ளது. 152 உயரமுள்ள இந்த அணையில், 1979ஆம் ஆண்டு கேரள அரசு 136 அடியாக நீர் தேக அளவை குறைத்தது. அதனைத் தொடர்ந்து தமிழக அரசு தொடர்ந்து சட்டப் போராட்டங்கள் நடத்தி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இதனையடுத்து, பல்வேறு நிபுணர்கள் குழு பாதுகாப்பு குறித்து ஆய்வு செய்து கடந்த 2014ஆம் ஆண்டு 142 அடி வரை தண்ணீரை தேக்க அனுமதி அளித்தது. மேலும் பேபி அணையைப் பலப்படுத்திய பின் 152 அடி வரை தண்ணீர் தேக்கிக் கொள்ளலாம் எனவும் அறிவுறுத்தியது. மேலும் அணை பாதுகாப்பு குறித்து ஆய்வு செய்ய மூன்று பேர் கொண்ட குழுவும் அவர்களுக்கு உதவ ஒரு துணை குழுவும் அமைக்கப்பட்டது. உச்சநீதி மன்ற தீர்ப்புக்கு பிறகு கடந்த 2014, 2015, 2018 ஆகிய மூன்று ஆண்டுகளில் அணையின் நீர்மட்டம் 142 வரை தேக்கப்பட்டது.

 

தற்போது, கேரளாவிலும் முல்லைப் பெரியாறு அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளிலும் தொடர் மழை பெய்து வருவதால் இந்த ஆண்டு மீண்டும் 142 அடி வரை தேக்கப்படும் என தமிழக விவசாயிகள் எதிர்பார்த்து இருந்தனர். ஆனால் கேரள அரசு தொடர்ந்து அணை பாதுகாப்பு குறித்து பல்வேறு சர்ச்சை கருத்துக்களை தெரிவித்து உச்ச நீதிமன்றத்திலும் வழக்குத் தொடர்ந்தது. இந்த வழக்கில் நேற்று தீர்ப்பளித்த நீதிமன்றம், தொடர் மழை பெய்து வருவதால் அடுத்த மாதம் 10ஆம் தேதி வரை 139 புள்ளி 50 அடி வரை தண்ணீர் தேக்கிக் கொள்ளலாம் என்றும், அதற்குப் பிறகு 142 அடியாக ஏற்றுக் கொள்வதில் தடையில்லை எனவும் உத்தரவிட்டது. 

 

இந்த நிலையில், உச்ச நீதிமன்றம் அறிவித்திருந்ததையும் மீறி முல்லைப் பெரியாறு அணைக்கு கேரளா நீர்ப்பாசனத்துறை அமைச்சர் ரோஸி அகஸ்டின், இடுக்கி மாவட்ட கலெக்டர் சிபாஜார்ஜ், பீர்மேடு எம்.எல்.ஏ. வாலூர் சசோமன் மற்றும் அம்மாநில நீர்வளத்துறை அதிகாரிகள் பார்வையிட்டனர். வனத்துறைக்கு சொந்தமான படகில் சென்று அணையின் பகுதிகளை பார்வையிட்டு கேரள போலீசாரிடம் விவரங்களை கேட்டறிந்தனர். அதன்பிறகு கேரள மாநில அரசு அதிகாரிகள் பங்கேற்ற கூட்டம் நடைபெற்றது. அதில் முல்லைப்பெரியாறு அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. அதன்படி இன்று காலை 7 மணி அளவில் அணைப் பகுதிக்கு வந்த அமைச்சர் ரோஸி அகஸ்டின் மற்றும் அம்மாநில அதிகாரிகள் பெரியாறு அணையில் 3 மற்றும் 4வது மதகைத் திறந்து தண்ணீரை உபரியாக வெளியேற்றினர். மொத்தம் உள்ள 13 மதகுகளில் இரண்டு மதகுகள் வழியாக வினாடிக்கு 34 கன அடி நீர் திறக்கப்பட்டது. உச்சநீதிமன்றத்தில் 139.50 அடி வரை தேக்கிகொள்ள சம்மதம் தெரிவித்து விட்டு, இன்று காலை 138.70 அடியை எட்டியுள்ள நிலையில் தண்ணீர் திறக்கப்பட்டது கண்டு தமிழக விவசாயிகள் அதிர்ச்சி அடைந்து விட்டனர்.

 

Mullaiperiyaru dam!

 

இது சம்பந்தமாக கம்பம் பள்ளத்தாக்கு விவசாயிகள் சிலரிடம் கேட்டபோது, ‘கேரளா அரசு எப்போதும் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை மதித்ததில்லை என்பதற்கு இச்சம்பவம் மிகச்சிறந்த உதாரணமாக இருக்கிறது. கேரளாவில் உள்ள அனைத்து அரசியல் கட்சியினரும் திரைப்பட நட்சத்திரங்களும் முல்லை பெரியாறு அணைக்கு எதிராக குரல் கொடுத்து வரும் நிலையில், தமிழகத்தில் அதுபோன்ற நிலை இல்லாமல் இருப்பது வருத்தமாக இருக்கிறது. அதோடு, உச்சநீதிமன்ற தீர்ப்பை மதிக்காமல் அணையின் நீரை திறந்துவிட்டது கண்டனத்துக்குரியதாகும். அதனால் வருகிற 1-ஆம் தேதி 5 மாவட்ட விவசாயிகள் சார்பில் மாபெரும் போராட்டம் நடைபெறும். இந்த போராட்டத்திற்கு தமிழகத்தில் ஒட்டுமொத்த விவசாயிகளும் குரல் கொடுக்க வேண்டும்’ என்று கூறினார்கள்.

 

 

 

சார்ந்த செய்திகள்