kumuli

தேனி மாவட்டத்தில் உள்ள கேரளா எல்லையான கூடலூரிலிருந்து குமுளி மழைபகுதி வழியாக கேரளா செல்லும் சாலை உள்ளது.

கடந்த ஒருமாதமாக அப்பகுதியில் தொடர் மழைபெய்து வந்தது. அதனால் கடந்த 15-ந் தேதி குமுளி மலைப்பாதையில் உள்ள இரைச்சல் பாலம் மாதா கோவில் பகுதியில் மண் சரிவு ஏற்பட்டது. இதனால் மண் , பாறைகள் சரிந்து விழுந்ததால் லோயர் கேம்ப்-குமுளி மலைப்பாதையில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.

இதனால் கேரளாவுக்கு குமுளி செல்லும் வாகனங்கள் கம்பம் மெட்டு வழியாக திருப்பி விடப்பட்டன. இதையடுத்து தேசிய நெடுஙசஞ்சாலை துறை அதிகாரிகள் குமுளி மலைப்பாதையில் சரிந்து விழுந்த மண் , பாறைகளை பொக்லைன் எந்திரம் மூலம் அகற்றினர். அத்துடன் மண்சரிவு ஏற்பட்ட இடங்களில் பாறை துகள்களை கொண்ட மணல் மூட்டைகள் அடுக்கி தற்காலிகமாக மலைப்பாதையை சீரமைத்தனர்.

Advertisment

kumuli

அப்படி இருந்தும் கடந்த இரண்டு நாட்களாக கூடலூர், குமுளி மலைப்பகுதியில் மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக நேற்று முன்தினம் மாலை மாதாகோவில் அருகே மீண்டும் மண் சரிவு ஏற்பட்டது. இதனால் ஏற்கனவே வைக்கப்பட்ட மணல் மூட்டைகள் சரிந்து விபத்து ஏற்படும் சூழ்நிலை உருவாகி உள்ளது. இதுகுறித்து தகவல் அறிந்ததும் உதயராணி மற்றும் லோயர்கேம்ப் போலீசார் , வனத்துறையினர் நெடுஞ்சாலைத்துறையினர் மண்சரிவு ஏற்பட்ட இடத்தில் நேரில் வந்து பார்வையிட்டனர்.

பின்னர் மலைப்பாதையை சீரமைப்பது குறித்து உயர் அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர் . இதற்கிடையே குமுளி மலைப்பாதையை சீரமைக்க இரண்டு வாரங்களுக்கு மேல் ஆகும் என்பதால் வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. அதுவரை குமுளி செல்லும் வாகனங்கள் அனைத்தும் கம்பம் மெட்டு வழியாக செல்ல அனுமதிக்கபட்டுள்ளது. அதனால் கேரளாவுக்கு தேயிலை மற்றும் ஏலக்காய் தோட்டங்களுக்கு செல்லும் தமிழக கூலி தொழிலாளர்கள் எல்லாம் இருபது கிலோமீட்டர் சுற்று குமுளி பகுதிக்கு செல்ல வேண்டிய அவலநிலை ஏற்பட்டுள்ளது.